திங்கள், 16 ஏப்ரல், 2018

ரஜனி கமல் சிங்கங்களே!

ரஜனி கமல் சிங்கங்களே!
============================================ருத்ரா

அது என்ன?
நீங்கள் என்ன சொன்னாலும்
சினிமா வசனங்களாய்த்தான்
எங்களுக்கு கேட்கிறது.
காவிரிக்காக‌
தமிழ் நாட்டில் போராட்டக்கடல்
அலையடித்த போது
ஏன்
இன்னும் அந்த "அரிதார"க்கரையிலேயே
நின்று கொண்டிருக்கிறீர்கள்?
அவ்வப்போது
கூட்டங்களை திரட்டி
மனித முகங்களின்
காடுகளாய் படர்ந்து நின்றாலும்
தமிழ் மக்களின்
போராட்ட நரம்போட்டங்களில்
வெறும்
"கிளிசரினை"த் தடவினால்
போதும் என்றா நினைக்கிறீர்கள்?
பொது எதிரி யார் என்று
பிண்டம்பிடித்து காட்டியது போல்
போராடும் மக்கள் திசையை காட்டியபோதும்
தனியே தண்டவாளம் போட
நினைக்கும் "ட்விட்டர்" போராளிகளே.
மக்களுக்குள் ரசிகர்கள் இருக்கலாம்.
ரசிகளுக்குள் மக்கள் இருக்கவேண்டாமா?
சில தமிழருவி மணியன்களோ
இல்லை
சில அப்துல் கலாம் கனவு வாதிகளோ
"தமிழ்நாடு" இல்லை.
உலகமேப்பில்
சஹாரா பாலைவனங்கள் கூட‌
பேரீச்சை வனங்களால் செழிப்படையும்.
ஆனால்
அந்த "சஹாரா பாலைவனத்தை"
நம் காவேரி டெல்டாவில்
பதியமிட
ஒரு கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் கூட‌
ஸ்லோகங்கள் இருக்கலாம் போலிருக்கிறது.
இனி இந்த அச்சமே நம் வீரம்!
கரையில் கையை கட்டிக்கொண்டு நிற்பது
எந்த வகை போராட்டம்?
உங்களுக்கும் பின்னே
"ஆக்சன்" "கட்"
என்ற "கேளா ஒலியின்"
வினோத டெசிபல்கள் ஏதேனும்
வழி நடத்துகின்றனவோ?
எனதருமை தமிழ் மக்களே!
இது வரை உங்கள் கந்தல் வேட்டிகளின்
வழியே வெள்ளித்திரை வெளிச்சம்
பார்த்ததெல்லாம் போதும்.
அதோ
கிழிந்து கிழிந்து வெட்டுகின்ற‌
வானத்தைப்பாருங்கள்.
போராட்ட மின்னல்கள்
உங்கள் அவலங்களையெல்லாம்
அழிக்க ஒளி பாய்ச்சுகிறது.
நீங்கள் "ஒளியேந்திகள்"
வெறும் இருள் பூச்சிகள் அல்ல!

==================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக