செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

சிறகுகள்

சிறகுகள்
============================================ருத்ரா

புழு பூச்சிகள் கூட
நசுக்கப்படும் வரை
சிலிர்த்துக்கொண்டு தான்
இருக்கின்றன.
முடியும் வரை தன்னை
மிதிக்கும்
கால் கட்டை விரல்களை
எதிர்த்து
தன்னிடம் இருக்கும்
மிருதுவான
கொடுக்குகளையும் கொண்டு
குடைச்சல் கொடுக்கத்தான்
செய்கின்றன.
மனிதன் ஏன் இப்படி
கல் பொய்மை சாமிகளின் முன்னே
கூழாகிப்போகிறான்.
அறிவின் கூர்முனை
தன்னிடம் இருக்கும்போது
இந்த சாதி மதப்பேயாட்டங்களுக்கு
இரையாகிப்போவதேன்?
டிவி சினிமாக்களின் முன்
மரவட்டைகளாய்
மல்லாந்து கிடப்பதேன்?
சிந்தனையின் மின்னல் கீற்றுகள்
அவனுள்
இடி இடிக்கத்தளும்புகையில்
அரசியல் ஜிகினாக்களில்
அடைபட்டுக்கிடப்பதேன்?
உண்மையான அரசியலின்
மனித முகம் இழந்துபோன
ஓட்டுகள்
எனும் பாப்கார்ன்களில்
கனவுகளை கொறித்துக்கொண்டே
நனவுகளின் கசாப்புக்களில்
செதில் செதிலாய்
சிதறிக்கொண்டிருப்பதேன்?
சாதி மத வெறிகள்
உங்களை தின்று கொண்டிருப்பது
புரிகின்றதா?
ஓ! காகிதப்புழுக்களே!
இந்த தேர்தலின் தேர்க்காலில்
வாக்கு இறந்து
நசுங்கிப்போகுமுன்
மாமேதை அப்துல் கலாம்
உங்கள் உள்ளத்தில் ஒட்டிக்கொடுத்த
அக்கினிச்சிறகுகளை
கொஞ்சம்
அலை விரியுங்கள்.

=============================================
07 அக்டோபர் 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக