வியாழன், 5 ஏப்ரல், 2018

ஒரு ரோஜாவை நீட்டு

ஒரு ரோஜாவை நீட்டு
============================================ருத்ரா

ஒரு ரோஜாவை நீட்டு
சிங்கம் கூட‌
கோரைப்பற்களில்
ஒரு புன்னகையைக்காட்டும்.
நீல வானப் பந்தலின் கீழ்
என்றைக்கும் எப்போதும்
யாருக்கோ
ஒரு மங்கல விழா நடக்கிறது என்று
கொட்டு முழக்கு.
நாயனம் இசை.
ஒரு அகவற்பா பாடு.
ரகசிய கிடங்குகளில்
மனிதனின் வயிற்றுக்குழிகளுக்காக‌
உயிர்கள் கசாப்பு செய்யப்பட்டு
கொண்டிருக்கலாம்.
திடீரென்று
கடல் புடைத்து எழுந்து
கடலோர மக்களையும் கட்டிடங்களையும்
பலகாரம் பண்ணிக்கொண்டிருக்கலாம்.
விஞ்ஞானிகள்
துல்லியமாய் அந்த நேனொ செகண்டுகளில்
பஞ்சாங்கம் எழுதிக்கொண்டிருக்கலாம்.
அகராதிகளை
மூட்டை கட்டி வைத்துவிட்டு
இஷ்டம் போல்
வார்த்தைகளை வீசியெறிந்து
கழற்சி விளையாடு.
அந்த சொட்டாங்கல் விளையாட்டில்
உன் மொழிகளையும்
கவிதைகளையும்
இலக்கணங்களையும்
தூர எறி.
அப்போது உனக்கு
துன்பம் என்றால்
இன்பம் என்று பொருள்.
ஜனநாயகம் என்றால்
ஹிட்லரிசம் என்று பொருள்.
மனிதர்கள்
கால்நடை மருத்துவமனைகளில் போய்
மருத்துவம் செய்யட்டும்.
நண்டுகளும் நட்டுவாக்காளிகளும்
ஆலயங்களில்
மேடையில் சொற்பொழிவாற்றட்டும்.
குழறல் மொழியில்
வேதங்களும் வியாக்கியானங்களும்
வசனங்களை ஒலிக்கட்டும்.
சோம பானங்களும்
உடைந்து சிதறிய‌
டாஸ்மாக் பாட்டில்களும்
ஜபமாலைகள் உருட்டட்டும்.
சாதிகள் மதங்கள்
தீயின் கொழுந்துகளாய்
அடர்ந்த ஆரண்யங்கள் ஆகட்டும்.
அப்போதும்
உன் நகைமுகத்திலிருந்து
சோகத்தின் சுருக்கங்களை அகற்று.
இது
பரமண்டலத்துப்  பசு பதி பாசம்
நமக்கு அனுப்பியிருக்கிற
ஆறாத புண்களையும் ஆற்றுகின்ற‌
ஆறுமுகக்களிம்பு.

ஒரு தினுசாய் பார்க்கிறீர்கள்.
பாருங்கள்.
வெளியே போர்டு மாட்டியிருக்கிறது.
உலகத்து அத்தனை மொழிகளிலும்.

"இது
கடவுளர்களுக்கான‌
மனநல மருத்துவ மனை"
என்று.

===========================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக