சனி, 14 ஏப்ரல், 2018

கல்லிலிருந்து...

கல்லிலிருந்து...
======================================ருத்ரா இ பரமசிவன்.

மனிதன் கல்லிலிருந்து
நார் உரிக்கும் விளையாட்டை
இன்னும் நிறுத்தவில்லை.
கல்லின் துளியில்
கோடியில் கோடி கோடியில்
ஒரு துளிக்குள்
ஒளிந்திருக்கும்
உட்பொருள் என்ன என்று
உற்றுப்பார்த்துகொண்டு தான்
இருக்கிறான்.
ஞான காண்டம்
கர்ம காண்டம் எல்லாம்
இருக்கட்டும்...
அந்த "குவாண்டம்"
ஒரு திரையை அகற்றி இருக்கிறது.
சக்கரநாற்காலியில் இருந்து கொண்டே
தன் கழுத்து நரம்பு அசைவில்
இந்த விண்வெளியைச்
சுற்றி சுற்றி வந்து
அந்த பரம்பொருளின் சூத்திரம்
சொல்லிவிட்டுப்போய்விட்டானே!
ஸ்டீஃபன் ஹாக்கிங் எனும்
இயற்பியல் கணித முனி!
கருந்துளைக்குள்ளிருந்தும்
கனல் கசிகிறது என்று
எச்சரித்தானே!
"ஹிக்ஸ் போஸான்"எனும்
"பார்முதல் பூதம்"
சும்மா சாதுவாய்த்தான்
நம் கழுத்தில்
வெறும் "மப்ளர்" போல்
சுற்றிக்கொண்டிருக்கிறது.
ஒரு "செப்பு விளையாட்டில்"
நம் அணு உலைக்குள்
அதன் வாலைப்பிடித்து
கொஞ்சம் வருடிக்கொண்டு
விட்டு விட்டோம்.
அதன் முழுச்சீறல் அறிய‌
இந்த பிரபஞ்சத்தையே
உருட்டித்திரட்டினால் தான்
உண்டு.
அப்புறம்
இங்கே எல்லாம் முற்றுப்புள்ளி தான்
என்று சொல்லிவிட்டுப்போய் இருக்கிறான்.
அழிவின் பிம்பம்
எப்படி நமக்கு
ஐந்து தலை நாகமாய் சீறினாலும்
நம் அறிவில்
அதை அடக்கும் மகுடிகள் உண்டு.
அறிவியலின் கூர்மை
எப்போதும் மழுங்கி விடலாகாது.
அதனால் தான்
அந்தக்கல்லோடு இந்த விளையாட்டு.
அந்த எம் தியரி எனும்
"மாஸ்டர் கீ" நம்மிடம் தான் இருக்கிறது.
கல்லின் உருவத்தோடு
தேங்கி நிற்கும்
ஆத்திகத்தின்
நாத்திக விளிம்பில் தான்
நம் நம்பிக்கை சுடர் வீசுகிறது.
தேக்கம் அடைந்த ஞானத்தில்
ஆத்மிக சிறைக்கூடங்கள் மட்டுமே உண்டு.
ஆள் எனும்
மனிதன் என்ற பொருளில்
நம் பிரபஞ்சம்
ஆற்றல் சிறகை விரித்துக்காட்டுகிறது.
அந்த "ஆள்மா" அல்லது ஆத்மா
எனும் "கல்பாக்கங்களை"
"ஆத்மீக"அறியாமையால்
அவித்து விடாதீர்கள்.
வாருங்கள்
இந்தக் கல்லில் நார் உரிக்கும்
விளையாட்டை தொடர்ந்து
விளையாடுவோம்!

========================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக