புதன், 3 செப்டம்பர், 2025

கவிதை எழுதி நாசமாப்போ!

 

கவிதை எழுதி நாசமாப்போ!

________________________________________‍‍


என்ன?

நான் இப்போதான்

ஒரு கவிதை எழுதி முடித்தேன்.

அந்த பேனாவைக்கூட மூடி

சட்டைப்பையில் இன்னும்

சொருக வில்லை.

அதற்குள் அது

பல்லை நற நறத்துக்கொண்டு

என் மீது

காறி உமிழாத குறையாய்

சீறுகிறது.

ஏன் இந்த கோபம்?

அதன் பிறகு 

மூக்கைச்சிந்தி தூரப்போட்டு விட்டு

அது புலம்ப ஆரம்பித்துவிட்டது.

ஏ பொழப்பு கெட்ட புலவா?

என்னது..

நானா?

அட நீ தாண்டா

ஏங்   குமுக்கு..

வடிவேலுத்தமிழ்

இடி மாதிரி இறங்கியது.

தெ பாரு..

இப்டியெல்லாம் திட்டக்கூடாது

நான்..நான்..

என்னடா செய்வே

நான் நான் 

அழுதுருவேன்...

ஒரு வடிவேலு

இன்னொரு வடிவேலுவிடம்

பேசறது மாதிரி இருக்கா..

அந்த "கெட்ட குரல்"

இலக்கணப்பிழையெல்லாம் இல்ல.

அது "கேட்ட குரல் இல்லை"

(கேட்ட) கெட்ட குரல் தான்.

சரிப்பா..

இப்போ

என்னாண்ற..?

என் கவிதை கொஞ்சம் எகிறியது...

பயனில்லை.

ஏதோ ஒரு பேரிடர்

நம்மையெல்லாம்

சுருட்டி மடக்கி விழுங்கிவிடும் 

போல் தான் தெரிகிறது.

ஓட்டு

ஜனநாயகம்

தேர்தல்

வாக்காளர் பட்டியல்...

சாதி மதம்..

போதும்..போதும்

கவிதை எழுதியா

இதையெல்லாம் கிழிக்கப்போறீங்க?

அந்த பேனா

சடக்கென்று தன்னையே

முறித்துக்கொண்டு விட்டது.

அங்கே

உயிரெழுத்து 

மெய்யெழுத்தெல்லாம்

ரத்தம் கொட்டிக்கிடந்தன.

_______________________________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக