சனி, 14 ஜூலை, 2018

இது சொற்பொழிவு அல்ல‌

இது சொற்பொழிவு அல்ல‌
==================================================ருத்ரா இ பரமசிவன்

சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்கும் பிள்ளையிடம்
தாயின் அன்பு பல தந்திரங்களை கையாளச்சொல்லும்.
"பூச்சாண்டியிடம் பிடிச்சுக்குடுத்திடுவேன்
ஏ பூதம் ..இங்க வர்ரயா ..வேண்டாம் வேண்டாம்.
இவன் சாப்பிட்டுருவான் நீ போ..
பூதம் போய்ட்டான்..நீ சாப்பிடு..
சாப்பிட்டேனா அந்த நிலாவெ புடிச்சு தாரேன்.
உனக்கு வேண்டாமா
அந்த நாய் வருது பாரு..அதுக்கு குடுத்துருவேன்...

தாயின் அன்பு பிள்ளையின் பசியை போக்க
இப்படி ஆரம்பித்த போதும்
குழந்தையின் இயற்கையான ஞானத்தின் மீது
அவளது செயற்கையான அம்புகளே பாய்கின்றன.

அன்ர்ஜுனன் மீதும்
கிருஷ்ணர்
இந்த அம்பு மழையைத்தான் பொழிந்தார்.


அர்ஜுனன் இப்படித்தான்
அடம்பிடித்தான் போர்க்களத்தில்.
கிருஷ்ணர் கையாண்ட தந்திரங்கள்
எல்லாம் சமஸ்கிருத பாஷையில் இருந்தாலும்
மேலே சொன்னதைப்போன்றவை தான்.

சாங்கிய யோகம்
கர்ம..ஞான..சன்யாஸயோகங்கள்
விஞ்ஞான ஞான யோகங்கள்
அக்ஷர பிரம்ம யோகம்
ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்
விபூதியோகம்
க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ யோகம்
குணத்ரய...ச்ரத்தா த்ரய விபாக யோகங்கள்
தேவாசுர சம்பத் விபாக யோகம்
விஸ்வரூப தரிஸன யோகம்.
பக்தி யோகம்
புருஷோத்தம யோகம்
மோக்ஷ ஸன்யாஸ யோகம்

பாருங்கள் ஆச்சரியமாக இல்லையா?
கொலைகள் மிகுந்த அந்த கொல்லம்பட்டறையில்
இந்த ஈக்களுக்கு (யோகங்களுக்கு) என்ன வேலை?

யுத்தம் வேண்டாம் என்பதற்கு
"அமைதியை"ப்பாடும்
இனிய ரீங்காரங்களான‌
இந்த தேனீக்களை (அதே யோகங்கள்)
ரத்தத்தில் மொய்க்கும்
நாற்றம் பிடித்த ஈக்களாக மாற்றும்
ரசவாதமே இந்த வாதங்கள்.

இப்படி போர்க்களத்தில்
ஞான வேள்விக்கு அவசியம் என்ன?
அதற்கு
அர்ஜுனன் துவக்கிய வினாக்கள் மூலம்
கிருஷ்ணர்
கதி கலங்கி போனது தான் காரணம்.
அது விஷாத யோகம் எனப்படுகிறது.

குறி வைத்து அடிப்பதில் மன்னன் அல்லவா
அர்ஜுனன்.
வேதஞானத்தை வைத்தே
பிரம்மத்தின் மீது
பிர்ம்மத்தின் மர்மஸ்தானத்தின் மீதே
குறிவைத்து அடித்து விட்டான்.
அதில் வெல வெலத்ததன் விளைவே
கிருஷ்ணர் இத்தனை யோகங்களை
கொட்டிக்கவிழ்க்க வேண்டியிருக்கிறது.
பதிலுக்கு
அர்ஜுனனின் மீதும்
அதே பாணியில்
குறிவைத்து அடிக்கிறார் கிருஷ்ணர்.


//2. குதஸ்த்வா கஸ்மலமிதம் விஷமே ஸமுபஸ்திதம்
அநார்யஜுஷ்டமஸ்வர்க்யமகீர்திகரமர்ஜுந

ஸ்ரீ பகவான் உவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான் அர்ஜுந!-அர்ஜுனா

விஷமே-தகாத சமயத்தில் குத த்வா இதம் கஸ்மலம் ஸமுபஸ்திதம்-எங்கிருந்து

உன்னை இந்த உள்ளச் சோர்வு அடைந்தது அநார்யஜுஷ்டம்-ஆரியருக்கு

தகாதது அஸ்வர்க்யம்-வானுலகை தடுப்பது அகீர்திகரம்-புகழையும் தராதது

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச்

சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத்

தடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா!

3. க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத்த்வய்யுபபத்யதே
ஷூத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் த்யக்த்வோத்திஷ்ட பரந்தப

பொருள் : பார்த்தா பேடித்தன்மையடையாதே! இது நினக்குப் பொருந்தாது.

இழிபட்ட மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்; பகைவரைச் சுடுவோனே!

ஆண்மையை இழந்து பேதைபோன்று நடந்துகொள்பவன் அலி ஆகின்றான்.

அர்ஜுனன் பெற்றுள்ள பண்பும் பயிற்சியும் அத்தகையவைகளல்ல. அவன்

உண்மையில் எதிரிகளைப் பறந்தோடச் செய்பவன். மகாதேவனோடு போர்

புரிந்த அர்ஜுனனுக்கும் மனத்தளர்ச்சிக்கும் வெகு தூரம். தற்காலிகமாக

வந்துள்ள தளர்ச்சியை இழித்துப் பேச அதை அடியோடு அப்புறப்படுத்தும்படி

பகவான் தூண்டுகிறார்.//

http://srimadbhagavadgitatamil.blogspot.com/

மேற்கண்ட இரு சுலோகங்களும் அர்ஜுனனின் மையவிசையை

நிமிண்டிப்பார்க்கும் வேலையைத்தான் செய்கிறது.

இரண்டாவது சுலோகத்தில் அவரது குறி இது தான்.

அர்ஜுனா நீ என்ன ஆர்யன் தானே? வெட்கமாயில்லை உனக்கு?
வேதங்களில் ஆரியன் அல்லாதவனான திராவிடன் வேள்விகளின்

எதிரி.கடவுள்களின் எதிரி.அதாவது வேறு கடவுளைப் பற்றி பேசுபவர்கள்.
சிவனைபற்றி ஒரு விரோத மனப்பான்மை விஷ்ணு பக்தர்களிடம் இருந்த
போதும் சிவனும் விஷ்ணுவும் கூட்டணியாக இருந்து செய்த வதங்கள் பற்றி
நிறைய புராணங்கள் இருக்கின்றன.ஒரு வேளை சமன (சமண) மதம் பற்றிய‌
சிந்தனைகளை அர்ஜுனன் செய்ய ஆரம்பித்து விட்டானோ என்றும் கூட இந்த
தாக்குத‌லின் குறியாக இருக்கலாம்.பாண்டவர்கள் வனவாசம் என்றபெயரில் வாழ்க்கையை அதன் எளிமையை மனிதத்தின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டதன் வெளிப்பாடே அர்ஜுனன் "காண்டீபத்தை நழுவ விட்டது"

"பொட்டைப்பயலா நீ"

மூன்றாவது சுலோகத்தில் "க்லைப்யம்" என்ற அந்த "கிருஷ்ணரின்" சொல்லில் மேற்கண்ட எள்ளலும் உசுப்பலுமே வெளிப்படுகிறது.

"ஷூத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம் " என்ற வரியில்

"மன உறுதியில்லாத "சூத்ரனை"ப்போன்ற கோழையா நீ?"என்று கேட்கிற‌ மேல்தட்டு வர்க்க ஆவேசம் வெளிப்படுகிறது.

முதல் அத்தியாயத்தின் (அர்ஜுனனின் விஷாத யோகம்)47 ஸ்லோகங்கள் போக
எழுநூறு ஸ்லோகங்களின் மிச்ச சொச்சம்  யோக தத்துவங்களில் மிடைந்த அம்புகளில் எல்லாம் வர்ணாசிரம விஷமங்களும் யுத்த நெடியுமே அதிகம்.போர்க்களத்தில் நரம்பு முறுக்கேற்றவேண்டிய அவசியத்திற்கு இந்த நுண்மையான யோகங்கள் அவசியமே இல்லை.இதே பாணியில் கிருஷ்ண பகவானை உட்கார வைத்து வியாச பகவான் அர்ஜுனன் உருவில் உபதேசங்களின் மழை பெய்து யுத்தம் வேண்டாம் என்று சொல்லியிருக்க முடியும்.அந்த "யோகங்கள்"பாவம்  என்ன செய்யும்?

குழம்பியவனை தெளியவைப்பதற்குப்பதில் மேலும் குழம்பச்செய்து வில்லேந்த வைக்க கிருஷ்ணரின் தந்திரம் என்றும் இதை எடுத்துக்கொள்ளலாம்.
ஆரம்பத்தில் பிள்ளைக்கு சோறூட்டும் தாய் சொன்னதைப்போல கிருஷ்ணர் சொல்லும் யோகங்களில் எல்லாம் "விசுவரூப தரிஸன யோகம்" தான்
"பூச்சாண்டியைக்கூப்பிடுகிறேன் சாப்பிடுகிறாயா இல்லையா" என்று மிரட்டும் ரகம்.பிள்ளைக்கு சோறூட்டுவதும் யுத்தம் புரிய அம்பு தீட்டிக்கொடுப்பதும் ஒன்று இல்லை தான்.இருப்பினும் அதர்மத்தை அழிக்க தர்மத்தை ஏவி விட்டதாக நினைத்துக்கொள்வோம்.பாண்டவர்கள் கூட அந்த "அதர்மத்தில்" உள்ள முன் எழுத்து "அ" வை கண்டுகொள்ளவே இல்லை.அதை பூதாகரம் ஆக்கியவர் கிருஷ்ணர் தான்.அந்த "அ"வை அழிக்கும் போதும் பின்னாலேயே அந்த தர்மமும் அழிந்து போனதாகத்தானே மகாபாரதம் முத்தாய்ப்பு வைக்கிறது.ஏனெனில் கிருஷ்ண தத்துவம் என்பது பரமார்த்த உருவகம்.மனித உருவங்கொண்ட அந்த கடவுள் அவதாரம் லட்சக்கணக்கான மக்களின் ரத்தவெள்ளத்தில் தான் சம்பவாமி யுகே யுகே என்று காட்டவேண்டுமா?
ஒரு பெண் துகிலுரியப்படும்போது "உடுக்கை இழந்தவளின் உடுக்கையாக"
ஓடி வந்த அந்த பரமாத்மாவால் யுத்தம் புரியத்தூண்டும் "நியூரானை" அன்றே அழித்திருக்க முடியாதா? அந்த லட்சக்கணக்கான ஸ்லோகங்களின் ஒவ்வோரு ஒலித்துளியும் சத்யமேவ ஜயதே என்று சொல்லிக் கொண்டிருக்குமே. பகவான்களின் செயல்கள் எல்லாம் வெறும் பி.சி சர்க்காரின் இந்த்ரஜால் காமிக்ஸ் மட்டும் தானா?

//72. ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி: பார்த நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி
ஸ்தித்வாஸ்யாமந்தகாலேऽபி ப்ரஹ்மநிர்வாணம்ருச்சதி

பார்த ஏஷா ப்ராஹ்மீ ஸ்திதி:-பார்த்தா! இது பிரம்ம ஸ்திதி, ஏநாம் ப்ராப்ய ந விமுஹ்யதி-இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை, அந்தகாலே அபி-இறுதிக் காலத்திலேனும் அஸ்யாம் ஸ்தித்வா-இதில் நிலை கொண்டு, ப்ரஹ்ம நிர்வாணம் ருச்சதி-பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.

பொருள் : பார்த்தா, இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்தி லேனும் இதில் நிலை கொள்வோன், பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.//


அர்ஜுனனை வில்லேந்த வைப்பதற்காக சொன்ன யோகங்களின் சாரம் எல்லாம்
"போர் வேண்டாம்" என்பதில் தான் வந்து நிற்கும்.

சாங்கிய யோக அத்தியாயத்தின் 72வது ஸ்லோகம் மேலே சொல்லியிருப்பதை பாருங்கள்.

மனிதன் கடவுள் ஆவதே பரிமாணத்தின் உச்சம்.இந்த கடவுள் நிலையில் தர்ம அதர்ம மயக்கங்கள் மறைந்து போகின்றன.இந்த பிரபஞ்சத்தின் இத்தகைய மயக்கநிலைகளையெல்லாம் உரித்துப்போடுவதே மகா நிர்வாணம்.கடவுளுக்கு உடலே இல்லை அப்புறம் நிர்வாணம் எங்கே வந்தது?மண் பெண் பொன் ஆசைகளின் வடிவங்கள் தானே போர்கள்.இந்த பிரம்ம நிர்வாணம் அடைந்த பிறகு அர்ஜுனனுக்கு "காண்டீபம்" கண்ணுக்கே தெரியாதே.

ஒவ்வோரு ஸ்லோகமும் அந்த "பரமார்த்தம்" (பரம்பொருள்)பற்றி பேசும்போது
கடைசியில் அர்ஜுனன் குருக்ஷேத்திரத்தையே "பிரம்மாசிரமமாக" அல்லவா மாற்றியிருப்பான்.அங்கே பாஞ்சாலுக்கு துகில் அளித்தவன் இங்கே பார்த்தனின்
துகில்களை (பேராசை போன்றவற்றை)அழித்தவனாக (பிரம்ம நிர்வாணம்)அல்லவா தரிசனம் தருகிறார் கிருஷ்ணர். அப்படியிருந்தும் அர்ஜுனன் "சரி சரி" பகவானே எல்லாம் புரிந்து கொண்டேன் என்று கன்னத்தில்
அடித்துக்கொண்டு போர் புரிய கிளம்பி விட்டான் என்றால் ஒரு உண்மை நிரூபணம் ஆகி விட்டது.

இன்றைய தமிழன் அன்றைய தமிழனின் மிச்ச சொச்சம் என்பதும் அன்றைய அர்ஜுனன் இன்றைய தமிழனின் அச்சு வடிவம் என்பதும் தான் அது.

இன்று கோவிலில் தமிழர்கள் மணிக்கணக்காய் ஸ்லோகங்கள் கேட்டுவிட்டு
எல்லாம் புரிந்து விட்டது என்று வீடு திரும்பி மறுபடியும் சம்சார டி.வி சீரியலை தொடர்கிறார்களே அது போல் தான் எழுநூறு ஸ்லோகங்களையும் கேட்டு விட்டு "சாமி ஏதோ மந்திரம் சொல்கிறார்" சரி சாமி நமோ நமஹ
என்று யுத்தம் தொடங்கி விட்டான்.அத்தனை அர்த்தம் அவனுக்கு புரியாது.புரிந்தால் மகாபாரதம் திசை மாறியிருக்கும் என்பது கிருஷ்ணரும் அறிவார்.

அன்றும் இன்றும் என்றும் இதுவே தான் சமஸ்கிருதத்தின் அல்லது
"த்ரமிள சமஸ்கிருதத்தின்" நிலை.

=============================================ருத்ரா இ.பரமசிவன்.
20.07.2014




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக