வியாழன், 19 ஏப்ரல், 2018

அது


அது
=======================================ருத்ரா இ.பரமசிவன்

அதை இன்னமும் தேடுகிறேன்.
அது என்ன என்று
இன்னும் எல்லோரும் தேடுகிறார்கள்.
லட்சக்கணக்கான ஸ்லோகங்களில் எல்லாம்
திரும்ப திரும்ப‌
கொட்டிக்கவிழ்த்து தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
அது எங்கே இருக்கிறது?
என் வயிற்றிலா?
அல்லது சுருட்டி மடக்கி வைத்திருக்கும்
அந்த 22 அடி நீள‌ குடல்களிலா?
அந்த பஞ்சு நுரைப்பூங்காவனமாகிய‌
நுரையீரலிலா?
அல்லது
துடித்து துடித்து நுரை கக்கி ஓடி
வயதுகள் எனும்
மைல்கற்களை நொறுக்கிக்கொண்டு ஓடும்
கையளவு குதிரையான‌
இதயத்திலா?
அந்த டி என் ஏ , ஆர் என் ஏ சங்கிலிகளிலா?
மூளையின்
அந்த மடிப்புகளிலா?
நீயூரான்ககளிலும் சைனாப்டிக் ஜங்க்ஷன்களிலும்
அதனுள் நுணுக்கமாய்
ஜமா பந்தி நடத்திக்கொண்டிருக்கும்
அந்த "பர்கிஞ்சே" செல்களிலும்
என்று
இண்டு இடுக்குகளில் எல்லாம்
அது கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறதே!
அது என்ன?
உடலின் நவத்துவாரங்கள் வழியே
வந்து போகும்
காற்றையும் கூட‌
பதஞ்சலி சூத்திரத்தின் படி
பக்குவப்படுத்திப் பார்த்து விட்டோமே
கையில் கிடைக்கவில்லை அது.
கருத்தில் அகப்படவில்லை அது.
ஆம்
நான் தேடுவது அதோ அந்த...
ஒரு ஒளியாண்டு
அதாவது பத்து ட்ரில்லியன் கி.மீ
கனமுள்ள ஈயக்கட்டியைக்கூட‌
வெகு சுலபமாய் புகுந்து துளைத்து
அந்தப்பக்கம் போய்
இன்னும் பல பில்லியன் மைல்களை
கடந்து போய்க்கொண்டிருக்குமாமே
அந்த‌
"நியூட்ரினோ"வைத்தான்
"ஆத்மா"வை அல்ல!

======================================================
08.10.2015 ல் எழுதியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக