புதன், 1 செப்டம்பர், 2021

உறக்கம் கலையட்டும்

 


உறக்கம் கலையட்டும்

______________________________

ருத்ரா


மூவர்ணம் தோன்றிய வானத்தில்

விடியல் தோன்ற விடாத‌

சதுப்பு நிலக்காடுகளே இந்த‌

சதுர் வர்ணப் புதைகுழிகள்.

பாரத புத்திரர்களே

ஒவ்வொரு தடவையும் 

தேர்தல் என்ற சகுனி விளையாட்டில்

நீங்கள் உருட்டுகிற பகடைக்காய்கள்

எல்லாம்

உங்களை நசுக்கும்

ரோடு ரோலர்கள் ஆன‌

கொடுமையை எப்போது

தவிடு பொடியாக்கப்போகிறீர்கள்.

மதம் என்ற அபினியில்

தோய்த்தெடுத்த‌

கடவுள்கள் எனும்

கோரப்பற்கள் பிளந்த‌

மிருகங்கள் உங்களை

இரையாக்கித் தின்று கொண்டிருக்கும்

பொய்மை நிழற்காடுகளை

என்றைக்கு அழிக்கப்போகிறீர்கள்?

இவை 

உங்களை மேலே சுடரும் வானத்தை பார்த்து

தெளிய விடாமல் மறைக்கும்

தந்திரங்களை 

எப்போது முறியடிக்கப்போகிறீர்கள்?

அறிவு பேரறிவு பகுத்தறிவு

எனும் புத்தொளியின்

கதிர்வீச்சு ஒன்றே

இந்த சமுதாயத்தின் 

புற்றுநோய்க்கட்டிகளை

அழித்தொழிக்கும்.

மானிட மலர்ச்சிக்கும்

மானிடத்தின் சமநீதிக்கும்

இந்த சமுதாய எழுச்சி எனும்

மருத்துவமே

நமக்கு இப்போது தேவை.

சிந்தியுங்கள்?

ஊடகக்கூக்குரல்களையும்

கண்கூச வைக்கும் வெளிச்சங்களையும்

ஊடுருவி நின்று

ஒரு நியாய ஆவேசம் கொள்ளுங்கள்.

நீங்கள் துரும்புகள் அல்ல.

இந்த விளம்பர ஓசைப் புயல்களில்

காணாமல் போய்விட!

சிந்தியுங்கள்.

அதுவே உங்கள் கண்களில்

அழல் வளர்க்கும்

ஆழித்தீ! ஊழித்தீ!

உறக்கம் கலையட்டும் புது

உலகம் பிறக்கட்டும்.

_______________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக