செவ்வாய், 24 மார்ச், 2020

கொரோனா (3)

கொரோனா (3)
========================================ருத்ரா


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி...
மூச்
ஒலிபெருக்கிகளை 
அடக்கி வையுங்கள்.
ஊர் அடங்க 
உலகம் ஒடுங்க‌
அந்த ரோஜாப்பூ ஆர்.என்.ஏ
முட்களால் முகம் சிலிர்க்க‌
சப்பரத்தில் 
பவனி வந்து கொண்டிருக்கிறது.
மரணங்களால் 
தோரணம் கட்டி 
வேக வேகமாக வருகிறது.
முகமூடிகளில் 
மனிதக்குஞ்சுகள்
முணு முணுக்கின்றன.
உயிரியின் 
சிற்றறைக்குள் இருந்துகொண்டு
உலகையே சிறைக்குள் பூட்டி
அது
தனக்குத்தானே
விஷ்ணு சஹஸ்நாமம்
சொல்லிக்கொண்டிருக்கிறது.
உயிரற்ற நுண் பிண்டம்
உயிர்ச்சுநாமியை
உள்ளிருந்து இயக்கி
உயிர்களை 
தின்று
காக்டெயில் பார்ட்டியில்
களித்துத்திளைக்கிறது.
கம்யூனிசமும் தனியுடைமையும்
சமன்பாடு காண‌
ஏதோ ஒரு சூத்திரம் எழுதப்படுகிறது.
கடவுளைக்கொண்டு
பிய்த்து ஒடித்து
நாத்திக "பாஷ்யம்"
எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.
நம் ஜெனடிக் இஞ்சினியரிங் எல்லாம்
காசு மழை கொட்ட‌
கார்ப்பரேட் வயல்களில்
அடிமை விவசாயம் செய்யும்போது
கிடைத்த‌
இடைவேளையில் வந்த‌
கொடூர 
சித்திரம் இது.
கோவில்கள் கூட‌
இதன் கீதங்களுக்கு
சிவப்புக்கம்பளம் விரித்து
ஆத்மீகத்துக்கு
மரண அங்காடி வைத்து
புலம்பத்தொடங்கி விட்டன.
அந்த ஆர்.என்.ஏ வின்
மூளை முடங்கலுக்குள்
அறிவின் கண்ணி முடிச்சுக்குள்
இன்னும் ஒரு விடியல்
துளிர்த்துக்கொண்டு தான்
இருக்கிறது.
வியாபாரம் தொடங்கிவிட்டது.
யாருக்கு வேண்டும்
உங்கள் டாலர்களும் ரூபாய்களும்?
சமூக மனிதம்
ஒன்றை
உயிர்ப்போடு
கட்டித்தர முடியுமா?
என்ற கேள்வியை
அது நம் முன்
வீசிக்கொண்டு ஓடுகிறது.
எங்கே
நம் சாதிகள் மதங்கள்?
எங்கே 
நம் ஆதிக்க அகங்காரங்கள்?
இந்த ஊரடங்கு
ஒரு வெறுமையான‌
கோயிலுக்குள் நம்மை
இட்டுச்செல்கிறது.
கடவுள்களின் பிணக்குவியலில்
ஒரு உயிர்த்தீயின் வெளிச்சம்
ஒரு "எதிர் பரிணாமக்கோட்பாட்டை"
அங்கே போதிக்கிறது.
இயற்கையே மனிதம்.
ஒன்றைத்தின்று ஒன்றை படைக்கும்
விஞ்ஞானம் இது.
உங்கள் வர்ணவெளிச்சங்களில்
இருக்கும்
இருட்டு வர்ணமே
உங்கள் சாவி.
டார்க் எனர்ஜி டார்க் மேட்டர்
என்று எப்படி வேண்டுமானலும்
அழைத்துக்கொள்ளுங்கள்.
திறவுங்கள் 
பிரபஞ்சங்களின்
சாளரங்கள் திறந்துகொள்ளட்டும்.

================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக