திங்கள், 2 அக்டோபர், 2017

"போதும் எழுந்து வா" (நடிகர் திலகம்..நினைவுக்கவிதை)

"போதும் எழுந்து வா" (நடிகர் திலகம்..நினைவுக்கவிதை)

=================================================ருத்ரா

(நடிகர் திலகம் செவேலியர் சிவாஜி கணேசன் அவர்கள்
தமிழகத்தை ஒரு சோகவெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டு
அமரர் ஆகியது குறித்து எழுதிய கவிதை)

நடிப்பின் இமயமே !
இது என்ன நடிப்பு !

"மரணத்தை
இது வரை நான் காட்டியது
வெறும் அபிநயம் தான்.
இதோ
உயிர்த்துடிப்பான
ஒரு மரணத்தைப்பார்"..என
அந்த மரண தேவனுக்கு
நடித்துக்காட்ட..உன்
துடிப்பை நிறுத்தினாயா ?

"கண்ணீர் வெள்ளமாவது பெருகட்டும் "...
இந்த குடிதண்ணீர் பிரச்சினை தீர..
என்று
தலை சாய்ந்து விட்டாயா ?
தென்மேற்கு பருவக்காற்று வீசவில்லை.
வடகிழக்கும்
சென்னையின் வாசலுக்கு
இன்னும் வரவில்லை.


எல்லோரையும்
அலங்காரித்து
ஓய்ந்து போன விருதுகள்
உன்னிடம்
அலங்காரம் பெறுவதற்கு
தயங்கி தயங்கி
வந்தபோது
அவை புரிந்து கொண்டன..
திண்ணைப்பள்ளிகூடங்களையெல்லாம்
தாண்டி
ஒரு பல்கலைக்கழகத்தின்
படியேறிக்கொண்டிருக்கிறோம் என்று.


பிரம்மன் கூட
ஆச்சரியப்பட்டு போனான்.
"இந்த மனிதனை
ஒரு தடவை தானே
படைத்தேன்.
எப்படி
இவன் பல நூறு தடவைக்கும் மேல்
பிறப்பு எடுத்தான் "என்று.
ஆம்
நீ நூற்றுக்கணக்கான
படங்களில் அல்லவா
உயிர் காட்டி இருக்கிறாய்.


நடிப்பு எனும் எல்லைக்கு
எதிரி நீ.
அதனால் வானம் கூட
வெட்கப்பட்டு
உன் மடியில் விழுந்தது.
அந்த பரிமாணத்தை தேடி
எல்லைக்கு
அப்பாலும்..இந்த
'அப்பல்லோவில் '
உன் இறுதிப்படப்பிடிப்பை
வைத்துக்கொண்டாயா ?


'பாசமலரில்'
பிழிந்து காட்டினாயே
ஒரு மரணத்தை..
அப்போது ஏமாந்துபோய்
வீசிய எமனின்
பாசக்கயிறு
இப்போது மீண்டும்
எப்படிவிழுந்தது உன்னிடம் ?


இப்போதும்
அவன் ஏமாந்துதான் போனான்.
இப்போது
நீ நடித்துக்காட்டியது
ஒரு மரணத்தின்
மரணத்தை.

உனக்கு மரணம் இல்லை.
நிஜம் எது ? நிழல் எது ?

"போதும்.எழுந்து வா."

டைரக்டர் 'கட் ' சொல்லிவிட்டார்.

போதும் எழுந்து வா.

இந்த தமிழகம் இனி தாங்காது.

========================================================ருத்ரா

(ஜூலை 22 2001  "திண்ணை" இத‌ழில் ருத்ரா எழுதிய‌து)

2 கருத்துகள்:

koilpillai சொன்னது…

கவிதையினூடே புதைந்திருக்கும் உங்கள் கற்பனை திடத்தையும் வார்த்தை பிரயோகத்தையும் ரசித்தேன்.

"வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது"

கட் சொன்ன டைரடக்டர் யார்?

கோ

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

நன்றி திரு.கோயில்பிள்ளை அவர்களே

நம் சோகத்தின் கனம் அப்படி ஒரு கற்பனை டைரக்டருக்கு ஏங்கியது.
நடிகர் திலகம் இன்னும் இன்னும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கவேண்டும் என்ற ஏக்கமே "அந்த கட் சொன்ன டைரக்டர்".

அன்புடன் ருத்ரா

கருத்துரையிடுக