வியாழன், 6 ஆகஸ்ட், 2026

தாமிரவருணி



கல்லிடைக்குறிச்சி

நீ

வெறும் ஊர் அல்ல.

தாமிரபரணி எனும்

ஒரு தொப்பூள்கொடி

இந்த ஊர் எனும் குழந்தையை

சுற்றிப் பிணைந்து கொண்டிருக்கிறது.

அது கடலில் சங்கமிக்கும் போது

நக்கீரனின் திருமுருகாற்றுப்படை

அங்கு அலையடிக்கிறது.

அந்த வரிகளும் சொற்களும் 

வைரங்களாய் உருண்டு உருண்டு வந்து

கூழாங்கற்களாய் கூவி கூவி 

ஒலித்து எங்களையெல்லாம்

அழைக்கிறது.

பெரும் பெரும் பேராறுகள்

ஓடுகின்ற இந்த உலகத்தில்

நீ ஒரு சிற்றோடை தான்.

ஆனாலும் நீ

எங்களுக்கு ஒரு பளிங்கு வார்ப்பு.

பொருநை மலையடுக்குகளிலிருந்து

புறப்படுகிறாய் நீ

இங்கே பச்சை வண்ணத்தில்

இந்த மண்ணை வளப்படுத்துகிறாய்.

எங்கள் ஊர் உழவர்களுக்கு

எங்கள் ஊர் உயிர்ப் பசைகளுக்கு

ஒரு பயிரோவியம் தீட்டி

ஒரு உயிரோவியம் படைக்கின்றாய்.

கல்லிடைக்குறிச்சியே

வரலாற்றுப்படுகையாக 

உலகின் தமிழ் ஒளியை

உலகம் முழுவதும் பாய்ச்சுகிறாய்.

தமிழை தமிழே வந்து ஆற்றுப்படுத்தி

எங்களுக்கு

வியப்பு கூட்டி

களிப்பு பெருக்கி

ஒவ்வொரு வீட்டு வாசலையும்

கூட்டிப்பெருக்கி

தமிழைக் கோலம்போட்டு

செல்கிறது

எங்கள் பொருநை எனும் 

தாமிரபரணி!

நக்கீரன் உருட்டி உருட்டி

காண்பிக்கிறான் அந்த‌

தமிழாற்றுக் கலைடோஸ் கோப்பு எனும்

திருமுருகாற்றுப்படையை!

அந்த தமிழ் வண்ணக்குழம்பு காட்டும்

காட்சிகள் 

உலகின் மூலைகளில் எல்லாம்

அந்த தூசி துரும்புகளில் எல்லாம்

ஒவியம் காட்டுவதே

எங்கள் கல்லிடைக்குறிச்சியும்

தாமிரவருணி ஆறும்!

_________________________________________________

சொற்கீரன்



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக