சனி, 21 மே, 2022

என் தம்பி செங்கோடி!

என்  தம்பி செங்கோடி!

_____________________________________


நம்பிக்கையை
நங்கூரம் பாய்ச்சியவன் அல்லவா நீ.
வாழ்க்கையின் அலைகள்
உன்னை அசைத்துப்பார்த்தும்
தளர்வு அடையாமல் வெற்றிகளோடு
வானத்தையும் இடித்துக்கொண்டு
நிமிர்ந்து நடைபோடும்
உயரம் அல்லவா நீ.
ஏதோ ஒரு ஊசிமுனை இடைவெளியை
எடுத்துக்கொண்டு
உன்னை
விருந்து உண்ட கொடிய அரக்கன் 
கொரானா.
தம்பி..
நம் கல்லிடைக்குறிச்சியில்
எனக்கு நீ தான்
அந்த சேரன் செங்குட்டுவன்.
அவனோ இமயம் ஏறி
கொடி நட்டான்.
நீயோ முயற்சிகளின் இமயத்தை
உன் விரலிடுக்கில் தானே
எப்போதும் வைத்திருந்தாய்.
தாமிரபரணியில் போய்
குளிக்க நினைத்தால்
உன்னோடு குளித்து விளையாடிய‌
அந்த தடங்கள்
இப்போதும்
சஹாராவாய் சுடுகின்றனவே.
உன் நினைவு மட்டுமே
என்னுள் ஒரு சட்டம் மாட்டிய‌
புகைப்படத்தை
நம் குடும்பத்துச்சித்திரமாய்
நிழல் காட்டிக்கொண்டிருக்கிறது.

_________________________________

இப்படிக்கு
உன் அன்புள்ள அண்ணன்
இ.பரமசிவன் குடும்பத்தினர்.
மதுரை 625007
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_____________________________________
15.05.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக