திங்கள், 17 பிப்ரவரி, 2020

அழல் நெய் கலிங்கம்....பொழிப்புரை

அழல் நெய் கலிங்கம்.
=============================================

குரவமும் மரவமும் கொழுநிழல் தூஉய்
வேங்கை வரிய சூர்நனி இருட்சுரம்
கடாஅத்த அகலம் மள்ளல் பொருதாங்கு
நிலம் அதிர் பொறி கழல் ஒலித்த செய்தியில்
குறி இடம் விரைய மெல் இறை நெகிழ
அவிழ் விழி அம்பில் காதல் தைப்ப‌
கழைபடு அடுக்கத்து நாடன் நந்தும்
ஆரிடை ஏகினள் அவிர்தரு மாமை
அழல் நெய் கலிங்கம் உரிஉடுத்தன்ன‌
நோன்ற நோக்கில் காடு பெயர்ந்தாள்.
"வேலாண்டான்" அவள் வேல்விழி தாண்டான் 
ஆழ் விழி ஆழம் தோற்றான் வென்றான்.

========================================ருத்ரா

பொழிப்புரை 
------------------------------------------------------------------------

அழல் நெய் கலிங்கம்.

=====================================ருத்ரா.

குரவம் மற்றும் மரவ மரங்கள் தூவிய‌ அடர்நிழல் செறிந்த காட்டில் வேங்கை மரமும் தன் வரிகளால் அச்சமூட்ட‌ விளங்கும் இருளான காட்டுவழியை  அகன்ற வீரம் செறிந்த மார்பனான தலைவன் போர்க்களம் புகுவது போல் கடந்து முன்னேறுகிறான். அப்போது அவன் காலில் உள்ள வேலைப்பாடுகள் நிறைந்த அவன் கழல் நிலம் அதிர ஒரு செய்தியை நுண்மையாக தலைவிக்கு ஒலிபரப்புகிறது. அவன் தன் காதலியை சந்திக்கும் இடத்தின் குறிப்பை அல்லது குறியை விரைவாக தெரிவிக்கிறது.அப்பொழுதே காதலியின் அழகிய மெல்லிய் முன் கை மெலிந்து வாடி வளைகளை நெகிழ்த்துகிறது.நுண்மையான அந்த பசலை நோய் (அதாவது காதலனைப் பிரிந்த  துன்பம்) அவளை வதைக்கிறது. ஆனால் அவள் விழிகளோ கூரிய அம்பாக அவிழ்ந்து தலைவனை காதலால்
தாக்குகின்றன.அவளும் அந்த மூங்கில் காட்டு மலை அடுக்குகள் நிறைந்த நாட்டவனான தலைவனை நோக்கி அந்த நெடிய வழியில் நடந்தாள். அந்த பிரிவு நோய் எரிக்கும் துன்பமாய் 
அவளை போர்த்தியிருக்கிறது.நெருப்பு இழையில் நெய்த ஆடையை உடுத்தியிருப்பது போன்ற துன்பத்தில் அவள் அந்த காடு நோக்கி நடந்தாள்.
போரில் பல வேல்களை வெற்றியுடன் கையாண்ட அவன் அவளது ஆழம் மிக்க விழிகளை வெல்ல முடியவில்லை.அதில் அவன் தோற்றுபோகிறான்.
ஆனால் அவள் காதலை  அவன் வென்று விடுகிறான்.

==============================================












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக