ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

புதிய இமயம்.




புதிய இமயம்.
====================================================ருத்ரா

மக்களே
உங்களுக்கு என்ன வேண்டும்?
அவர்களுக்கு
உங்கள் வாக்கு வேண்டும்?

உங்கள் கோரிக்கைகளை
அவர்களே
குவிக்கத்தொடங்கி விட்டார்கள்.

உங்கள் தேவைகளும் ஒலிக்கின்றன.
ஆனால்
உங்கள்தமிழின்
ஊற்றுக்கண்ணிலிருந்து வழியும்
கண்ணீரின் ஒலிப்புகள்
உங்களுக்கு கேட்பதே இல்லை.
உங்கள் குழந்தைகள்
"ஷா ஜா ட்ரிக்ஷயா " என்றெல்லாம்
அழைக்கப்படுவதில் தான்
உங்களுக்கு இன்பம்  எனும்
ஒரு விநோத "டாஸ்மாக்" காடுகளில்
ஆழ்ந்து கிடக்கிறீர்கள்.

உங்களுக்கு தெரியுமா?
கண்ணுக்குத் தெரியாத ஒரு ஆதிக்கத்தை
பொடி  பொடியாக்கும் வலிமை
தமிழின் கூர்மைக்கு இருக்கிறது!
அதை இந்த இலவசங்களிலா
நீங்கள் மழுங்கடித்துக் கொள்வது?

ஓட்டு வலிமை
உங்கள் தமிழில் தான் இருக்கிறது.
ஆனால் நீங்களோ
ஏதோ ஒரு அர்ச்சனை மொழிகளில்
புதைந்து கிடக்கிறீர்கள்.
உங்கள்  தூக்கம் கலையாத வரை
இந்த ஓட்டு விளையாட்டில்
விடியல் என்பது பூட்டிதான்  கிடக்கிறது
என்பது மட்டும் அல்ல
உங்கள் வானமும் கூட
முழுதுமாய் தொலைந்து  போய்விடலாம்!

திராவிடம் என்பது
விளம்பரம் அல்ல.
ஊழல் அல்ல.
பண மூட்டைகளை அண்டை கொடுத்து
நிறுத்தப்பட்ட
உயரமான ஒரு நாற்காலியும் அல்ல.
நம் தொல் தமிழின் மூச்சுக்காற்று.
மேற்கத்திய கணவாய்களின்
வழியே வந்த பொய்மைகளின்
ஊளைச் சத்தங்களை அடக்கும்
நெருப்புக்குரலின்
தமிழ் அலைகள் !

முகம் தெரியாத
ஒரு தமிழின் குரல்
ஒரு சமுதாய எழுச்சியின் குரல்
ஒரு இளைய தலைமுறையின் குரல்
இந்த ஆர்.கே நகரில்
வெல்லும் ஆனால்
அப்போது தான் தமிழும்
நம்  குமரி விளிம்பில்
ஒரு புதிய இமயமாய் நிமிர்ந்து நிற்கும்!

============================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக