ஞாயிறு, 22 மே, 2022

மனிதா!

 மனிதா!

_____________________________________‍

ருத்ரா



மனிதா!

உன் மீது படிந்த 

ப‌ழம்பெரும் நூற்றாண்டுகளில்

நீ

அந்த‌ அந்துப்பூச்சிகளால் 

தின்னப்பட்டுக்கொண்டிருந்தாயே .

உன் இனத்தை கூறு பிரித்து

இவர்கள் 

வர்ணம் பூசி வன்மம் தீட்டும் 

வகையினை அறியாமல் 

நீ சுருண்டு கிடந்தாயே.

உன்னைப்போலவே

பசி தாகம் எடுத்தவர்ளும்

மல ஜல ஆபாசம் கொண்டவர்களும் தானே

இவர்களும்.

எப்படி இவர்கள் மட்டும்

கடவுளின் விந்து புத்திரர்கள் ஆனார்கள்?

இவர்களும் 

இறப்பின் இறுதிக்கொள்ளியில்

அல்லது

மண் குழிகளில்

மறைந்து தானே போகிறார்கள்.

இந்த கடவுள் புத்திரர்களுக்கும்

சுடுகாடும் இடுகாடும் தானே

எல்லைக்கோடுகள்.

இவர்களையே 

கடவுளர்களாய்  எண்ணி 

இவர்கள் கால்கள் நசுக்கும்

புழுக்களாய் நீங்கள்

தேய்க்கப்படுவதன் அநியாயங்கள்

உங்களுக்கு புரிவதே இல்லையே

அது ஏன்?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

கடவுள் எனும் 

சூழ்ச்சி தான் உங்களை 

மண் மூடிப்போக‌

மந்திரங்களில் கூச்சல் இடுகிறது.

உங்களை கூறு போட்டு

உங்களை உங்களாலேயே

கசாப்பு செய்யவே 

இந்த சாதி சமயக்

கடவுள் பூச்சாண்டிகள்.

இந்தக் கரையான்கள் தின்றது போதும்.

எரி மலையாய் சுழன்று எரி!

பொய்மைச்சடங்குகளை 

சாம்பலாய் பொசுக்கி எழு!

மனிதக் கல்லறைகளைக் கொண்டு

பளிங்குக்கோயில் கட்டும் இந்த‌

பாசாங்குகாரர்களின்

பசப்பல்களை

அடித்து நொறுக்கு.

அலைகளாய் கிளர்ந்து வா!

அடிமைக்கரைகளை

அழித்து நீ

பொங்கி எழுந்து வா!

உன் கால் இடறல்களில்

புது யுகங்கள் முளைக்கட்டும்.

வாழ்க மனிதம்!

வெல்க மனிதம்!


________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக