ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

கூடுகள்


கூடுகள்
__________________________________ருத்ரா


குச்சிக்கால் நாரைகளே
வளை மூக்கிகளே
என்ன இங்கே தவம்?
இந்த மனிதர்கள் 
பிறவிகளை உதிர்த்துக்கொண்டு
பிரம்ம உணர்வு என்னும்
மோட்சத்திற்கு
ஏங்குகிறார்கள்.
இதோ அது
உங்களிடம் அல்லவா இருக்கிறது.
அவர்கள்
வர்ணங்களற்ற ஆசிரமத்தை
படைப்பதாய்
பசப்பிக்கொள்கிறார்கள்.
ஆனால்
மனிதம் எனும் ஒரு பிரம்மம்
அவர்கள் அறியாமல் அவர்கள் மேல்
கவிந்து இருப்பதை உணராமல்
மனிதர்களையே
நான்கு வர்ணத்தில் தோலுரித்து
நாராசமாய் நாலு வேதம் சொல்லி
இரைச்சல்களில் 
பிய்த்துக்கொள்கிறார்கள்.
நீள் கழுத்து கொக்குகளே
உங்களில் யார் 
பரத்வாஜர்? 
காஸ்யபர்?
அத்ரி?
வசிஷ்டர்?
அங்கிரஸர்?
ஆனால் 
கோத்ரங்கள் இல்லாமல்
இவர்கள் உச்சரிக்கப்படுவதே இல்லை.
உங்கள் இறக்கைகளுக்குள் 
ஊடுருவிப்பார்த்தாலும் 
கோத்ரங்கள் சாத்திரங்கள் என்னும்
உண்ணிகளும் பூச்சிகளும் 
உண்டா என்ன?
அப்புறம்
அஜாதம் அவர்ணம் அமதம் அவ்யக்தம்
என்று 
அர்த்தமற்ற ஒலிக்கூளங்களில்
பிரம்மத்தை கீறு கீறு என்று
பிறாண்டுகிறார்ககள் இவர்கள்.
இவர்கள் பிரம்மத்தேடலுக்கு
ஓ!கொக்குககளே
உங்களுக்குள் 
கூடு விட்டு கூடு பாய்ந்துகொள்ள‌
முயற்சிக்கலாம்.
அனுமதிக்கவேண்டாம்.
அப்புறம்
உங்கள் அலகு ஒரு சாதி.
கழுத்து ஒரு சாதி.
உடல் கூடு ஒரு சாதி.
அந்தக் குச்சிக்கால்கள்
சூத்திர சாதி.
இறக்கை மூலம் உயரப்பறப்பதில்
அப்போது நீங்கள் பிராமண சாதி
என்று
சாயம் பூசி
அந்த வானம் முழுவதையுமே
அசிங்கம் ஆக்கி விடுவார்கள்.
கவனம் கொள்ளுங்கள் 
"ஃப்ளெமிங்கோ"க்களே.
உங்களை சின்னாபின்னம் செய்து
சாம்பல் ஆக்க‌‌
யாகம் வளர்க்கத்தொடங்கி விடுவார்கள்.
கவனம்.கவனம்.
அதற்குள் எங்கோ
அறிவு வேட்கையின் ஒரு 
துப்பாக்கியின் வேட்டு சத்தம் கேட்டது.
நாரைகள்
சிறகை பரப்பி பரபரப்புடன்
பறந்து போயின.
____________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக