செவ்வாய், 5 செப்டம்பர், 2017

வெறி


வெறி
===================================ருத்ரா

கும்பிட மறுக்கும்
கைகளை முறித்துப்போடு.
குனிய மறுக்கும்
தலைகளை வெட்டியெறி .
ஒப்புக்கொள்ள மறுக்கும்
நெஞ்சங்களை
சல்லடையாக்கு.
மனித நியாயங்களை
சொல்லும்
அரசியல் அத்தியாயங்களை
ரத்த வெள்ளத்தில்
மூழ்கடித்து விடு .
உன்னையே நீ எண்ணிப்பார்
என்று
எவனோ ஒருவன்
ஒரு சிறு கூழாங்கல்லை
அந்த தடாகத்தில் எறிந்தான்.
அதைப்பார்த்து
கரையில் உட்கார்ந்திருந்த
கடவுள்
இன்னும் கல்லை எறிந்து கொண்டே தான்
இருக்கிறார்.
அவரும் ஒரு கடவுளைத்தேடி!

சிந்திக்கும்
அந்தக்கடவுள்களின்
மூளைச் செதில்களையும்
வெறியோடு அறுத்து எறி.
இப்போது பாருங்கள்
எங்கும்
கும்பமேளாக்கள்.
கும்பாபிஷேகங்கள்.
ஏன் ?எப்படி? எதற்கு ?
என்ற கேள்விகளின்
சுடுகாட்டுச்சாம்பல் மேடுகள்.
ஆம்!
ரத்தம் சொட்ட சொட்ட
நிறுத்தப்பட்டிருக்கும்
அந்த அரிவாளுக்குத் தான்
நம் பஜனை கீதங்கள்!

========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக