வெள்ளி, 9 ஆகஸ்ட், 2019

யார் நீ ? நில் அங்கே !

யார் நீ ? நில்  அங்கே !
=========================================================ருத்ரா

"என்னைப்பற்றி அறிந்து கொண்டாயா?"
கடவுள் கேட்டார்.
"உன்னைப்பற்றி அறியத்தான்
அவர்களிடம் சென்றேன்
நீ எங்கள் குலத்தில் பிறக்கவில்லை.
எங்கள் அருகில் கூட நிற்காதே
என்றார்கள்."
"அப்படியா சொன்னார்கள்?
நான் போகிறேன்"
என்று
கடவுள் அங்கே சென்றார்.
"யார் நீ? நில் அங்கே."
என்கிறார்கள்.
"எங்கே பூணூல்?"
என்று கேட்டார்கள்..
"என்னது எனக்கு பூணூலா?
யாரடா அது என்னையறியாமல்
எனக்கு பூணூல் போட்டது?"
கடவுள் குதி குதியென்று
குதித்தார்.
கோவிலுக்குள் எல்லாம்
போய் பார்த்தார்.
அங்கே எல்லா
கடவுள் சிலைக்கும் பூணூல்!
தொந்திப்பிள்ளையாரிலிருந்து
ஹிரண்யகசிபு குடலை உருவி
மாலையாய் போட்டிருந்த
நரசிம்மருக்கும் கூட
அந்த குடலோடு குடலாய் பூணூல்!
தாம் தூம் என்று குதித்த
கடவுளை
தேசவிரோதி என்று சிறையில் போட்டு
நையப்புடைத்து
வெளியே கொண்டு வந்து போட்டார்கள்
பிணமாக!
கடவுள் தற்கொலை செய்து கொண்டதாய்
"கேஸை " முடித்து விட்டார்கள்.

"மகேஸ்வரா !
என்ன இது பிணமாவா கிடந்தீர்கள்.?
உங்கள் ருத்ர தாண்டவம் எல்லாம்
என்ன ஆயிற்று?"
"தேவி கேட்டாள்.
"எனக்கு நானே கொடுத்துக்கொண்ட
தண்டனை அது."
"உங்களுக்கே தண்டனையா?
ஏன்?"
"நான் முதலில்
என்னைப் படைத்துக்கொண்டேன் .
பிறகு நான்
மனிதனைப்படைத்தேன் "
"அதனால்  என்ன?"
"முதலில் மனிதனைப் படைத்திருந்தால்
இந்த தொல்லையே வந்திருக்காது,
அவன்
கடவுளை படைத்திருக்க மாட்டான்."
அவனோடு நின்று கொள்வான்."

=================================================















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக