புதன், 26 ஏப்ரல், 2017

ஓடி வருவது யார்?

ஓடி வருவது யார்?
=============================ருத்ரா

கட உள்.
கடந்து உள்ளே செல்.
இந்த முகமூடிகளையும் கூச்சல்களையும்
கழற்றி வைத்து விட்டு செல்.
அறிவு வெளிச்சம் நோக்கி செல்லுவதற்கும்
ஒரு சிறு வெளிச்சம் வேண்டும்.
தீக்குச்சி கிழித்து
இந்த இருட்டுத்திரை கிழித்தால்
சூரியனையும் நீ கைகுலுக்கும்
ஒளிப்பிழம்பு உன்னிடம் இருப்பதை
நீ அறிவாய்.
அந்த கீற்று வெளிச்சம் உன்
அறிவுத்தேடல் மட்டுமே!
கடவுள் என்றொரு
கனமான முற்றுப்புள்ளியை
உன் முதுகில் சுமந்து கொண்டபிறகு
எதைத்தேடி உன் பயணம்?
உன் கடவு சொல் சாவி கொண்டு
இந்த கடவுளைத்திறக்க
மதத்தையா நீ கையில் எடுப்பது?
மதாமதம் என்று ஸ்லோகம் சொல்கிறது.
மதத்தை மதமற்றதாக ஆக்கும் அறிவே
சிறந்த அறிவு.
கடந்து உள் செல்.
அது குகை அல்ல.
எல்லைகள் உடைந்த அறிவு வெளி அது.
வெளியே போவதைத்தான்
உள்ளே செல் என்கிறோம்.
அதுவே
கட உள் !
நாம ரூப வர்ணங்களால்
எச்சில் படுத்தாதே!
கடவுளை மறுக்கும்
ஒரு விஞ்ஞானம் கொண்டு
கடவுளை நீ கண்டுபிடித்தால் கூட‌ போதும்
அதை அப்படியே வாங்கி அறிந்து கொள்ள‌
உன் பின்னே
ஓடி ஓடி வருவது யார்?
கடவுளே தான்.

====================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக