என் சன்னலுக்குள்
எட்டிப்பார்ப்பவர்கள் யாரும் இல்லை.
அவ்வப்போது வரும்
அந்த சிட்டுக்குருவியைத்தவிர.
நீளமான அந்த
சூரியனின் நிழலைத்தவிர.
சரக்கென்று
காகிதம் கிழிபடும் ஓசை
எங்கிருந்தோ கேட்கிறது.
அதைப்போய் நான் கேட்கவேண்டும்
இது எத்தனையாவது நாள்
என்று.
அன்று அந்த தயிர்க்காரி
அந்த திண்ணை ஒட்டுச்சுவரில்
கொஞ்சம் தயிரை சிரட்டையில் எடுத்து
தேய்த்து சாந்து தயார் செய்து
பொட்டு வைத்துவிட்டுப்போவாள்.
தயிர் விற்றக்கணக்கு.
இந்த உயிர்ச்சொட்டுகளுக்கும்
சேர்த்துத்தான் அந்த கணக்கு.
வயதுகளோடு
பல்லாங்குழி விளையாடிக்கொண்டிருப்பதே
வாழ்க்கை
என்று
அந்த சன்னல் சொல்கிறது.
______________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக