ஐயன் வள்ளுவன்
__________________________
தெற்குமுனையில்
எங்கள் அறிவின் கிழக்கு.
சொற்கள் உளிகளாகி
தமிழே சிற்பம் ஆனது.
குறு அடிகளில்
குமுறும் சிந்தனைகள்.
மானிடம் மட்டுமே
மையம் கொண்டது.
பிறப்புகளை
தர்ப்பைப்புல் கொண்டு
தடவிப்பார்க்கும்
மந்திரங்களின் தந்திரம்
தடம் புரண்டது
உன் வரிகளில்.
பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்
என்ற
சிறப்புக்கணித சமன்பாடு
செய்த முதல் விஞ்ஞானி நீ.
வள்ளுவன் தன்னை
உலகினுக்கே தந்து
வாசல் திறந்த
குறட்ப்பாக்களில்
"அணுவைத்துளைத்து
ஏழ் கடலைப் புகட்டி"
அமைத்ததொரு
கல்பாக்கமும்
நீயே தான்.
உன்னை இங்கு
"குறளோவியம்" தீட்டிய
தூரிகையே எங்கள்
தமிழ் முழங்கும்
பேரிகையாம்!
நீ இங்கு கதிர்விரித்தால்
விண்வெளிப்புத்தகமும்
புதிய தோர்ப் பேரொளி
சுடரும்!சுடரும்!!
_____________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக