ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்



ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

=================================================ருத்ரா இ பரமசிவன்.



ஞாயிறு ஞாயிறு போற்றுதும்

ஞாயிறு எதிர்விழி கடல்வழி காட்ட‌

நெடுந்திரை ஊர்ந்து கலன்கள் ஓட்டி

திரைதவழ் கரைதொறும் நகர்கள் நாட்டி

திரைவிடத்தான் ஆகி ஞாலம் ஆண்டான்

தமிழ்நிலத்தான் எனும் தனிச்சுடர் மொழியன்.

பல்திசை தோறும் மாண்புகள் சேர்த்து

கேட்ட ஒலிவளம் எல்லாம் தொகுத்து

கொணர்ந்தான் இங்கொரு பன்மொழிக்கோவை.

திரைவிடத்தான் எனும் திராவிடத்தானே

செம்மொழி ஆக்கினான் அம்மொழிதனையும்.

சிந்துவெளியின் சீர்மிகு தமிழன்

தந்த மொழியே சமக்கிருதம் ஆகும்.

தொண்டைக்கு வெளியே ஒலிக்கும் தமிழொடு

அடிவயிறும் ஒலிக்கும் அயல்மொழிதன்னை

கலந்திட நினையா கவின் செறி தமிழன்

தனிமொழியாக்கித் திரட்டித்தந்தனன்.

தமிழே ஆங்கு உயர்நிலை நின்றதால்

அயல்மொழியோ தனித்தமிழ் மண்ணில்

விரவாது நின்றதால் வேற்றுமொழியானது.

இலைமறை காய்மறை போலவே ஆங்கு

வழங்கியதாலே அஃது மறைமொழியானது.

ஓங்கி ஒலித்தால் தமிழில் அதுவே

"ஓதம்" ஆகும் அறிந்திடுவீர்.

தமிழின் வேர்ச்சொல் வேரூடி கிளைத்ததால்

வேற்று மொழியும் தமிழ்போல் ஆனது.

தமிழ்த் திணைகளின் கருப்பொருள் மற்றும்

உரிப்பொருள் உட்பொருள் அத்தனையும்

ஓங்கி உயர்த்தி "ஓதம்"செய்வதே

வேதம் என்ற மொழியாய் ஆனது.

இயற்கையை ஆற்றுவிக்கும்

இயற்கை ஆற்றலே இங்கு இறைமை ஆகும்.

துகளை அலையாய் ஆற்றுப்படுத்துவதே

ஆற்றல் என்கின்றனர் அறிவியலாளர்.

அதன் "அளபடை" இலக்கணமே  இங்கு

குவாண்டம் எனும் நுண்தகைமையாம்.

இயற்கை போற்றுதும்  இயற்கை போற்றும்  என

இறைமை போற்றிய  நம் ஓதுவார்களே

அந்தணர் என்னும் அறவோர் ஆயினர்.

தமிழின் வேர்ச்சொல் வேரூடி கிளைத்ததால்

வேற்று மொழியும் தமிழ்போல் ஆனது.

கொங்குதேர் தும்பியின் மென்சிறை  அதிர்வே

பொங்கு ஒலியின் "ரீங்கார"மாகும்.

இதன் இரிக ஒலிப்பே ரிக் வேதம் ஆகும்.


( தொடரும் )


==============================================================












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக