வியாழன், 5 ஜனவரி, 2023

மியூசியத்தில் ஒரு தராசு

 மியூசியத்தில் ஒரு தராசு

________________________________________

ருத்ரா



அது ஒரு அரியவகைப்பொருள்

என்று

எல்லோரும் பார்த்து 

மெய்சிலிர்த்தார்கள்.

புல்லரித்துக்கொண்டார்கள்.

ஒரு பொருளுக்கு சமமான 

எடை கற்களை

போடுவது போல்

அந்த நிகழ்வுகளையெல்லாம்

அள்ளி வைத்தார்கள் ஒரு தட்டில்.

அடுத்த தட்டில்

கடவுள் சிலைகளை அள்ளி வைத்தார்கள்.

கடவுள் சிலைகள் எல்லாம்

மேலேயே நின்றன.

மனிதன் நிகழ்த்திய நிகழ்வுகள்

அடியிலேயே இன்னும் அடியிலேயே

கிடந்தன.

அந்தக்

கன பரிமாணத்தின்

கனத்தில் எல்லாம்

சமூகமே உருண்டு திரண்டு கிடந்தது.

தீர்ப்பு அளிக்கும் 

அந்த தராசு இன்னும்

தீர்ப்பு அளிக்கப்படாமல் 

அப்படியே தான் இருந்தது.

தீர்ப்பு வாசிக்கப்பட்டு விட்டது.

நீதி அநீதி

நியாயம் அநியாயம்

என்ற சொற்களின் ஒலிக்கூட்டங்கள் மட்டும்

அந்த பளிங்குத்தூண்களில்

முட்டி மோதி

எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன.

சர்வாதிகாரம் கொக்கரிக்கிறது.

பாருங்கள் அந்த அலங்காரக் 

கண்ணாடிப்பேழையை.

எவ்வளவு பாதுகாப்பாய் நளினமாய்

வைத்திருக்கிறோம்

அதனுள்

ஜனநாயகத்தின் எலும்புக்கூட்டை.

வர்ணம் பூசிய மரணக்கோட்பாடுகளை.

மறந்து போன 

மறைந்து பொன 

நாகரிகங்களின் 

செல்லரித்த நூற்றாண்டுகளின்

ஃபாஸில்கள் எனும்

புதை பாடுகளை!

ஏதாவது புரிகிறதா?

வரலாறுகள் என்பவை புதிர்களா?

முரண்பாடுகளை

முரண்பாடுகள் தான் 

மோதுகின்றன.

கடவுளே இல்லாமல் 

வந்து விட்ட‌

கடவுள் புத்திரர்கள்

வேதங்களை 

ஒலித்துக்கொண்டிருக்கிறார்கள்.



_______________________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக