புதன், 3 ஜூன், 2020

கலைஞர் வாழ்க!

கலைஞர் வாழ்க!
=======================================ருத்ரா

அந்த இரண்டு மலைப்பிளவிடையே
தமிழின் பிரளயமாய்
நம்மிடையே தினமும்
ஒரு சூரியனாய் 
புன்னகை காட்டுபவர் கலைஞர்.

தமிழ் 
சமஸ்கிருதத்துக்கு
காலணியாகக் கிடந்த‌
ஒரு ஆதிக்க காலனிக்கு
ஆணி அடித்துவிட்டுப்போன‌
அருந்தவப்புதல்வன் அல்லவா
கலைஞர்.

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
எவர் அறிவார்?
ராமனுக்கும் கிருஷ்ணனுக்கும்
ஸ்லோகங்கள் கனகாபிஷேகம் செய்ய‌
அதற்கு கவரி வீசிய 
கைகளாய் தானே
தமிழின் கைகள் கையாலாகாமல் 
கிடந்தன.
அந்தக்கைகளில் புறநானூற்று
வீரவாளைச் செருகியது
கலைஞரின் பேனா அல்லவா.

சங்கத்தமிழுக்குள் ஒரு
சிங்கத்தமிழுண்டு என்று
சீற்றம் காட்டியவர் அல்லவா
கலைஞர்.

நான்குவர்ணத் தீவுக்குள் 
கிடந்த தமிழர்களை
விழிக்கச்செய்து ஒரு
விடியல் தந்தவர் அல்லவா
கலைஞர்.

அந்த தர்ப்பைப்புல்லை வைத்து
தமிழின் கர்ப்பத்தையே 
சிதைக்க வந்த 
அந்த கூச்சல் மொழி மந்திரங்களை
வெறும் கூளமாக்கியர் அல்லவா
கலைஞர்.

இன்றும்
தமிழ்ப்பகை 
தமிழ் இனத்தை 
அழிக்க தந்திரங்கள் செய்வதும்
அதற்கு சில‌
ஜிகினாத்தமிழர்கள் 
தோரணம் கட்டுவதும் ஆன‌
வேதனைகள் நம்முன்னே
அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
அந்த சூழ்ச்சியை முறிக்கும்
அறிவின் ஈட்டியாக‌
நமக்கு முன் 
நின்று கொண்டிருப்பவர் அல்லவா
கலைஞர்.

அவருக்கு
நம் இதயத்தை
நடுகல்லாய் நிறுத்தி
நம் வீரத்தை
பீலி சூட்டி 
வந்தனை செய்வோம் வாருங்கள்.
நிந்தனை செய்யும் 
குள்ளநரிக்கூட்டங்களை
குப்பைகளாக்கி 
வெற்றிகாணும்
ஒரு செம்புயல் என‌
சிலிர்த்து நிற்போம் வாருங்கள்.

கலைஞர் எனும்
இந்த நாலெழுத்து எரிமலைக்குள்
சனாதன ஆதிக்கங்கள்
எரிந்து போகட்டும்.

கலைஞர் எனும் அந்த‌
தமிழ்ச்சுடர் ஏந்துவோம் வாருங்கள்!

=================03.06.2020





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக