ஞாயிறு, 20 மே, 2018

எடியூரப்பா அவர்களே..

எடியூரப்பா அவர்களே..
==================================================ருத்ரா

உங்களுக்கு
எங்கள் மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த ஜனநாயகத்தை காத்ததில்
உங்களுக்கே பெரும்பங்கு!
முரட்டுத்தனமாய் அந்த‌
பொய்க்கால் குதிரைகளை வைத்து
அவர்கள் சொன்னதைப்போல்
ஒரு "அஸ்வமேதயாகம்"
நடத்தியே தீருவேன் என‌
அடம் பிடிக்காமல்
தடம் மாறியதற்காக
எங்கள் பாராட்டுகள் உரித்தாகுக.
உங்களை வில்லை வளைக்கச்சொல்லிவிட்டு
இங்கே
சில துருப்புச்சீட்டுகளை
வளைக்க அவர்கள் அனுப்பிய அம்புகள்
அந்த அம்பராத்தூணியிலேயே
முனை முறிந்து போய்விட்டன.
நீதி மன்றம்
இப்படி ஒரு சீற்றத்தை
ஜனநாயகத்தைக்காக்கும்
கேடயமாக அளிக்க முன்வந்தது
ஒரு திருப்பு முனை தான்.
அந்த தராசுமுள்ளில்
மாயமாய் ஆர்ப்பரித்த‌
ஒரு சர்வாதிகாரம்
கழுவேற்றப்பட்டிருப்பது தான்
அந்த திருப்புமுனையின் நெருப்பு முனை!
எடியூரப்பா அவர்களே
உங்கள் உருக்கமான உரை
டில்லியிலும் எதிரொலிக்கும்.
வர்ணபேத தூரிகைகொண்டு
சாதி மத பூதங்களை விஸ்வரூபமாக்கும்
தந்திரத்தை
வளர்ச்சி மந்திரமாக‌
ஜபிக்கும் அவர்களும் புரிந்துகொள்வார்கள்.

உங்கள் ராஜினாமாக்கடிதம்
இந்த சட்டமன்றம் எனும்
சுயம்வர மண்டபத்தில்
ஒரு வில் முறிந்த சப்தத்தை
எதிரொலித்தது.
ஜனநாயகத்தை ஜனநாயகமே
காத்துக்கொண்ட ராமாயணம் இது.
மாரீசன் சுபாகுகள் கவிழ்ந்து போனார்கள்.
வால்மீகி ஓலையை திருப்பிவைத்து
எழுதத்துவங்கி விட்டார்.
ராமர் பட்டாபிஷேகம் என்பது
மக்களின்
இந்த ஜனநாயக பட்டாபிஷேகம் மட்டும் தான்
என்று.
மற்ற சுலோகங்களையெல்லாம்
சுருட்டிவைத்துக்கொள்ளுங்கள்
என்று
மக்கள் அவர்களிடம் சொல்ல வைக்கும்
ஒரு வாய்ப்பு தந்ததற்கு
எடியூரப்பா அவர்களே
உங்களுக்கு மிக மிக நன்றி.


=============================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக