சனி, 17 ஜூலை, 2021

ஒரு இனிய பூங்காலை!

 ஒரு இனிய பூங்காலை!

===========================================ருத்ரா


எத்தனை எத்தனை கொட்டுகிறாய்?

காது வழியாய்

கண்கள் வழியாய்

உணர்ந்தது வழியாய்

ருசித்தது வழியாய்

புல்லரித்தது வழியாய்

எல்லாம் இங்கே தான் கொட்டுகிறாய்.

காலத்தின் எச்சில்

இங்கு தான் உமிழப்படுகிறது.

இந்த மூளைக்குப்பையில்

நீயும்

தேடுகிறாய் அந்த‌

மூளிப்ப்பொம்மையை.

முகம் மழுங்கி

கண்கள் இன்றி

உன் விளயாட்டுப்பொம்மையை!

அது பிணமா?

உயிர் உள்ளதா?

அது நிழலா? ஒளியா?

எல்லா நூற்றாண்டுகளையும் கொண்டு

பிசைந்து செய்தது தானே அது!

ஆம்!

அதைத்தேடிக்கொண்டே இருக்கிறாய்.

ஒரு நாள் அது

உன் கையில் கிடைத்தது.

ஐயோ!

என்ன இது!

சல்லடையாய் துளைத்து

வெறி நாய்கள் தின்றுக்குதறி போட்ட‌

எலும்பு மிச்சங்கள் போல்

அது அருவருப்பாய்..

சாதிகள் மதங்கள்

மூட நம்பிக்கைகளின்

முடை நாற்றமெடுத்த  நான்கு வர்ணங்கள்

அதன் மீது அப்பி..அழுகிய‌

உருவமாய்..அது!

அது என்ன?

அது யார்?

எல்லாமே நீ தான்!

மூக்கைப்பொத்தாதே

முகத்தைச்சுளிக்காதே

புதிய கபாலம் ஒன்று திற!

புதிய சிந்தனைகளை நிரப்பு.

அந்த நியூரான் நிமிண்டல்களுக்குள்

உன் தேடல்

புதிய "பால் வெளியை" நோக்கி இருக்கட்டும்.

பல்ஸார் குவாஸார் என்று

தொலைதூரங்களை

உன் முகத்தருகே கொண்டுவா!

மானிட நேயம் எனும்

அந்த நுண்ணோக்கியில்

உற்றுப்பார்த்து

புதிய சமுதாயத்தின்

டி.என்.ஏ ,ஆர்.என்.ஏ

உயிர்ச்சங்கிலியை பின்னிவைத்துப்பார்.

குப்பையை கிளறியது போதும்.

உட்பொருள் உணர்.

புதிய பார்வை ஒன்றை

உன்கண்களில் மாட்டிக்கொள்.

நம்பிக்கை பூச்செண்டுகளை

பரிமாறிக்கொள்ள புறப்படு.

உன் காலடிகளில்

பூமியின் இதயத்துடிப்புகள்

உணர்வதைப்பார்.

இதோ 

ஒரு இனிய பூங்காலை!


================================================

17.07.2016


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக