சனி, 28 ஏப்ரல், 2018

ஆனைக்கு அர்ரம்....


ஆனைக்கு அர்ரம்....
============================================ருத்ரா


உஷ்..
மூச்...
சப்தம் காட்டாதீர்கள்.
தீர்ப்பு வந்து விட்டது.
விமரிசனம் செய்வது
தண்டனைக்குரியது.
தீர்ப்பினால்
சில சமயங்களில்
ஆளும் தகுதி இழந்தவர்கள் என‌
நியாயப்படி கருதப்படுகின்றவர்கள்
அந்த முழுக்காலத்தையும்
நியாயத்துக்கு புறம்பாக ஆண்டுவிடுகிறார்களே
அந்த ஜனநாயக அநியாயத்துக்கு
யார் தண்டனை தருவது?
அந்த "ஜனநாயக இழப்புக்கு"
நஷ்ட ஈடு இந்த மக்களுக்கு
யார் தருவது?
அந்த இழப்பீடு எவ்வாறு மதிப்பிடப்படும்?
ஆனைக்கு அர்ரம்
குதிரைக்கு குர்ரம் என்று தான்
சொல்லப்படும் என்றால்
இந்த ஜனநாயக விபத்தில்
மௌனமாக மக்கள்
ஒரு ரத்தச்சேற்றில் அமிழ்ந்து கிடப்பது போன்ற‌
அல்லது இந்த‌
ஜனநாயக "கோமா"வுக்கு
எப்படி இயக்கம் தருவது?
அல்லது
மரச்சுத்தியல் தட்டி
ஒரு கருணைக்கொலைக்கு
சைகை காட்டி விடவேண்டியது தானா?
சொத்துக்குவிப்பில்
தண்டனை பெற வேண்டியவர்
சாவகாசமாய்
மறுபடியும்
ஆயிரக்கணக்கான‌
பக்கங்கள் படிக்கப்பட்டு அல்லது
எழுதப்பட்டு
அவர் தண்டனை தரப்படும்போது
அரசு எந்திரமே
அவர் கைச்சொடுக்கில்
அல்லது
அவர் காலடியில்
வீழ்ந்து கிடக்கும்
போமரேனியன்களாய்
இந்த ஜனநாயகம் ஆகிப்போகின்றதே?
அதற்கு யார் பொறுப்பு?
கேட்டால் ஓட்டுக்களே வலுவானது
என்பார்கள்.
அப்படியென்றால்
அவர் எப்படி ஒரு கிரிமினல் ஆக முடியும்?
உச்சமாய் தீர்ப்பு கொடுத்துவிட்டோம்
அவர் அப்படித்தான் என்றால்
சட்டமன்றம் எனும் ஜனநாயக ஆலயத்தின்
கருவறைக்குள்
அவர் படம் இருப்பதை
என்னவென்று சொல்வது?
நிழல் உலகங்கள் இருப்பதைப்போல‌
நிழல் நியாயங்களும்
கண்ணுக்குத்தெரியாமல்
வித்தை காட்டுகின்றனவோ?
"நீதி தேவன் மயக்கம்" என்றார் அண்ணா!
இங்கே மயக்கங்களுக்கும் குழப்பங்களுக்கும்
அடியில் நசுங்கிக்கிடப்பது தான்
நீதியா?
"ஷரத்துக்களும் உள் ஷரத்துக்களும்" கூட‌
நமக்கு இன்னும் திசை காட்டாத‌
சொற்காடுகள் தான்.

உஷ்..
மூச்...
சப்தம் காட்டாதீர்கள்.
ஆனைக்கு அர்ரம்.
குதிரைக்கு குர்ரம்.

====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக