வெள்ளி, 8 செப்டம்பர், 2017

பேய் நிழல்

பேய் நிழல்
=======================================ருத்ரா

கணிபொறியை
காட்டினால் போதும்
உடனே "பட்டன்" தட்ட
நீ தயார்!
ஓ வாக்காளனே
உனக்குத்தெரியுமா?
"நீலத்திமிங்கில" விளையாட்டு தான்
உன் தேர்தல் என்று?
ஒவ்வொரு தடவையும்
நீ கொடியேற்றி கொடியேற்றி
கயிற்றை இழுக்கும்போது
அங்கே தொங்கிக்கொண்டிருப்பது
உன்   ஜனநாயகத்தின் பிணம் தான்
என்று
நீ அறிவாயா?
உன் மண்ணைப்பார்.
உன் மனிதர்களைப்பார்.
பணத்தின் பேய் நிழல் ஒன்று
கவிந்து கொண்டிருப்பதை பார்!
அரசு அலுவலகங்களில்
மனுக்களின் அடியில்
"மகாத்மா"வின்
பச்சைப்புன்னகைகளும் இணைக்கப்பட்டு
கண்ணுக்குத்தெரியாமல்
கொச்சைப்படுத்தப்படுகின்றனவே .
இன்னும்
டெண்டர்கள்  குத்தகைகள்
என்னும் துணிவிரிப்பில்
பிரசவம் ஆகும்
கட்டுமானங்கள் எல்லாம்
கடல் கொள்ளா கரன்சிகளாய்
எங்கோ ஒரு பொய்மைக்கஜானாவின்
வயிற்றுக்குள்
தின்னப்படுகின்றனவே.
மணல் குவாரி கல் குவாரி மற்றும்
பளிங்குக்கல்லின் அடுக்கு குவாரிகளிலும்
நாட்டின் வளங்களை எல்லாம்
விழுங்கும்
அசுரங்கள்
அசோக முத்திரைகளால்
அடை காக்கப்படுகின்றனவே !
அந்த பேய்க்கைகள்
உங்கள் வாக்கு கைகளுக்கு
பொன் விலங்கு மாட்டுகிற போது
அந்த பொன்னுக்கு மட்டும்
22 கேரட் இருக்கிறதா என்று
முன்னெச்சரிக்கை கொள்ளும் நீங்கள்
உங்கள் ஜனநாயகம்
"ஈயம் பித்தாளைக்கான பேரீச்சம்பழத்துக்குத் தான் "
பண்டமாற்றம் செய்யப்படுகிறது
என்பதை அறிவீர்களா?
இப்போதாவது விழித்துக்க்கொள்ளுங்கள்.
அப்புறம் விழித்துக்கொள்ள
உங்கள்
இமைகள் இருக்காது
விழிகள் இருக்காது.
இருள் பிழம்புக்குள்
ஆழ்ந்து கிடப்பீர்கள்.
சாதி மதங்கள் பாரமேற்றிய
சடங்குகளின் கிடங்குகளுக்குள்
வீழ்ந்து போகும் முன்
விழித்துக்கொள்ளுங்கள்.
ஆம்
விழித்துக்கொள்ளுங்கள்.
விழித்துக்கொள்ளுங்கள்.
விழித்துக்கொள்ளுங்கள்.

============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக