புதன், 10 ஜூன், 2020

முதுமை நிழல்

முதுமை நிழல்
________________________________ருத்ரா


மனிதனின் மடியில் விழும்
நிழல்.
எங்கிருந்தோ ஒரு மரம்.
ஏதோ ஒரு கூன் விழுந்த அதன் கிளை.
அதன் நீண்ட நீண்ட இலைகள்
கோரைப்பற்களாய்
என் மீது கீறின 
ரத்தம் வராமல் நிழல்களாய்!
பழைய வயதுகளின்
பழுப்பு அடைந்த காகிதத்து
நினைவுகள்.
நேற்று நட்ட மைல்கல்லுக்கும்
நாளை நடப்போகும் மைல் கல்லுக்கும்
இடையே
இனி எந்த இடத்தில் 
குழி தோண்டுவது
இன்றைய மைல்கல்லை நட?
நெஞ்சில் அந்த பாறாங்கல்லை
அது தான் தினம் தினம் படிக்கும்
ராமாயணம்..
போட்டு கவிழ்த்துக்கொண்டு
திண்ணையின் கிரில் வழியாய் 
ஒழுகும் 
அந்த டிசைன் நிழலை
விரட்டிப்பிடித்துக்கொண்டு 
ஓடுகிறேன்
அந்த முகடுக்கு.
விழப்போகும் விளிம்புகளே 
என் வேதங்கள்.
அர்த்தமற்ற அர்த்தங்களின்
அந்த கனத்த புத்தகம்
டப் என்று மூடப்பட்டது.
புத்தகத்தின் இடையில்
மாட்டிக்கொண்ட அந்த
மீசை வைத்த 
சிறு வெள்ளி மீன் பூச்சியாய்
.....ஒரு ஃபாசில் ஆகிப்போனேன்.

================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக