அன்புக்குரிய வண்ணதாசன் அவர்களே
அந்த "அரைமஞ்சள் சூரியனை"ப் படித்தாக
வேண்டும்
என்றொரு மோகமுள்ளைக்
குத்திவிட்டிருக்கிறீர்கள்.
அந்தப் புத்தகம் தேடி செல்வதே
எனது இப்போதைய "மிஷன்".
ஒன்று குறிப்பிட்டீர்கள்.
அந்த புத்தகத்து பாத்திரம் ஒன்றில்
ஒன்று நீங்கள் ஏற்கனவே
அச்சிடப்பட்டிருக்கவேண்டும்
அல்லது
ஒவ்வொரு எழுத்துப்பிசிறாய்
உங்கள் சிந்தனை எறும்பு
ஊர்ந்து ஊர்ந்து போய்
அந்த கற்கண்டின் "பொய் மான் கரடு"தனை
ருசித்து ஊறிப்போய் இருக்கவேண்டும்.
உயிரியல் பரிணாமத்தில்
இதயம் உருவாவதற்கு முன்னே
எழுத்துக்கள் துடிக்க ஆரம்பித்திருக்குமோ?
வாசிப்பு என்பது
அந்த சங்க காலப்புலவர்களின்
"மண்டை நிறைய வெண்சோறும் நறவும்" போன்ற
ருசி மிகுந்த தருணங்கள் தானோ?
ஆயிரக்கணக்கான ரோஜா இதழ்களை
அடுக்கிக்கொண்டு
சரக்கென்று ஒரு ஊசியை செருகினால்
அந்த ஒற்றை இதழின்
வானவிளிம்புக்குள்
அந்த தருணத்தின் காலத்துளியில்
என்னென்னத் துடிப்புகள் இழைந்திருக்கும்.
இந்த ஒரு நுண்ணிய கற்பனையின்
ரத்னக்கம்பளத்தை
தன் நாவலில் அற்புதமாக்கிக்காட்டுவார்
தி ஜானகிராமன்.
உங்கள் இதயம் கோர்த்திருக்கும்
அந்த "அரைமஞ்சள் சூரியனோடு"
சில கழஞ்சு தங்கக்குழம்பு ஊற்றி
சொற்களை சுவைக்கலாம் என இருக்கிறேன்.
______________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக