திங்கள், 21 பிப்ரவரி, 2022

கந்தல் நூற்றாண்டுகள்.

 கந்தல் நூற்றாண்டுகள்.


___________________________________________


ருத்ரா



இந்த ஊசல் கருத்துகளின் 


ஊளை நாற்றங்களில்


ஊறிப்போன சொற்களையா


மந்திரங்களாய் என் மீது 


கொப்புளிக்கின்றீர்கள்?


பிறப்பிலேயே நாங்கள்


பிரம்மம் ஆகிப்போனவர்கள்


என்று


பிம்பம் காட்டுபவர்களே.


ஆண்டவன் வீசுகின்ற‌


அக்கினி கேள்விகள் இது.


அக்கினி மீளேம் ப்ரோஹிதம்


என்று நெய்யை ஊற்றி

 

பொய்யை வளர்க்கும்


உங்கள் போலி உறுமல்கள் 


புகைந்து போகட்டும்.


பிறப்பின் 


மனித உயிர்ப்பின்


கல்லறைக்குள் இருந்து கொண்டு


மானிடத்தை கருவறுக்கும்


உங்கள் புராண பிணச்சுமைகளை


சொக்கப்பனை கொளுத்தவேண்டும்.


அது இது இல்லை


இது அது இல்லை


எதுவும் எதிலும் இல்லை


என்று சோமபான நொதிப்புகளில்


விழி செருகி


மொழி குழறி


செய்த உங்கள் பாஷ்யங்கள்


அறியாமையின் உச்சமாய்


எங்கோ அவிந்து கிடக்கின்றன.


சிந்து வெளி எனும் தமிழ் ஊற்றை


மறைத்து மறைத்து மாயம் காட்டும்


உங்கள் சூழ்ச்சிகளை


சுட்டெரிக்கும் அறிவுச்சுடர்


எங்கள் கைகளில்


கிளர்ந்து எழுகின்றது.


உங்கள் வர்ணக்குப்பைகளின் 


ஆதிக்க மிச்சங்கள் இதோ


சாம்பலாக எரிக்கப்பட இருக்கின்றன.


என்னருமைத் தமிழ் நெருப்பே.


வெளிச்சம் ஏற்று.


இந்த கந்தல் நூற்றாண்டுகள்


இனி தொலையட்டும்.


தொலையட்டும்.


தொலைந்தே ஒழியட்டும்.




______________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக