வியாழன், 6 ஏப்ரல், 2017

ஆர் .கே நகர்

ஆர் .கே  நகர்
=========================================ருத்ரா


ஜனநாயகத்தின்
அவமானச்சின்னமா?
அல்லது
அழிவின் சின்னமா?
இந்த ரெண்டெழுத்து நகர்.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
என்று முழங்கியவர்களின்
மூச்சில்
இந்த மூன்றெழுத்து தான் இருந்ததா?

பணம்...பணம்...பணம்..

இது இன்று அர்த்தப்படுத்தப்படுவதெல்லாம்
ஜனநாயகத்தின்
பிணம்...பிணம்...பிணம்.

தமிழ்நாட்டைப்பார்த்து
மற்றவர்கள் எல்லாம் எள்ளி நகையாடுகிறார்கள்.
ஊழல் பிரச்னைகூட ஒன்றும் இல்லையாம்.
அதில் இந்தியா பூராவுமே நாறினாலும்
இந்த "இனாம்" நாற்றம் சகிக்கவே இல்லை!

எரிமலை போல் சீறிப்பாய்ந்து
நம் சமுதாய இலட்சியங்களை
வார்த்தெடுக்க வேண்டியவர்கள்
ஏன் இன்று இப்படி
பிச்சை எடுப்பவர்கள் போல்
கை பிசைந்து நிற்கிறார்கள்?

"எப்படியாவது வெல்வோம்"
என்று
கொள்ளிவாய்ப்பிசாசுகள்
வாக்குகளுக்கு
கோரமாய் வாய் பிளந்து நிற்பது
தெரிகிறது!
லஞ்சப்பணமாய்
லட்சங்களின்  கோடிகள்
சிதைகளை அடுக்குகின்றன.
ஒரு சில கோடிகளே போதும்
தேர்தல் நியாயங்களை
தீயிட்டுப்பொசுக்க!
வாக்கு நேர்மையும்
ஆட்சி நேர்மையும்
சாம்பலாய் போக!

ஊழித்தீ எனும் நெருப்பை
வாக்குகளாய் கையில் வைத்திருப்பவர்களே
கேவலம் பீடி நெருப்புக்கா
இப்படி பிச்சை எடுப்பது?

அன்று மெரீனாவில்
கருவுற்ற மக்களின் "லாவா"
இந்தப் பேய்களின் எச்சில்களிலா
நீர்த்துப்போவது ?

சிந்திக்க வேண்டும் தமிழா
நீ சிந்திக்க வேண்டும்.
குத்தாட்டம் போடும் சினிமாக்களைத்
தின்று நீ
வெறும் நிழல்களின்
கந்தல் உருவங்களாய்
கரைந்து போகலாமா? தமிழா!
சிந்திக்க வேண்டும் நீ.
யாரோ ஒரு ராமனுக்கு
குரங்காட்டம் போடவா நீ பிறந்தாய்!
உன் வரலாறு திருடப்படும்
திருவிழா இரைச்சல்களை விட்டு நீ
மீண்டு நீ வரவேண்டும்..தமிழா
மீண்டு நீ வரவேண்டும்!

=================================================












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக