கோமதிகளுக்குள்
வேறு கோமதி
யாராவது இருக்கிறார்களா
என்று
தட்டாமாலை சுற்றும் பேனாவை
எங்கள்
அம்பாசமுத்திரம்
குடமுருட்டி சங்கரன் கோவிலுக்கு
வரச்சொல்லுங்கள்.
அந்த ஆற்றங்கரை நாகரிகத்தில்
தடுக்கி விழுந்தால் கூட
ஒரு கூழாங்கல் சொல்லும்
"என் பெயர் கோமதி" என்று.
தெய்வங்கள் தோன்றிய போதே
அவற்றின் "மகளிர் தெய்வங்களும்"
தலையில் ஒரு
தவ மூட்டை சுமந்து
"தபஸ்'இருக்கவேண்டும்
நல்ல கணவன் கிடைக்க
அல்லது
தான் விரும்பிய கணவன் கிடைக்க.
மகளிர் விடுதலைக்கு
தபஸ் இருக்கும் கோமதிகளே
இன்று காண்கிறோம்
அன்றாட அடுப்புக்கூட்டின்
அக்கினிச்சிறகுகளிடையே.
கணிப்பொறியின் உச்சியேறியும்
அங்கு ஒரு "கைலாச மலை"தேடும்
பாசி பிடித்த பார்வைகளில்
சிகப்புச் சூரியன்கள் இடறிய போதும்
கைபேசி கிளுகிளுப்புகள்
சும்மா விடுவதாயில்லை.
ரமேஷ் கண்ணன் அவர்களே
உங்கள் எழுத்து ஊர்வலத்தின்
வீட்டுச்சித்திரங்கள்
வீதி முனை வரை வந்து
எத்தனை புள்ளி கோலம் போடலாம்
என்று அந்த
சுண்ணாம்புச்சிரட்டையை
வருடிய போது கூட
ஞானம் தெறிக்கலாம்...
இந்த சிரட்டைகளில் பெரும் யுகத்தின்
கங்கோத்ரிகள்
கர்ப்பம் தரிக்கலாம் என்று.
__________________________________________
சொற்கீரன்
(முகநூலில் பதிவிட்ட திரு ரமேஷ் கண்ணன் அவர்களின்
கவிதையில் விழுந்த எனது நிழல்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக