வியாழன், 4 டிசம்பர், 2025

கவிச்சிகரம் வண்ணதாசன் அவர்களே


கவிச்சிகரம் வண்ணதாசன் அவர்களே

________________________________________

சொற்கீரன்


சொற்களைக்கூட அப்படி பச்சையாக 

வெண்டைக்காயை

நறுக்கு முறுக்கு என்று தின்பது போல் காட்டி

பரிமாறுவது எத்தகைய இலக்கியச்செழுமை?

கூழாங்கற்கள் போல இருக்கவேண்டும்

என்று உங்கள் தந்தை கூறியதை அப்படியே

சொற்களைக்கொண்டு "அடவுகள்"காட்டுவது

இன்னும் அருமை.

மழைகுமிழ்களோடேயே ஊர்ந்து ஊர்ந்து

செல்லவேண்டும்

என்று உங்கள் கவிதை அத்தனை அழகாக‌

அடம்பிடிக்கிறது.

எல்லாற்றுக்கும் மேல் நுனிக்கொம்பர் ஏறி

அஃதிறந்து ஊக்கி வான விளிம்பையும் 

நக்கிப்பார்த்து விடவேண்டும்

என்ற சொல்லின் அடங்காத தாகம் 

கடைசி வரிகளில் கொப்பளிக்கிறது.

மரணத்தின் அக்கினி நாக்கில் அந்த‌

நரம்பு மின்சாரத்தை ஸ்பர்சித்து விட ...

மழைத்தொப்பலின் அந்த ஈரச்சிதையில்

நெருப்பைப்போல் கொழுந்து விடுகிறீர்கள்

மழைக்கீற்றுகளில்!

கவிதையை ஒரு கவிதை

வாழ்ந்துபார்த்துக்கொண்டே செத்தும் 

பார்க்கவேண்டும் என்ற 

"இலக்கியச்சவ்வூடு பரவல்" அது!

___சொற்கீரன்___






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக