ஞாயிறு, 2 ஜூன், 2019

இளையராஜா அவர்களே

இளையராஜா அவர்களே
============================================ருத்ரா

உங்களுக்கு எங்கள்
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இசைக்கு நீங்கள் ஒரு ஞானி
என்று
இசை ஞானியாக அழைக்கப்படுகிறீர்கள்.
ஆரம்ப காலங்களில்
சமுதாய ஏற்றத்தாழ்வுகளை
எதிர்த்து பாடல்கள்
முழங்கிக்கொண்டிருந்தீர்கள்,
அப்புறம்
சினிமா என்ற மாயைக்குள்
புகுந்தபின்னே
ஞானியாகி விட்டீர்கள்.
அதுவும்
ஜனனி ஜனனி என்று
கண்ணை மூடிக்கொண்டு
உருக்கமாக படத்தொடங்கியதும்
ஞானி என்ற பெயரே
உங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட‌
பெயர் மட்டும் தான் என‌
நினைக்கத்தொடங்கி விட்டீர்கள்.

யாரோ சொன்னது போல்
நீங்கள்
இசைப்பெருங்கடல் தான்.
நானா இசையமைத்தேன்?
நான் எதுவுமே
இசை அமைக்க வில்லை
என்று
ரமண ரிஷி எனும் ஆவிக்குள்
புகுந்து
கோவணம் கட்டாத குறையாய்
தத்துவங்கள் பேச முற்பட்டீர்கள்.

இசைக்கு கால கட்டங்கள் உண்டு.
நீங்கள் இப்போது
ஒரு கால கட்டத்தில் இருக்கிறீர்கள்.

சங்கீத மும்மூர்த்திகள்
தண்பபாணி தேசிகர்
பாபநாசம் சிவம்
ஜி ராமநாதன்
கே வி மகாதேவன்
வெங்கடராமன்
ராஜேஸ்வர ராவ்
மதுரை சோமு
சுந்தராம்பாள்
மெல்லிசை மன்னர்
ஏன் உங்கள் குருவான‌
ஜி கே வெங்கடேஷ்
என்று எத்தனயோ
இசை ஞானிகள்
இசை ஞானிகள் என்ற
பெயர் இல்லாமலேயே
இசைக்கடலைக் கடைந்து
அமுதம் எடுத்து இருக்கிறார்கள்.
இந்தி இசை உலகில்
இதைப்போல் இன்னும்
அற்புதமான பட்டியல் இருக்கிறது.
ஆனால்
நீங்கள் மட்டுமே
அந்த சிவன் மாதிரி
அமுதோடு நஞ்சையும் சேர்த்து
எடுத்தீர்கள்.
அதாவது
அந்த காப்புரிமை பிரச்னைகள் தான்.
இசைக்கடல்
என்னவோ திடீரென்று வற்றி
ஒரு கொட்டாங்கச்சிக்குள்
அடைந்து கொண்டதோ என்று
ரசிகர்கள் சஞ்சலப்பட்டுப் போனார்கள்.
உங்களைப்பார்த்து தான்
இந்தக்குயிலும்
காக்கையும்
மற்றும் ஏப்பமும் இருமலும் செருமலும்
இன்னும் கடல் அலைகளும் கூட‌
தங்கள் காப்புரிமையைப்பற்றி
குரல் கொடுக்க ஆரம்பித்து விடுமோ?
தெரியவில்லை.
கால கட்டங்கள்
உங்களை தாண்டிக்கொண்டு
நகர்ந்து விட்டன.
உங்கள் பக்கம் ஆயிரம் நியாயங்கள்
இருக்கின்றன.
இருப்பினும்
அந்த "இனிய ஒலியின் அதிர்வு எண்கள்"
ஆகாயத்துக்குள் ஆகாயமாக‌
ஆகி விட்ட பிறகு
அந்த "நாதப்பிரம்மத்துக்கு"
இப்படி சன்னல் கதவுகளை சாத்தலாமா?
இந்த மின்காந்தத்தை
உங்கள் மணிப்பர்சுக்குள்
வைத்துக்கொள்வதில்
எங்களுக்கும் மிக மிக சந்தோஷமே.
நீங்கள் ஞானியா? ஞாநியா?
தெரியவில்லை.
ஞாநி ஆகிவிட்டீர்கள் என்றே தெரிகிறது.
அதில் அந்த ஞாநியின்
சமுதாயப்பார்வையின்
சீற்றமும் இருக்குமேயானல்
நீங்கள் இசைஞாநியும் தான்
என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
உங்கள் உரிமைக்குரல் வாழ்க!
உங்கள் உறவுக்குரலும் வாழ்க!
நூற்றண்டு எல்லாம் தாண்டிய‌
இசையின் பெரு யுகமாய்
நீங்கள் நீடூழி நீடூழி வாழ்க!!

=================================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக