சனி, 12 டிசம்பர், 2020

தீவு

 தீவு

‍‍‍_________________________________ருத்ரா


தமிழர்களே!

நீங்கள் இருப்பது

சினிமா பிம்பங்களால்

கட்டப்பட்ட  

தனித்த ஒரு தீவு.

பொன்னுலகம் காட்டுவேன்

என்று

விரல் முத்திரை ஒன்று

உங்களுக்கு

"சூ மந்திரக்காளி" காட்டுகிறது.

இமயமலையே நான் அடிக்கடி

செல்லும் என் வீட்டுப்புழக்கடை

என்று பெருமிதம் கொள்கிறது.

பொய்மை எனும் காற்றடைத்த பலூனை

ஆத்மீக அரசியல் என்று

தோரணங்கள் கட்டி உங்களை

அழைக்கின்றது.

ஊழலை ஒழிப்பதே

என் லட்சியம் என்று

கைகள் ஆவேசமாய் அசைகின்றன.

ஆனால்

தங்கள் மண்டபத்துச் சொத்துவரியை

கட்டமறுத்த போது

நீதி மன்றம்  

அந்த பிடிவாதத்தின் முகத்தில் 

கரி பூசிய‌

அந்த நாற்றம் இன்னும் அகலவில்லை.

உற்றுக்கவனியுங்கள் 

அன்பான தமிழர்களே!

உங்கள் தீவு மெல்ல அசைவது தெரிகிறதா?

அட்டை ராஜ்யம் தள்ளாடுவது 

இன்னுமா தெரியவில்லை?

ஆம்..

விசில் ஒலிகளால் காதுகள் கிழியும்

உங்கள் தீவு..

தீவு அல்ல.

உங்களை மூழ்கடிக்கும்

ஒரு திமிங்கிலத்தின் முதுகு அது?

மதவெறிக்கடலில் திளைத்துக்கிடக்கும்

அதன் திறந்த வாய்களில்

உங்கள் 

விடிவு இல்லை

முடிவு மட்டுமே நிச்சயம்.

ஓ! தமிழர்களே

நீங்கள் 

விழுங்கப்படும் முன்

விழித்துக்கொள்ளுங்கள்!


_______________________________________











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக