ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

என் வழி தனிய்ய்ய் வழி.....

என் வழி தனிய்ய்ய் வழி.....
===================================================ருத்ரா


சூப்பர் ஸ்டாரின் தனி வழி..
அப்படி என்ன தனி வழி?
போர் வரும்போது
பார்த்துக்கொள்ளலாம் என்றார்.
கபாலி வந்த பின்
காலா வந்தான்.
பேட்ட வந்த பின்
தர்பார் வரப்போகிறது.
இதெல்லாம்
அவருக்கு மட்டுமே தெரிந்த‌
தனி வழியில் வந்தது தானா?
அந்த வழியில் தான்
அர்ஜுனனை வைத்துக்கொண்டு
கிருஷ்ணன் வந்தானா?
அந்த வழியில் தேர் தெரிகிறது.
ஆனால் போர் தெரிகிறதா
அவரைத்தான் கேட்கவேண்டும்.
கிருஷ்ணன் யார்?
அர்ஜுனன் யார்?
அவரும் சோழி போட்டு பார்த்து
பிரசன்னம் பார்க்கவேண்டும்
போலிருக்கிறது.
கதை
திரைக்கதை
கதை வசனம்
இதெல்லாம் இருக்கட்டும்.
இதை
எழுதிய வியாசன் என்ற‌
ஜனநாயகன்
எங்கே இருக்கிறான்?

விரலில் மை வைத்தவர்கள் என்றால்
இப்படி மை வைக்கப்பட்ட விரல்கள்
எத்தனை கோடிகள் வேண்டும்?
இதோ ரெடி
என்கின்றன
கார்ப்பரேட்டுகள் .

பட்டன்கள் தட்டிய  குரல்கள்
தேக்கிவைக்கப்பட்ட‌
கணிப்பொறிகள்
எத்தனை கோடி வேண்டும்?
இதோ சப்ளை
என்கின்றன.
கார்ப்பரேட்டுகள்.

மதம் என்னும் வண்ணப்பலூன்களை
கோடி கோடியாய் மிதக்கவிட்டு
இந்த வானத்தை மறைக்கவேண்டுமா?
அறிவின் வெளிச்சத்தையே
விழுங்கிவிடக்கூடிய‌
விஸ்வரூப பூச்சாண்டிகளை
தினம் தினம் மக்கள் மீது
கொட்டிக்கவிழ்க்க வேண்டுமா?
கார்ப்பரேட்டுகளின்
ஊடகங்கள்
இதோ வாசலில் கோலம் போட்டு
பூரண கும்பங்களுடன்
காத்திருக்கின்றன.

வியாசன் தான் தடுமாறிப்போனான்.

இன்னுமா
அந்த மகாபாரதக்கதையை
சொல்லிக்கொண்டிருப்பது?

பாண்டவர்கள்
கௌரவத்தை தொலைத்து விட்ட‌
கௌரவர்கள் ஆகிப்போனார்கள்.
இந்த சகுனிகள் போதும்!
சூப்பர் ஸ்டார் அவர்களே!
உங்கள் பங்குக்கு
நீங்களும் பகடை உருட்ட வேண்டாம்.
அவர்களின்
குருட்சேத்திரப்போர் எனும்
கட் அவுட் செட்டிங்கில்
படுகொலை செய்யப்படுவது
கட் அவுட் மக்கள் அல்ல.
ரத்தமும் சதையுமாய்
கனவும் லட்சியமுமாய்
உயிர்த்து நிற்க வேண்டிய‌
இந்த ஜனநாயகம் தான்.

"எண்ணிக்கை"யை கொடுத்த மக்கள் மீதே
எண்ணிக்கையற்ற  அம்புகள் எய்து
வதம் செய்யும்
அடக்குமுறையின் ராஜ தந்திரம்
உங்களுக்கு புரியவில்லையா
ரஜனி அவர்களே?
கண்ணுக்குத்தெரியாத ராட்சசம்
சனாதனம்.
இதை வீழ்த்த
புத்தியை தீட்டினால் போதும்.
கத்திகள் தேவையில்லை.
உங்கள் அட்டைக்கத்திகளையும் கூட‌
தூர எறிந்துவிடுங்கள்.
அரிதாரம் இல்லை அரசியல்!
வலிய வலிய இருட்டுதனை
பூசிக்கொண்டு
வெளிச்சம் என முழக்கம் இடாதீர்கள்
ரஜனி அவர்களே.

==========================================================

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக