ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

ஓலைத்துடிப்புகள்

ஓலைத்துடிப்புகள்
=========================================ருத்ரா இ பரமசிவன்.


"கண்டிகும் அல்லமோ கொண்க‍   நின் கேளே?
தெண்டிரை பாவை வௌவ‌
உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே."
......

கற்பனைநயம் மிக்க வரிகளால் நம்மைக்கவர்ந்த சங்கத்தமிழ்ப்புலவர்  அம்மூவனார் எழுதிய ஐங்குறு நூற்றுப்பாடல் (125) இது. தெள்ளிய திரை என்று பொருள் படும் கடல் அலைகளின் நுண்மையான விளையாட்டு மிகவும் உற்று நோக்கத்தக்கது.அம்மூவன் எழுதிய "தெண்டிரை பாவை" எனும் சொல் கடல் விஞ்ஞானத்தில் அலைகளின் நுணுக்கமான இயக்கங்களை குறிக்கிறது.அதில் கிடைக்கும்"தெள்ளிய மண்ணில்" பாவை செய்து விளையாடும் தலைவியின் பால் மணம் மாறாத மனத்துள்ளும் சுரக்கும் காதலின் பிஞ்சு ஊற்றில் ஒரு பிரளயமே ஒளிந்திருக்கிறது என்பதை காட்டவே நான் இந்த சங்கநடைக் கவிதையை யாத்து உள்ளேன்



(தலைவின் துயரம் கண்டு பொருள் தேடச்சென்ற தலைவனை நோக்கி சொல்லுவது போல் பாடப்பட்ட தோழியின் கூற்று.)

இலஞ்சி பழனத்தவள்
==============================================ருத்ரா இ பரமசிவன்

இலஞ்சி பழனத்தவள் விழிமுன் விரிய‌
முட்சுரம் கற்சுரம் நளி எரி வெங்கடம்
கடாஅய்ச் செல்லும் இருப்பணைத் தோள!
அலைபடு முன்னீர்க் கரையக் கரைபடு
வௌவல் பௌவம் வளை முரல் ஆர்ப்ப‌
அழியுறு நெஞ்சில் அளியை ஆனோய்!
தொண்டிரை தந்த தொண்டி ஊர்பு
தெண்டிரை வண்டல் பாவை அழிய‌
மண்டிரை வெறியாட்டு வெருவி அழூஉம்
அளியள் காண்குவை.விரைதி விரைதி.
குவளையுள் குவளை பல்மழை தூஉய்
மடப்பு மீக்கூர வெண்கணீர் பெய்யும்
ஐது அமை இறையவள் வெஃகிய காட்சி
முதிர் தகையன்று அறிதி அறிதி.
பால் இழி தாமரை காமர் புரையா
ஒண்ணுதலி.மற்று ஏதும் ஓரா மன்னே.
பாவை கையில் மற்றொரு பாவை
படுத்தன்ன கரைவாள் தேற்ற வருதி.
பஞ்சாய்க் கோதை மகள் அல்ல இவளே.

===============================================






பொழிப்புரை
===================================================ருத்ரா

இலஞ்சி பழனத்தவள் விழிமுன் விரிய‌
முட்சுரம் கற்சுரம் நளி எரி வெங்கடம்
கடாஅய்ச் செல்லும் இரும்பணைத் தோள!
அலைபடு முன்னீர்க் கரையக் கரைபடு
வௌவல் பௌவம் வளை முரல் ஆர்ப்ப‌
அழியுறு நெஞ்சில் அளியை ஆனோய்!


உறுதி மிக்க மூங்கில் போன்ற தோள் வலிமை மிக்க தலைவனே!இலஞ்சி எனும் அடர்நிழல் தவளும் நீர்ச்சுனைகள் நிறைந்த ஊரின்
கனிச்சோலைகள் போல் கண்ணேதிரே எழிற்கோலம் காட்டும் உன் காதலியின் முகம் தோன்றும்படி கல்லும் முள்ளும் கலந்து வெம்மை
மிகுந்த காட்டுவழியில் கடந்து  செல்கிறாய்.கடலின் அலைகள் அரித்து அரித்து மண்திட்டாய் நிற்கும் கரை கூட கரைந்து போய்விடுகிறது. நிலப்பகுதியை பறித்துக்கொள்ளும் கடல் சங்குகளின் ஒரு வித ஒலியோடு ஆர்ப்பரிக்கிறது.அது போல் உன் நெஞ்சம் தலைவியை நினைத்து வேதனை உறுகிறது.




தொண்டிரை தந்த தொண்டி ஊர்பு
தெண்டிரை வண்டல் பாவை அழிய‌
மண்டிரை வெறியாட்டு வெருவி அழூஉம்
அளியள் காண்குவை.விரைதி விரைதி.
திணையின் திரிதரு திரள்நெரி மயக்கமனைய‌
நின் ஆறலைக்கண்ணும் ஆழி சூழ்ந்தது.

கடல் அலைகளின் சீற்றம் மிகக்கடுமையானது.தொள் என்றால் குழி பறி என்று பொருள்.அப்படி குழி பறித்த அலைகளே தொண்டி எனும் பட்டினத்தை உருவாக்கும்.தொண்டி எனும் ஊர் அப்படி உருவானதே அங்கே அந்த அலைகள் இன்னும் சில விளையாடல்களைச் செய்கின்றன.ஆழத்திலிருந்து மிகக்குழைவான வண்டல் மண்ணை தெள்ளியெடுத்து கரையில் குவிக்கிறது.தலைவி அதனோடு சிறுபிள்ளை போல் பொம்மை செய்து விளையாடுகிறாள்.ஆனால் அதே அலைகள் சீற்றத்தோடு அப்பொம்மையை பறித்துக்கொண்டு போய்விடுகிறது.மண்திரை அதாவது கரையை மண்கலந்து நீராட்டும் அலைகள் இப்படி வெறியோடு விளையாடுவது கண்டு தலைவி அச்சமுற்று அழுது கலங்குகிறாள்.அவள் பொம்மை அழிந்துபோனது பொறுக்காமல் அழுகிறாள்.இங்கே அது வெறும் பொம்மை அல்ல.உன்னை உன் நினைவைக் கொண்டு புனைந்த வடிவு அது.எனவேவிரைவில் வந்து அவளை தேற்று.கொடிய பாலையின் வழித்தடங்களில் அலையும் உனக்கு இவளது கடற்கரை விளையாட்டு ஒரு திணை மயக்கம் திரண்டு நெரிக்கும் துன்பத்தை கொடுக்கிறது.


குவளையுள் குவளை பல்மழை தூஉய்
மடப்பு மீக்கூர வெண்கணீர் பெய்யும்
ஐது அமை இறையவள் வெஃகிய காட்சி
முதிர் தகையன்று அறிதி அறிதி.
பால் இழி தாமரை காமர் புரையா
ஒண்ணுதலி.மற்று ஏதும் ஓரா மன்னே.
பாவை கையில் மற்றொரு பாவை
படுத்தன்ன கரைவாள் தேற்ற வருதி.
பஞ்சாய்க் கோதை மகள் அல்ல இவளே.


அவள் அழுகையில் கண்ணுக்குள் கண் பூப்பது போல் குவளைக்குள் குவளைகள் குவிந்து அடர்மழையை கண்ணீராய் பொழிகிறது. இன்னும் காதலின் முதிர்ச்சி பெறாமல் மடம் எனும் சிறு பிள்ளைத்தனம் மட்டுமே அந்த வெள்ளைமனத்தில் பொங்கும் வெண் கண்ணீரில் அவள் மூழ்குகின்றாள்.ஐது எனும் மென்மை படர்ந்த அழகிய‌ முன்னங்கைகளை உடைய அவள் வெட்கமுறுவது ஒரு ஒப்பற்ற எழில் மிகு  காட்சி ஆகும்.பால் வழியும் தாமரை முகம் அவளது முகம்.ஆனாலும் காமம் புகாத அந்த பிஞ்சுக்காதலில் ஒளி சுடரும் நெற்றியில் கூர்ந்து  சிந்திப்பதால் ஏற்படும் சுருக்கங்கள் ஏதுமில்லை.இருப்பினும் அவள் ஒரு சிறுமி போல் தான் இருக்கிறாள்.தெரிந்து கொள்.ஒரு மரப்பாய்ச்சியின் கையில் இன்னொரு மரப்பாய்ச்சி போல் இருக்கிறாள். அந்த மண் பொம்மை கரைந்ததற்கு அழுதுகொண்டே இருக்கும் அவளை விரைவாய் வந்து தேற்று.பொம்மைகளோடு ஒன்றிப் போனாலும் இவள் பொம்மை அல்ல.அதுவும் பஞ்சாரை எனும் கோரைப்புல்லைக்கொண்டு கூந்தல் முடித்த பொம்மைப்பெண் அல்ல‌

=======================================================ருத்ரா
12.05.2015 ல் எழுதியது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக