வியாழன், 5 ஏப்ரல், 2018

கமல் அவர்களே!


கமல் அவர்களே!
==========================================ருத்ரா

உங்கள் கவிதை கொப்பளிக்கும்
சொற்கூட்டத்தை கேட்க‌
கூட்டங்களுக்கு பஞ்சமில்லை.
அந்த அலைகள் கூட‌
இடையிடையே ஆர்ப்பரிக்கின்றன.
"நேர் கொள்வோம் ..எதிர் கொள்வோம்"
என்று
ஒரு தொல்காப்பியப்பூங்காவின்
இலக்கண இலக்கியப் பூக்களையெல்லாம்
அள்ளி அள்ளி இறைக்கிறீர்கள்!
அருமைத்தமிழ் கோலோச்சுகிறது!
ஒவ்வொன்றாய்
நீங்கள் பட்டியல் இடுவது
ஒரு ஜனநாயகத்தின் படிக்கட்டுகளை
வெற்றிச்சிகரம் நோக்கி
பயணப்படுத்துகிறது.
திராவிடம் ஒழியாது என்று
குரலெழுப்புகிறீர்கள்.
இவர்கள் ஊழல் நாற்றுகள்
திராவிட வயல்களில் தான்
நடப்பட்டது என்று
தாரை தப்பட்டைகளை முழக்கும்போதும்
திராவிடம் எனும் தமிழின்
பெருங்கனல் உங்களிடம்
ஓங்கி சுடர் பூக்கிறது.
ஊழல் ஒழிக்கப்படவேண்டும்
என்ற கருத்து
ஓங்கி ஒங்கி ஒலிக்கத்தான் வேண்டும்.
சுதந்திரம் பெற்ற உடனேயே
டி.டி.கே யிடமிருந்து ஆரம்பித்த
முந்த்ரா ஊழல் இன்னும்
நம் குப்பைத்தொட்டியில் தான்
பொக்கிஷமாக
பாதுக்காக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஊழல் எனும்
"குருக்ஷேத்திரப்போருக்கு"
கிருஷ்ணர்களும்
பாண்டவர்களும்
அரிஜுனர்களும்
ஆயிரம் ஆயிரமாய்
அவதரித்த போதும்
ஊழலின் "விஸ்வரூபத்தின்" முன்னே
உங்கள் விஸ்வரூபங்கள் எல்லாம் ஜுஜுபி.
அது ஒரு "சமுதாய விஞ்ஞான"மயமானப்போர்.
இந்த கணினி அஸ்திரங்கள்
வெறும் மயிற்பீலி வருடல்கள்.
போகட்டும்!
காவிரிக்கு "மேலாண்மை வாரியம் தான் தீர்வு"
என்று உறுதி பட முழங்கியிருக்கிறீர்கள்.
அதற்காக
மக்கள் சுனாமியாய் பொங்கி எழுவது
உங்கள் முதுகுக்குப்பின்னே நிகழ்ந்த போதும்
நீங்கள் ட்விட்டர்கள் கொண்டு
சொல்லின் அலைகள் எழுப்புவது போதுமா?
உறையிலிருந்து
வாளை உருவுவது போல் உருவி
மீண்டும் உறைக்குள் போய்
அது முடங்குவதற்கா
ஓசை முரசுகள் கொட்டுகின்றீர்கள்?
உலகமே கவனிக்கும்
உலக நாயகன் நீங்கள்.
அந்த மெரீனாவில்
வெறும் சில நாய்கள் படுத்து விளையாடும்
வெறித்த காட்சிகள்
உங்களை வேதனை படச்செய்யவில்லையா?
உங்கள் பேச்சுகள்
மிக மிக நம்பிக்கை ஊட்டுகின்றன.
அது நிச்சயம் காமிராவுக்கு முன் அல்ல.
கடல் போல் மக்கள் உங்கள் முன்!
அலைகளை அணிவகுக்கச்செய்யுங்கள்.
இந்த தமிழ் அலைகள்
மூழ்கடிக்கப்பட உதிக்கவில்லை!

=====================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக