ஞாயிறு, 26 டிசம்பர், 2021

தடாகம்

 தடாகம்

____________________________________

ருத்ரா




நான் கடவுள்.

நீ மனிதன்.

உன்னைப்படைத்தவன் நான்.

உன் அறிவு

வெறும் தும்மல் எனக்கு.

கூகுள் என்பாய்.

ஞானங்களையெல்லாம்

சுருட்டிவைத்திருக்கிறேன் என்பாய்.

அது

என் கைரேகைகளின்

கோடி...கோடி..கோடி...

(எத்தனை கோடிகள்

உன் கம்ப்யூட்டர்களின் மூலம்

போட்டுக்கொள்ள முடியுமோ 

போட்டுக்கொள்)

கோடிகளில் ஒரு பங்கு கூட இல்லை.

உன் விஞ்ஞானம்

என் மூக்குப்பொடி டப்பியில்

ஒரு சிட்டிகை கூட இல்லை

அதிலும் நேனோ நேனோ ..நேனோ

துளி தான்.

ஒரு பிரபஞ்சத்தை நீ யோசித்தாலேயே

உனக்கு தலை சுற்றும்

அது போல் "மீண்டும்"

கோடி கோடி ..என்று அடுக்கிக்கொண்டே

போகும் அளவுக்குள்ள‌

பிரபஞ்சங்களைப் பற்றி 

நீ என்ன சொல்கிறாய்?

இப்போதாவது

என் விஸ்வரூபத்தை

உன்னால் பார்க்க முடியுமா

என்று யோசித்தாயா?

. . . . . . . . . . .

. . . . . . . . . .  .

அசையாத நீர்ப்பிம்பத்தை உடைய‌

அந்த தடாகத்தில்

என்னைப்பார்த்து தான்

இவ்வளவும் பிதற்றினேன்....

நான் சவைத்த சூயிங்க் கம்

தடாகத்தில் விழுந்து

வட்டமாய் பெரிய பெரிய வட்டமாய்

பிம்பங்கள் விரிந்தன?

அவ்வளவு பிரம்மாண்ட விடையை

இத்தனை சிறிய கேள்வியா

தெறிக்க விட்டது?

அந்த விஸ்வரூபம்

மனிதனா?

கடவுளா?

கேள்வியை எறிந்ததும் மனிதனே.

விடையை தெறிக்க விட்டதும் மனிதனே.

இதில்

கடவுள் எங்கிருந்து வந்தார்?

மனிதனின் பிம்பம்

கடவுளிடம். 

கடவுளின் பிம்பம் 

மனிதனிடம்.

தடாகமும் அலைகளும்

தம்முள் சொல்லிக்கொண்டன.


____________________________________________

26.12.2015 மீள்பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக