செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

அன்பான ரஜனி அவர்களே!

அன்பான ரஜனி அவர்களே!
==============================================ருத்ரா

தூய வெள்ளாடையில்
கர்ஜித்து
ஜனநாயகத்தின் ஊழல் அழுக்குகளை
ரஜனியின் வெள்ளாவியில் வைத்து
அவித்து
தூய்மைப்படுத்தக்கிளம்பியிருக்கிறார்
காந்திய நெறியாளர்
தமிழருவி மணியன்!
கேட்கும் போது
எங்களுக்கு புல்லரிக்கிறது.
அரசியலில் சேர‌
அரசியலை நடத்த‌
ரஜனி அவர்களுக்கு
ஆண்டவன் கட்டளை கிடைத்தது பற்றியும்
எங்களுக்கு நெஞ்சமெல்லாம்
பூரிக்கிறது.

ஆனாலும் ஒரு கேள்வி.
எங்கள் அன்பான ரஜனி அவர்களே!
இந்த நாட்டு நதிகள்
வெறும் நீர்க்கயிறுகள் அல்ல.
வெள்ளக்காடுகளா அவை?
அள்ள அள்ள குறையா
செல்வம் அவை.
கொட்டாங்கச்சி அளவு தண்ணீர்
இருந்தாலும்
உயிர்களை கொன்று குடிக்கும்
அளவு வெள்ளம் என்றாலும்
இது என் தண்ணீர்
என்று குறுகிப்போய்
கருத்துக்கண் அவிந்துகிடக்கும்
நம்மிடையே
எப்படி ஒற்றுமையின்சிந்தனை இமைகளை
உயர்த்தப்போகிறீர்கள்.?
தேசிய நதிகளை இணைக்கப்போகிறீர்கள்.
மோடிஜியின் நாற்காலி அல்லவா
அதற்கு வேண்டும்.
அந்த "நவாப் நாற்காலியோ "
இந்துத்வா எனும்
ஒரு பத்தாம்பசலிப்புத்தகத்தை...
மானிட நாகரிகங்களுக்கு
சமாதிகட்டும் சப்பளாக்கட்டைகளை
அல்லவா...
முட்டுக்கொடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது.
அந்த செங்கோலுக்கு
பூண் பிடிக்க உங்கள் இயக்கம்
பயன்பட்டுவிடுமானால்
அதை விட ஒரு பெரும்பேரிடர்
இந்தியாவுக்கு வர வாய்ப்பில்லை.
பத்தாண்டுக்குள்
நதிகள் எனும்
இந்த தோப்பூள் கொடிகளையெல்லாம்
முடிச்சு போட்டு விடுவதாய்
சபதம் செய்கிறீர்கள்.
அதற்கு உங்கள் தேசிய அலைகள்
துணைக்கு வருமா?
அமித்ஷாக்கள் குரலுக்கு
உதடுகள் அசைப்பது போல்
கழகங்கள் இல்லா பூமியில்
உழ கலப்பை தூக்கியிருக்கிறீர்கள்.
ஊழல் மீது காட்டும்
அறச்சீற்றம் அது!
அது வளர்க! அது வெல்க!
ஆனாலும்

"பஞ்சாப சிந்து குஜராத மராட்டா
த்ராவிட உத்கல பங்க."
அந்த தேசிய இதயத்துடிப்புகளை
உற்றுக்கேளுங்கள்..
திராவிடம் என்பது
சிந்துவெளியிலிருந்து
புள்ளியை தொடங்குகிறது.
ஆம்!நம் இந்தியாவின்
உயிர்ப்புள்ளிகளின்
உயிர்மெய் எழுத்தே தமிழ்.
அதற்கு கல்லறை கட்டுபவர்களுக்கு
காண்ட்ராக்ட் போடவா உங்கள் இயக்கம்?
அதுவும் தமிழ் நாட்டிலிருந்தே
இந்த அப்பாவித்தமிழர்களின்
சிதலங்களையும்
அவலங்களையும்
சிமிண்ட் ஆக்கியா
உங்கள் அரசியல் கட்டுமானத்தை
தொடங்க வேண்டும்.
எங்கள் தமிழ் மண்ணின்
உயிர் மூச்சுகளை
உங்கள் சினிமா நிழல்கள் ஆக்கினாலும்
ஒரு நிஜ இமயமாய்த்தான்
எங்கள் முன் நிற்கிறீர்கள்.
அன்பான ரஜனி அவர்களே
உங்கள் வேள்விக்கு
எங்கள் தமிழ் ஆவேசங்களே
ஆகுதியாய் நெய்யாய் ஊற்றி
நாங்கள் தரப்போகும் பங்கு.
இதைக்கொண்டு
எல்லா சாதி மத மற்றும்
பணங்களின் ஊழல்களை
எரித்து விட திரளுவோம்.
தமிழருவி மணியனின்
ஊழல் எதிர்ப்புப்போர்
தமிழ் எல்லைகளுக்குள் மட்டும்
மத்தாப்பு கொளுத்தும்
வேலையாக சுருங்கிவிடக்கூடாது.
நீங்கள் இதற்கும்
ஆண்டவன் கட்டளையையும்
ஆத்மீகத்தையும் அழைத்தால்
முகமுடி மாட்டிக்கொண்டு
மாட்டுஇறைச்சி அரசியலும்
கேஸ் சிலிண்டர் ஊழல்
கொடுந்தீ நாக்குகளும்
வியாபம் என்கிற‌
மனிதக்கொலைகளை
சங்கிலியாய் கோர்த்துக்கொண்ட‌
கொள்ளைகளும்
உங்களுக்கு தோள்கொடுக்கும்.
யோகங்கள் அது இது என்னும்
சர்க்கஸ்களை வைத்துக்கொண்டு
இந்த
ஜனநாயக ஆட்டுக்குட்டிகளை
அந்த பாசிஸ புலிக்கு
இரையாக்கும்
திரை மறைவு தந்திரங்களுக்கு
பலியாகி விடாதீர்கள்.
உங்கள் நோக்கம் வெல்லட்டும்.
உங்கள் இயக்கமே ஆளட்டும்.

======================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக