செவ்வாய், 15 அக்டோபர், 2024

அகழ்நானூறு 81

 

அகழ்நானூறு 81

____________________________

சொற்கீரன்



வணர் ஒலி ஐம்பாலாய் 

வரை அடுக்கத்து

ஒள்ளருவி வரி கூந்தல் 

விரித்தது காண்.

வெள்ளாறு வியன் அகல‌

கொடுமுடியும் மறித்தாங்கு

பொருள் கொள்ள ஆரிடை

நனிஊர்ந்த மல்லன்

நடை திறக்கும் நாளே

நன்னாளாமென சுருள் அரவு

பரி அற்று கிடந்ததன்ன‌

அவன் வரவு நோக்கி

அவண் நோற்றாள் என்

என முன்றில் வீக்கள்

அலமரல் ஆற்றும் மன்னே.

________________________________________________

ஒரு படம் பார்க்கலாமா?

 


ஒரு படம் பார்க்கலாமா?
___________________________________


ஜனநாயகவாதிகளே!
ஓட்டுச்சோறு தின்று
பசியாறலாம் என்று
காத்திருக்கும்
கண்ணுக்கு கண்ணான‌
மக்களே!
நடப்புகளின் வெப்பனிலை
கதகதப்பானது தான்.
ஆனாலும்
அது ஒரு எரிமலையின்
லாவாக்குழம்பு
என்பதை நீங்கள்
உணர்ந்து கொள்ளாத‌
போதைகளின் வெள்ளம்
உங்கள் மீது விழுந்து
கொண்டே இருக்கிறது.
அதை
கடவுள் மந்திரங்கள்
கொப்பளித்துக்கொண்டே
இருக்கின்றன.
அறிவு வளர்ந்து விட்டதாய்
பொய்யறிவின்
கானல் நீர் ஆறு
உங்களைச்சுற்றிலும்
ஓடிக்கொண்டே இருக்கிறது.
அதில் நுரைப்படகுகள் ஆயிரம்
மிதக்கின்றன.
உண்மையான விஞ்ஞானம்
விஞ்ஞானிகளிடையே
பத்திரமாய் உறங்குகிறது.
வியாபார வெறியின் உந்து விசை
எல்லா மண்டலங்களுக்கும்
பலூன்கள் விட்டு
பணங்காய்ச்சி மரங்களை
நட்டு வைக்கிறது.
மக்களே
இந்த மரங்கள் பழுத்த
கனிகளில் பசியாறியிருக்கிறீகளா?
உலகத்தின் முக்கால் வாசி இடங்கள்
பசி பட்டினியின்
எலும்புக்கூட்டுக்குழிகளாத்தான்
இருக்கின்றன.
வளமான நகர நாகரிகங்கள்
பலப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
செழித்துக்கொழித்து
இருந்த வரலாறுகள்
ஏன் வறண்டு போயின.
சாதி மதங்களும்
இன வெறி நெருப்பும் மூண்டு
எல்லாம் சாம்பல் ஆயின.
இயற்கைப்பேரிடர்கள் கூட‌
மூடந‌ம்பிக்கைகளின்
பூதக்கண்ணாடியில்
அழிவின் பிரம்மாண்ட பிம்பங்களாய்
தோன்றின.
அதை வெல்லும் மனிதத்திறன்
தனி மனித பேராசைகளில்
அரச திமிர்வாதங்களில்
மழுங்கிப்போயின.
இந்த‌
கம்பியூட்டர் யுகமும் கூட‌
இன்னும்
அந்த வெறி வளர்க்கும்
கோட்டை கொத்தளங்களாக‌
மாறிவிடுமோ
என்ற அச்சம் மெல்லிதாய்க்கூட‌
ஓ மக்களே
உங்களுக்கு தோன்றவில்லையா?
செயற்கை மூளை மூலம்
செயற்கை மனிதர்களே போதும்.
இயற்கையான மக்களும்
இயற்கையான வளங்களுமே
இவர்களுக்கு இனி
கச்சாப்பொருள்கள்.
எத்தனை நாட்களுக்குத்தான்
எலிகளையும் தவளைகளையும்
வைத்து பரிசோதனை நடத்துவது?
ஆயுட்காலம் கூட்டித்தரும் கம்பெனிகள்
பில்லியன்கள் பில்லியன்களை
கொட்டி முளைத்து வரக்கூடும்.
மக்களே
உங்கள் ஓட்டுக்களையெல்லாம்
அந்த எந்திரங்கள்
பார்த்துக்கொள்ளும்.
கடற்கோள்
பேய் மழை.
பெரும் நெருப்பு
இவையா உங்களை காணாமல்
ஆக்கி விடும்
என்று நம்புகிறீர்கள்?
லாபம் என்று பார்க்க
ஆரம்பித்தால்
இந்த கோடி கோடி
மக்களை வைத்து
வியாபாரம் பண்ணுவோம்
என்ற
ஒரு வெறித்தீ கூட‌
மௌனமாய் மூண்டு
கொண்டிருக்கிறது.
இது ஆலிவுட் சை ஃபை படம்
அல்ல.
திரையே இல்லாமல் ஓடும்
ஒரு அபாய அறிகுறியின்
படம் இது.
இது வெறும்
ஹாலோக்ராஃபிக் கற்பனை அல்ல.
இன்றைய நடப்புகளின்
கூர்முனை இது.
மக்களின் விழிப்புணர்வு ஒன்றே
நமக்கு பாதுகாப்பு.
________________________________________________
சொற்கீரன்

திங்கள், 14 அக்டோபர், 2024

பொற்கிழி பெறும் கவி இமயம் ஈரோடு தமிழன்பன்

 


பொற்கிழி பெறும் கவி இமயம் ஈரோடு தமிழன்பன்

அவர்களுக்கு

ஒரு பாராட்டு மடல்

_______________________________________


அந்த இமய வரம்பன் போல்

என் மீது ஏறி

நீயும் தமிழ்க்கொடி 

பொறிக்க வந்திட வேண்டாம் 

கவிஞனே.

இதோ நானே

உன் தமிழ் ஒளி பெற்றிட‌

இறங்கி வருகின்றேன்

கவி இமயமே!

உன் உயர்ச்சியால்

இந்த கூழாங்கற்களும் 

வைரம் ஆகின.

தினம் ஒரு கவிதை.

பூங்காலை இமை திறக்கு முன்னே

உன் பேனா மூடி திறக்கிறது.

அப்புறம் என்ன?

சொற்களின் வெள்ளம் தான்.

தமிழுக்கு நீ தந்த அரியணை

மில்லியன் மில்லியன் 

ஒளியாண்டுகளின் "உயரத்தில்".

சூரியன் கிழக்கில் நிற்கும்போது

நீ மேற்கில் நிற்கிறாய்

அவனோடு

தமிழ்ப்பூப்பந்து விளையாடும்

ஒரு ஒளி படைத்த கண்ணினாக!

உன் புத்தகங்கள்

ஏணிகள் ஆயின‌

இந்த தமிழ்ச்சிகரங்களுக்கு எல்லாம்.

குதிரைகள் நுரைதள்ளி

கொஞ்சம் அயரலாம்.

உன் எழுத்துக்கள்

அந்த ஜேம்ஸ் வெப் 

தொலைநோக்கியோடேயே

சென்று

அண்டம் அளந்து நம்

தமிழுக்கு அளபடை சொல்கிறது.

அதன் இன்னிசை அளபடை கேட்டு

நாங்கள் பூரித்துப்போகிறோம்.

பொற்கிழி பெறும் தமிழின்

பொற்குவையே!

உன்னை அளந்து குவிக்க‌

அளவைகள் போதாது.

அதனால்

அந்த அகன்ற வானத்தை

இன்று ஒரு நாள் வாடகைக்கு

எடுத்திருக்கிறோம்.

அது கேட்ட விலை

உன் கவிதை மட்டுமே!

நீ நீ நீ நீ ...

ஆம் நாங்களும் தான்

உன் தமிழ்ப்புகழ் ஒளியில்

நீடு நீடு வாழ்வோம்.

வாழ்க நம் தமிழ் ஒளியெனும்

உலகச்செம்மொழி!


_________________________________________________

பணிவ‌ன்புடன் வணங்கும்

சொற்கீரன் 

எனும் இ பரமசிவன்.

கற்பக நகர்

மதுரை...625007.




ஞாயிறு, 13 அக்டோபர், 2024

என் அன்பான வாழ்த்து மடல்.

 

எண்பத்தி ஒன்றாவது வயது நிறைந்த

என் நண்பன் சிவசுப்பிரமணியனுக்கு

என் அன்பான வாழ்த்து மடல்.

________________________________________________


எங்கிருந்தோ

மூலைக்கரைப்பட்டியிலிருந்து

வந்ததாய்த் தான் 

அந்த மாணவர்கள் 

எண்ணினார்கள்.

ஆனால் கல்லூரிப்பேராசிரியர்

சொந்த ஊர் எதுவெனக்

கேட்டபோது

"திக்கெல்லாம் புகழும்

திருநெல்வேலிச் சீமை"

என்று 

முழங்கினாயே!

அன்று முதல் 

உனது அந்த 

முழக்கம் ஓயவில்லை

ஒடுங்கவில்லை.

பாட்டாளி வர்க்க சமுத்திரத்தின்

பேரலையாய்

முழங்கிக்கொண்டிருக்கிறாய்.

நூறாண்டுகள் எல்லாம் ஒரு பொருட்டா?

உன் யுகம் 

இந்த மைல்கற்களையெல்லாம்

உள்வாங்கிக்கொண்ட

பெரு வரலாறாய்

முன்னேறும் முன்னேறும்!

கல்லூரிக்காலம் எனக்கு

அறிவின் ஊற்று சுரக்கும்

பசுஞ்சோலையாக‌

இருந்ததன் இன்னொரு 

தேனூற்று

இனிய நண்பா

அது நீயே தான்.

வாழ்க என் நண்பா!

நீ நீடூழி நீடூழி வாழ்கவே!


____________________________________

அன்புடன்

செங்கீரன் எனும்

இ பரமசிவன்.


சனி, 12 அக்டோபர், 2024

வெற்றிகள் மனிதனுக்கே!

 

யாதானும் 

நாடாமால் ஊராமால் என்னொருவன்...?

வள்ளுவர் அப்படியே நிறுத்திக்கொண்டார்.

மனிதா!

சாந்துணையும்

என்று அவசரப்பட்டுவிட்டேன்.

சாவு எனும் முரட்டுக்குதிரையையும்

உன் ஆராய்ச்சிகள் மூலம்

டி ஏஜிங் அல்லது டி டையிங்

என்று என்னவெல்லாமோ

சாதிக்கத் துணிந்து விட்டாயே.

தளராதே..மனிதா முன்னேறு.

வள்ளுவர் புன்னகை புரிகிறார்.

கேள்வி எனும் விழுச்செல்வன் உன் 

கையில் உண்டு.

ஏன் எப்படி எதற்கு...

விடாதே கேள்விகளை.

கல்வி கேள்வி அறிவு 

நுண்மாண் நுழைபுலம் திறவோர் காட்சி..

இவற்றிற்கு

தேசியக்கொடிகள் இல்லை

தேசப்பட எல்லைகள் இல்லை.

மொழியில்லை

இனமில்லை.

மனிதம் எனும் புள்ளி

வெளிச்சம் தேடி தேடி

அண்டத்தின் விரிவு போல்

வட்டங்களை அகலமாக்கிக்

கொண்டே இருக்கும்.

அறிவு நூல்கள் தான் மனிதனின்

மனித உரு தாங்கிய சுவடுகள்.

அவன் சிந்தனை

இடறும்போதெல்லாம்

கடவுள் அங்கே நிற்கிறார்.

ஏன் என்னை தடுக்கிறாய்?

மனிதன் கேட்கிறான்.

நானும் அதையே தான் கேட்கிறேன்.

கடவுள் கேட்கிறார்.

இவர்களோடு நான்

பலூன் ஊதி ஊதி விளையாடுவது

உனக்கு ஏன் பிடிக்கவில்லை?

ஆம்.

திடீரென்று வெடித்து 

நீ ஒன்றுமில்லை என அறியும் போது

மறுபடியும் அவன்

பூஜ்யத்திலிருந்தா தொடங்கவேண்டும்?

தொடங்கட்டுமே..

இது ஒரு விளையாட்டு தானே.

சிவ லீலா 

கிருஷ்ண லீலா

என்று கொண்டாடிவிட்டுப்போகிறான்.

உன்னக்கென்ன வந்தது?

"சிந்தனை" எனும் பிசாசே

குறுக்கே வராதே போ!

சிந்தனை பொருட்படுத்தவில்லை.

அறிவு அயர வில்லை.

அதன் விஸ்வரூபம் தான் 

உண்மையில் விஸ்வரூபம்.

கடவுள் காட்டிய பூச்சாண்டிகள் எல்லாம்

ஒன்றுமே இல்லை.

மனிதனின் விஞ்ஞானம் 

எல்லையே இல்லை எனும் 

விளிம்பற்ற நிலையைக்கூட‌

வியக்கவைக்கும் கணித சூத்திரங்களால்

தெறிக்க விட்டுக்கொண்டிருக்கிறது.

கடவுள்

மனிதனின் ரோபோட்டுகளாக‌

மாறி வெகு காலமாகி விட்டது.

"கலி முத்திடுத்து"

எனும் ஒரே மந்திரம் தான்

அது உச்சரித்துக்கொண்டிருக்கிறது.

பிழைத்துப்போகிறது கடவுள்.

விட்டு விடுங்கள்.

கூர்மை மழுங்காத‌

சிந்தனைக்கதிர் அலைகளே

தொடருங்கள்.

மனிதம் உங்களோடு பயணிக்கும்.

வெற்றிகள் மனிதனுக்கே!


____________________________________________

சொற்கீரன்


வெள்ளி, 11 அக்டோபர், 2024

ஒரு துயரமான நகைச்சுவை.

 

ஒரு துயரமான நகைச்சுவை.

____________________________________________


அடிமைப்படுத்துபவர்களை விட‌

அடிமைப்படுபவர்களே

ஒரு நாட்டு ஜனநாயகத்துக்கு

ஒரு பெரிய "கில்லட்டின்".

கசாப்பு கத்தியைக்கூட‌

ருசியான தழை என்று

நாக்கை நீட்டும் வெள்ளாடுகள்

மலிந்த தேசத்தில்

எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும்

சரி

இதே மேளம் தான்.

இதே ஆட்டம் தான்.

கொண்டாட்டம் தான்.

பட்டாசுகள் தான்.

ஜிலேபிகள் தான்.

பெரிய வாணலியில் கிண்டுகின்ற‌

அல்வாவே

நம் வரவு செலவு சாசனம் என்று

புளகாங்கிதம் கொள்ளும்

அறிவு ஜீவிகளும்

அறிவில்லாத ஜீவிகளும்

மத்தாப்பு 

கொளுத்திக்கொண்டிருக்கிற‌

தேசத்தில்

சர்வாதிகாரி என்று

எவரும் இல்லை.

சிந்தனை சூன்யம்

அல்லது

சூன்ய சிந்தனை

என்று எப்படி 

வைத்துக்கொண்டாலும் 

இதுவே

சர்வாதிகாரத்தின் வற்றாத ஊற்று.

கணிப்பொறி கிளிக்குகள்

எல்லாம் 

டாய் ஸ்டோரிகள் தான்.

வாக்குகள் 

என்பதற்கும் ஒரு 

கூர்மையான ஓர்மை உண்டு.

அது இல்லாத‌

வாக்குச்சீட்டுகளும்

வெறும் காகிதக்குப்பைகளே.

இவிஎம் ஆனாலும் சரி.

சீட்டுமுறை ஆனாலும் சரி

முதலில் சொன்ன வரிகளே

இந்தியா எனும் 

இருண்ட கண்டத்தின்

வறண்ட வரிகள்!


"அடிமைப்படுத்துபவர்களை விட‌

அடிமைப்படுபவர்களே

ஒரு நாட்டு ஜனநாயகத்துக்கு

ஒரு பெரிய "கில்லட்டின்"..."


அறிவின்மையும் 

அறிவுடைமையும்

ஒன்றுக்கொன்ன்று

முகம் பார்த்துக்கொள்ளும்

கண்ணாடிகளே

என்பது தான்

ஒரு துயரமான நகைச்சுவை.


________________________________________________

சொற்கீரன்













கனவுக்குள் ஒரு கனவு

 


கனவுக்குள் ஒரு கனவு

________________________________________

சொற்கீரன்.


படு

என்று கண்களை அழுத்தியது.

கண்களை திறக்க முடியவில்லை.

இடுக்கு வழியாக பார்த்தால்

பிம்பங்கள் இழை பிரியாமல்

மசமசத்துக்கிடந்தன.

ஆழ்துயில் கடலில் 

அமிழ்ந்து விட்டேன்.

அப்புறம்

திரைப்படம் ஓடியது.

திரைப்படமா?

யார் எடுத்தார்கள் அந்த‌

படத்தை?

எவனோ எடுத்தான்.

எதற்கோ இங்கு காட்டுகிறான்.

அது தான் சொல்லிவிட்டார்களே

தூணிலும் இருப்பான்

துரும்பிலும் இருப்பான் என்று.

சரி தான்.

நரசிம்மம் வாயைப்பிளக்கிறது.

குடல் நீள நீள 

ரத்தம் வழிய வழிய‌

கோபத்தின் ரங்கோலியெல்லாம்

குரூரச்சித்திரங்கள்.

ஆனால் எப்படி

இவர் இங்கே வந்தார்?

வெண்தாடியும் கைத்தடியுமாய்..

பின்னாலேயே

விஷ்ணுவும்....

"பின்ன என்ன தான் 

செய்யச்சொல்றீங்க

எத்தனை அவதாரம் எடுத்து

சூசகமாக சொன்னாலும்

உங்களுக்கு

அறிவு வேலை செய்ய மாட்டேங்குது.

கடவுள்..பிரம்மம் 

அது இதுண்ணு

இந்த ஏழை பக்தர்களை

பாடா படுத்துறீங்க.

அதெல்லாம் ஒண்ணுமே இல்லடா

முண்டங்களா

(கடவுளே இப்படி திட்டுறார்னு

நெனைக்காதீங்க...)

இல்லவே இல்லைன்னா

இல்லவே இல்லை தான்.

அதத்தான் இவர் ஆணித்தரமா

சொல்றார்ல..

ஸ்லோகம் சொன்னாத்தான் ரிஷியா?

இவர் பகுத்தறிவுச் செல்வம்டா

ரிஷிகளுக்கெல்லாம் ரிஷி இவரே தான்.

இப்ப நான் சொல்றேண்டா

இல்லவே இல்லைடா

அது உங்க பயப்பிரம்மம்டா..

கேக்கபோறீங்களா இல்லையா....

கடவுள் கர்ஜித்தார்

நரசிம்மமாய்...

...........


"ஆமாம்...என்ன இது?"

தாயார் தொட்டு எழுப்பினார்.

பாற்கடல் உறக்கத்திலுமா கனவு?

பெருமாள் முறுவலித்தார்.

........

"போதும் தூங்கினது.

இன்னும் கெளம்பலையா?

நாழியாச்சே...

அந்தக்கோயிலுலே இன்னிக்குத் தானே

உங்கள் சத்பிரசங்கம்.."

என்னத்தச்சொல்றது

பகவான் தூக்கமே இன்னும்

கலையலே"

பௌராணிகரும்

முறுவலித்தார்.


__________________________________________________________