வெள்ளி, 6 ஏப்ரல், 2018

சுத்தமான அசுத்தங்கள்

சுத்தமான அசுத்தங்கள்
=================================================ருத்ரா

சுத்தம் செய்ய வந்த
உத்தமர் அவர்.
கையில்
துடைப்பம் தானே அது!
துப்பாக்கியா?
புரோஹிதம் செய்பவர்கள் கையில்
புனிதமான‌
தர்ப்பைப்புல் தானே இருக்கும்.
தர்க்கங்கள் எதற்கு?
இனி வடமொழிப்பிரளயம்
எங்கும் எதிலும் தான்.
தமிழின் எலும்புக்கூடுகள்
இனி
பத்திரமாக பாதுகாக்கப்படும்
மியூசியங்களில்..
"இதோ
அடிமைப்பட்டு அழிந்துபோன‌
அடையாளங்கள்!"
என்ற‌
தலைப்பில்.
இன்று "சூரப்பா"தானே என்று
விரல் சூப்பிக்கொண்டிருங்கள்..
சூரசம்ஹாரத்தில்
சூரப்பாக்களே இனி
சுப்பிரமணியன்கள்!
ஓ! தமிழர்களே!
பக்தி பக்தி என்று
பாதம் வீழ்ந்தீர்களே
இப்படி சாம்பலாய்
சம்ஹரிக்கப்படவா
வீழ்ந்து போனீர்கள்?
நம் "அண்ணா பல்கலை கழகம்"
இனி
அண்ணாந்து தான் பார்க்கப்படும்!
பாடங்களுக்கு இனி
வடமொழியே மீடியம்.
சாமியார்கள் அமைச்சர்கள் ஆக்கப்படும்
புண்ணிய பூமி இது!
இங்கேயும் மந்திரிமார்கள்
இனி
உருத்திராட்சங்கள்
உருட்டப்படும் நாள்
வெகுதொலைவில் இல்லை.
உங்களை உல்லாசமாய்
இந்த ரெண்டு மூணு ஆண்டுகளுக்கு
குளிப்பாட்டிக்கொள்ள‌
பலப்பல ஆயிரம் ஆண்டுகளின்
தொல்லிய மாண்பு கொண்ட‌
தமிழை
கருவறுக்கவும் துணிந்துவிட்டீர்களோ?
இந்த தமிழும் தமிழர்களும்
மந்திரிக்கப்பட்டு
மஞ்சள் குங்குமம் வைத்த‌
இந்த ஓட்டுப்பெட்டிக்குள்ளா
சமாதி ஆக்கப்படவேண்டும்?
ஜனநாயகம்
கூச்ச நாச்சமின்றி
சிதைக்கப்படுவது
இந்த சுத்தமான  அசுத்தங்களால் தான்.
சாதி மதங்களின் சல்லிவேர்களில்
ஒட்டுண்ணிகளாய் இருந்து கொண்டு
ஓட்டுவங்கிகள் கட்டிக்கொண்டிருக்கும்
இந்த பேய்த்தனங்கள்
விரட்டியடிக்கப்படவேண்டும்.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே..."
இந்த மதப்போதைகளின் போர்வைகள்
எல்லாம் இனி
சாம்பல் சாம்பல் சாம்பலே தான்!

==================================================








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக