வெள்ளி, 24 டிசம்பர், 2021

இன்று உதித்தது.

 இன்று உதித்தது

___________________________________________"விடிவானவ‌ன்"



இன்று உதித்தது

ஒரு நற்செய்தி

இரண்டாயிரத்து 

இருபத்தியொன்று சொச்சம்

ஆண்டுகளுக்கு முன்பு

இதே பனித்துளிப்பூக்களுக்கிடையே

மாட்டுக்கொட்டிலில்

மகத்தான நம்பிக்கையை

மனிதனுக்கு ஊட்டுவதற்கு.

மனதுக்குள்

மனிதன் கட்டிவைத்திருந்த‌

"பரமண்டலத்தை"

அன்பின் 

அமைதியின்

இதயவடிவில் 

கையோடு கொண்டு வந்தது போல்

பொன்சுடர் புன்னகை ஏந்தி

வந்தது அந்த பிஞ்சுமுகம்.

துப்பாக்கித்தோட்டாக்களெல்லாம்

தோற்றுப் போகும்படி

அந்த இடங்களில் இனி

பூக்களே வந்து

நிரம்பிக்கொள்ளட்டும்.

மானிட நேயத்து மாணிக்க வருடல்களே

உலகமெலாம் கதிர் வீசட்டும்.

அடக்குவதற்கு வந்த அந்த‌

சிலுவைகள் இனி

சிதிலங்களாய் சிதறுண்டு போகட்டும்.

புதிய சுதந்திரத்தின்

"பிறப்பு" ஒலித்து இசைக்கட்டும்.

இனி

பாவங்களும் இல்லை.

அதன் சம்பளமாக‌

மரணங்களும்  இல்லை.

மனிதன் மரணத்தில் முற்றுப்புள்ளியாக‌

முடிந்து விடுவதற்காக‌

பிறப்பு ஏற்பதில்லை.

மனிதம் அன்பின் ஆற்றோட்டமாய்

என்றும் 

ஓடிக்கொண்டிருக்கவே

இன்றும்

பிறப்பு ஏந்தி நம்மிடையே

முகம் காட்டிச்சொல்கிறது

நற்செய்தியை..

அன்பே எல்லாம்.

அன்பினிலே தான்

எல்லாம் என்று. 

நமக்கு

அதுவே

எல்லாம் இன்பமயம்.

"மெர்ரி கிருஸ்த்மஸ்"


______________________________________

25.12.2021..         00‍.35 A M

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக