திங்கள், 23 மார்ச், 2026

பொன்சுடர்த்தமிழே

 


வாயில் 

நுழைய வில்லை உன்

வண்ணத்திருப்பெயர்.

ஆயினும்

ஆயிரம் வாயில் 

திறக்கும் உன் தமிழ்


பிஞ்சுத்தமிழே

பிள்ளைத்தமிழே

நீயே எங்கள்

ஊற்றும் காற்றும்!




பொய்யா விளக்கே

பொன்சுடர்த்தமிழே

உள்ளும் புறமும்

ஒளியா ஒளியே!

உன் ஐஞ்சீர் விரலே

எம் ஐம்பெரும்காப்பியம்..உன்

அன்பும் அறமும்

அறிவும் திறனும்

புன்னகை ஒளியும்

உலகம் ஆளும்.

விண்ணும் மண்ணும்

உன் கணிப்பொறி ஆளும்.

நீடு ஊழி நீடு யுகங்கள்

வாழ்க வாழ்க நீ

வளமுடன் வாழ்க!

அன்புடன் அன்புடன்

வாழ்த்திடுகின்றோம்

உன் ஆச்சி தாத்தா

கஸ்தூரி பரமசிவன்

__________________________________

கற்பகநகர் மதுரை_7


மழலைச்செல்வத்துக்கு

ஒரு வாழ்த்து.

வாயில் 

நுழைய வில்லை உன்

வண்ணத்திருப்பெயர்.

ஆயினும்

ஆயிரம் வாயில் 

திறக்கும் உன் தமிழ்.

புரியா சொல் தானே

மழலை!

உன் மழலைப்பெயரே

எங்கள் மனம் நிறைந்த‌

பெயர்.

அதுவும் இனிக்கும் 

அதுவே மணக்கும்

அதுவே

நனி சிறக்க

வாழ்த்துக்கள் 

எங்கள் வாழ்த்துக்கள்.




மழலைச்செல்வத்துக்கு

ஒரு வாழ்த்து.


வாய் நுழையவில்லை

வண்ணத்திருப்பெயர்!

ஆயினும்

பிஞ்சுத்தமிழே

பிள்ளைத்தமிழே

நீயே எங்கள்

ஊற்றும் காற்றும்!

பொய்யா விளக்கே

பொன்சுடர்த்தமிழே

உள்ளும் புறமும்

ஒளியா ஒளியே!

உன் ஐஞ்சீர் விரலே

எம் ஐம்பெரும்காப்பியம்..உன்

எண்ணும் எழுத்தும்

உலகம் ஆளும்.

விண்ணும் மண்ணும்

உன் கணிப்பொறி ஆளும்.

வாழ்க வாழ்க நீ

நீடூழி வாழ்க.


வளமுடன் வாழ்க!

அன்புடன் அன்புடன்

வாழ்த்திடுகின்றோம்

உன் ஆச்சி தாத்தா

கஸ்தூரி பரமசிவன்

__________________________________

கற்பகநகர் மதுரை_7

ஆச்சி தாத்தா




குன்னக்குடி?

 

குன்னக்குடி?

__________________________________________

(குன்னக்குடி எனும் இசைப்பிரளயம்)


குன்னக்குடியா?

அந்த பிரபஞ்சத்தை

பிக் பேங்க் எனும் இசையை

வயனில் "ஒலி பெயர்" என்றால்

உடனே மொழி பெயர்த்து விடும்

அப்போ

இந்த பிரபஞ்சத்துக்கும்

விழி பிதுங்கிவிடும் 

பெரு வெடிப்பின் வியப்பில்!

இசையை

சேட்டை செய்து கொண்டே

அமிர்த எள்ளுருண்டை

உருட்டிப்பிசைந்து தருவார்.

அவர் வயலின் ஆயிரம் மொழி பேசும்.

நீங்கள் குறிப்பிட்ட‌

"மருத மலையை" நான் கேட்டபோது

ஆகாயத்தில்

அவர் பறக்க விட்ட‌

அந்த ஆயிரத்தொரு இரவு "மந்திரக்கம்பளத்தில்"

சுருண்டு நெளிந்து

சுக்கல் சுக்கலாக ஒரு

தேன் மிட்டாய்க்குள் நொறுங்கிக்கிடந்தேன்.

அதை விடுங்கள்.

"காவேரியை"

அவரது வயலின் நரம்பு வில்லில்

தலைக்காவிரியிலிருந்து

கொப்பளித்தார் பாருங்கள்..

அய்யோ..!

அது கும்மாணத்தில் குமிழியடிக்கும் நீர்ப்பிழம்புவரை

ராகத்தில் சடைபின்னிய‌

அனகோண்டாவாய் ஊர்ந்து வந்தது போல்

நான் ஆவியாகிப்போனேன்.

குன்னக்குடி ...குன்றக்குடி

எனக்கும் பிரமைதட்டித்தான் போனது.

ஒரு கணம் மேடையில் தமிழ்ச்சொற்பொழிவாய்

அந்த காவித்தலைப்பாகையில்

மின்னல் இடும்.

மறு கணம் அடிகளார் அற்புதமாய்

"பிடிலுக்குள்" செந்தமிழை 

பிருகாக்களில் 

பிரித்து மேய்ந்து கொண்டிருப்பார்.

ரமேஷ் கண்ணன் அவர்களே

குன்னக்குடியின் டோபாலஜியில்

சங்கீதம் இசைத்தமிழை

நயாகராவாய் ஒலிப்பிரளயம் ஒன்றை

அரங்கேற்றிக்கொண்டே இருக்கிறது.

_______________________________________

சொற்கீரன்




அப்பா என்றொரு ஹோலோகிராம்.

 அப்பா என்றொரு ஹோலோகிராம்.

________________________________________


களிம்பு ஏறிய அப்பாவின்

வெத்திலைச்செல்லம்.

அந்த நடுநிசியில்

கவுளி வெத்திலையுடன்

வெறுமை காட்டியது.

நடு இரவில் எழுந்து

வெத்திலைக்குதப்பி

இருட்டு வானத்தை

சிவப்பு 

வெத்திலைக்குழம்பில்

உற்றுப்பார்ப்பார்.

பாக்கு இடிக்கும்

தன் சிறு இரும்பு உரலில்

உச்சியில் தெரிந்த‌

நட்சத்திரங்களை

போட்டு இடித்து

கொண்டிருப்பது போல்

எனக்கு 

ஒரு நிழலாட்டம்.

_____________________________________

சொற்கீரன்


ஞாயிறு, 22 மார்ச், 2026

அந்த "அரைமஞ்சள் சூரியனை"

 

அன்புக்குரிய வண்ணதாசன் அவர்களே


அந்த "அரைமஞ்சள் சூரியனை"ப் படித்தாக‌

வேண்டும் 

என்றொரு மோகமுள்ளைக்

குத்திவிட்டிருக்கிறீர்கள்.

அந்தப் புத்தகம் தேடி செல்வதே

எனது இப்போதைய "மிஷன்".

ஒன்று குறிப்பிட்டீர்கள்.

அந்த புத்தகத்து பாத்திரம் ஒன்றில்

ஒன்று நீங்கள் ஏற்கனவே 

அச்சிடப்பட்டிருக்கவேண்டும்

அல்லது

ஒவ்வொரு எழுத்துப்பிசிறாய்

உங்கள் சிந்தனை எறும்பு 

ஊர்ந்து ஊர்ந்து போய்

அந்த கற்கண்டின் "பொய் மான் கரடு"தனை

ருசித்து ஊறிப்போய் இருக்கவேண்டும்.

உயிரியல் பரிணாமத்தில்

இதயம் உருவாவதற்கு முன்னே

எழுத்துக்கள் துடிக்க ஆரம்பித்திருக்குமோ?

வாசிப்பு என்பது

அந்த சங்க காலப்புலவர்களின்

"மண்டை நிறைய வெண்சோறும் நறவும்" போன்ற‌

ருசி மிகுந்த தருணங்கள் தானோ?

ஆயிரக்கணக்கான ரோஜா இதழ்களை 

அடுக்கிக்கொண்டு

சரக்கென்று ஒரு ஊசியை செருகினால்

அந்த ஒற்றை இதழின் 

வானவிளிம்புக்குள் 

அந்த தருணத்தின் காலத்துளியில்

என்னென்னத் துடிப்புகள் இழைந்திருக்கும்.

இந்த ஒரு நுண்ணிய கற்பனையின் 

ரத்னக்கம்பளத்தை

தன் நாவலில் அற்புதமாக்கிக்காட்டுவார்

தி ஜானகிராமன்.

உங்கள் இதயம் கோர்த்திருக்கும்

அந்த "அரைமஞ்சள் சூரியனோடு"

சில கழஞ்சு தங்கக்குழம்பு ஊற்றி

சொற்களை சுவைக்கலாம் என இருக்கிறேன்.

______________________________________________

சொற்கீரன்


சனி, 21 மார்ச், 2026

comment on RAMESH KANNAN's kavithai in his FB /20.03.26

 அருமை..அருமைமிகு ரமேஷ் கண்ணன்.


சிமினி விளக்கு தான்.

அது எங்கள் ஊர் 

தாமிரவருணி வாய்க்கால்

குமிழிகளோடு

"நடுமையத்தில்" நின்று கொண்டு

உயரத்தில் நீலமும் சிவப்புமாய்

சிறகடித்து "டொபுக்கென்று"நீருக்குள் விழுமே

அப்படியொரு அழகிய திகிலை எதிர்பார்த்து

எங்கள் வீட்டில்

வட்டாரமாய் அமர்ந்து சாப்பிடுவது

நினைவுக்கு வந்தது.

ஒரு சிறிய "சத்ய ஜித் ரேயின்" குறும்படம்

ஒன்று பார்த்த சிலிர்ப்பு உங்கள் வரிகளில்.

___________________________________

சொற்கீரன்

வெள்ளி, 20 மார்ச், 2026

....ஒரு மனிதாபிமானக்கவிதையை.

 

வண்ணதாசன் அவர்களின் 19.03.26ன் முகநூல் கவிதை

_________________________________________________________


அன்புள்ள வண்ணதாசன் அவர்களே.

..."என்று தோன்றுகிறது...."

இப்படி முடித்திருந்தீர்கள் அந்த கவிதை/கட்டுரையில்.

சரிந்து விழ இருந்த உங்களை

தடுத்து பிடித்துக்கொண்டு

முதுகை தடவி ஆசுவாசப்படுத்தியிருக்கிறார்.

கவிதைக்கு பேனா காகிதம் மை எல்லாம் அப்புறம்.

கவிதை நெஞ்சம் ஒன்று

பிழிந்து ஒரு கொத்து மழையை அல்லவா

அங்கே தூவியிருக்கிறது.

அந்த வெள்ளிமோதிரத்தில்

கருணையின் முத்தில்

அலைகள் ஆர்க்கும் நெஞ்சம் அங்கே

ஆரம்பித்திருக்கிறது

ஒரு மனிதாபிமானக்கவிதையை.

இல்லாத மோதிரமோ?

அல்லது 

இருக்க வேண்டிய மோதிரமோ?

கவிதைப் பொட்டலத்து

பொற்கிழி அது.

___________________________________________

சொற்கீரன்


அண்ணல் காந்தி அடிகள்!

 

அண்ணல் காந்தி அடிகள்!


ஒரு தூரிகைக்குச்சியே

கை கால் முளைத்து

குச்சி யூன்றி

வரைந்த அமைதியின் 

ஓவியமே

உலகத்துக்கோர் நிழல்!

________________________________

சொற்கீரன்

புதன், 18 மார்ச், 2026

ஜெயகாந்தன்.

மூடியை எடுத்து

இறுக மூடிக்கொண்டு

முடங்கிக்கொண்டது

அந்த பேனா.

அது அந்த இருட்டு யுகங்களின் பேனா.

இவன் 

உயிரெழுத்து அத்தனையும்

மூண்டெரியும்

நெருப்பெழுத்து.

கருப்பிடித்த நாளிலிருந்து

துருப்பிடித்துக்கிடந்த‌

சமுதாயம்

துலங்கித்தெரிந்த‌

தன் மனிதத்தை

உயிர்ப்பு கொண்டு

உயர்த்தித்தந்த 

மெய்யெழுத்துக்கள் அல்லவா

இவன் எழுத்து.

ஏனெனில்

இவன் ஜெயகாந்தன்.

__________________________________

சொற்கீரன்

செவ்வாய், 17 மார்ச், 2026

கண்டு கொள்ளமாட்டேன்.

 

நீயும் நானுமா?
___________________________________
எனக்கு வேண்டுமென்றால்
நீ
நரியை பரியாக்கிக்கொள்ளுவாய்.
நானும் ஆட்கொள்ளுவேன்.
நீ
சிந்தித்து
சிவலிங்கத்தை
சிலுவையாகவோ
போதிமரமாகவோ
உருவமற்றோ
மாற்றினால்
உன்னைக்கழுவேற்றுவார்கள்
நான்
கண்டு கொள்ளமாட்டேன்.
___________________________________
சொற்கீரன்

VANNADAASAN KAVITHAI/17.03.26

 

உடைந்த சிலேட்

_____________________________________

வண்ணதாசன் அவர்களே

அந்த உடைந்த கண்ணாடியில் 

தெரிந்த உங்கள் முகம்

உங்கள் உடைந்த சிலேட்டு

காட்டிய செந்தமிழ் உருவத்தின் 

சரித்திரமாக தெரிவது தானே

ஒரு உன்னத கவிதை வடிவம்.

உங்கள் கவிதைகளில்

முற்றுப்புள்ளிகளில் தான்

கவிதையின் அக்கினி கொழுந்து வீசிக்

காட்டும் முருகியல் வெளிப்படுகிறது.

அருமை வரிகள் அவை.

இப்படி ஒரு அழகியலில்

நம் தேச வறுமைக்கந்தலை

அழகாக காட்டியிருக்கிறார்

கி ரா அவர்கள்

வேட்டி எனும் சிறுகதையில்!

வேட்டியின் அந்தக்கிழிசல்

நம் தேசப்படம் வறுமையில் கிழிந்து

காட்டும் சரித்திரம் என்பதை

சொல்லாமல் சொல்லியிருப்பார்

கி ரா அவர்கள்.

இலக்கிய மேதைகளுக்கு

எழுதும் வரிகள்

அவர்கள் மடியில் புரளும்

பொம்ரேனியன்கள் தான்

அல்லது

உறுமும் சிங்கங்கள் தான்.

______________________________________

சொற்கீரன்


ஞாயிறு, 15 மார்ச், 2026

பரல் நானூறு....6

 


பரல் நானூறு.. 6

____________________________________________


திரிமருப்பு மாவென விண்ணுய் விழிதரு

நுதலாள் நோக்கின் கூர் அம்பு துளைக்க‌

அழல்சிறை அன்ன வெம்மை வேய்ந்த‌

விதிர்ப்புடன் இவனும் அவள் பால் ஒரு

கொய்சுவல் புரவி பாய்தரும் கலியொடு``

கதழ்பரிந்து ஆர்க்க தழுவல் அன்ன‌

தாகம் போர்த்த தகைவுடன் நவின்றது

கேட்டு ஆங்கு இடிஉமிழ் வான்போல்

வரி வரி பிளந்து உரைத்தாள் மன்னே.

பொன்னும் பொருளும் குவித்தீர் எற்கு ?

இவள் பொன்னுடல் தீயில் வெந்திடவோ?

இற்றவன் சொன்னான் இமிழ்தரு

அருவிப் பெயல் அன்ன பூவில் சொரிந்து.

பொருள்வயின் எதிர்க்கும் சூர்நிறைக்

காடு பூம் அத்தம் கடும்பரல் தூஉய்

கிடைப்படும் அலரிப்  பறந்தலை அன்ன 

ஆங்கு அவிர்தலைச்  செயிர்த்து 

அணைந்த காலை நின் முறுவல் அற்றே 

அணிக்குடை விரிக்கும் சுடு கதிர் 

எல்லனும் தண்ணிழல் தகையும்.

நம்மின் நெஞ்சம் நிறையும் படு 

நல்கூர் ஆங்கு வறளும் முற்றும்மே!

----------------------------------------------------------------





கவிதை தந்தான் வைரமுத்து.

 

கவிதை தந்தான் வைரமுத்து.
__________________________________________
"என்னோடு பல்லாங்குழி விளையாட வா"
வம்புக்கு இழுத்தது வானம்.
கோடி கோடி விண்மீன்கள்
அதன் கையிருப்பு என்ற‌
இறுமாப்பே அது.
கவிஞன் சிரித்துக்கொண்டான்.
இரண்டு மூன்று கல்லெறிந்தான்
மாணிக்கக்கற்களாய்.
எழுதினான் கவிஞன்.
"விண்ணெல்லாம் தமிழ் எனும் கண்கள்"
மறுகணம் இருண்டது வானம்.
கவிதையின் ஒளி மிஞ்சிய ஒளியால்.
"நிறுத்து நிறுத்து
பிரபஞ்ச ஒளியேற்று"
என்றது வானம்.
"கொஞ்சம் இமை துடித்தது தமிழ்.
எங்கும் இதயம் துடித்த தமிழ்".
கவிதை தந்தான் வைரமுத்து.
அதன் கருப்பொருள்
மனித நேயம் மட்டுமே.
_______________________________________
சொற்கீரன்

சனி, 14 மார்ச், 2026

நடு நிசி நடை....

 வண்ணதாசன் கவிதை (முகநூல் 14.03.2026)

_______________________________________________________


" மன்னியுங்கள். உங்கள் உறவினர் பிடிவாதமாக இறந்து போயிருக்கிறார்"


வண்ணதாசன் அவர்களே

இப்படியொரு தலைப்பை

உங்கள் தூரிகையின் மயிர்ச்சிப்பம்

இறுதியில் இழுவித்தந்ததில் 

மின்னல் உயிர்ப்பு அல்லவா

இழையாடி நிற்கிறது.

அந்த ஓவியன் தவிப்பு.

நடு நிசி நடை.

இன்னும் 

அந்த நின்றே போய்விட்ட‌

இதயப்பொந்துக்குள்ளிருந்து

உயிர்த்தெழுந்த ஒலிக்கீறலாய்

விம்மிப்புடைத்த ஒரு கிளிமொழி இது!

___________________________________________________

சொற்கீரன்




வியாழன், 12 மார்ச், 2026

என்னைக் கும்பிடு

 

12.03.2026

__________________________________________

Feed posts

Vannadasan Sivasankaran S

பிடித்தவை

 ·

10ம.நே

 ·

உண்மையாக இருந்தான்.

அவனுடைய முதுகில் குத்தினார்கள்.

குப்புற விழாமல் மல்லாந்து விழும்போதும்

அவன் முகத்தில். இயல்பான சிரிப்பு இருந்தது.

மேற்கொண்டு நெஞ்சில் குத்தினார்கள்.

குறுவாளை உருவுகிறவனைப் பார்த்து,  'உன் சட்டைப் பித்தான்களை மாற்றிப் போட்டிருக்கிறாய் ' என்றான்.

அவன் வாயில் மிதித்தவனின் குதிங்காலில்

பித்தவெடிப்பு இருந்தது என்பதே அவனுடைய கடைசிக் காட்சியாக இருந்தது.

உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடியவர்கள்

__________________________________________________________________


வண்ணதாசன் அவர்களே...


ஒரு கன்னத்தை அடித்தால்

மறு கன்னத்தையும் திருப்பிக்காட்டு.

என்ற வரிகளை

மேலும் மேலும் தோலுரித்துக்

காட்டியிருக்கிறீர்கள்.

பிய்த்து பிய்த்து சதை கிழிகிற மாதிரி

காட்டியிருக்கிறீர்கள்.

இறைவன்களும் சைத்தான்களும்

இப்படி

தத்ரூபம் காட்டிய போது

இன்னும் எந்த வல்லமை மிக்கவ‌னை

வரவேற்றுக்காத்துக்கிடக்கவேண்டும்?

பாவங்களுக்கு தண்டனை கொடுக்க‌

எண்ணெய்க்கொப்பறைகள் காத்திருக்கின்றன

என்ற புராணங்கள் தான் கொப்பளங்களாகிக்

கிடக்கின்றன.

தேவ வசனங்களும் ஒலித்துக்கொண்டே

இருக்கின்றன.

மனிதம் இன்னும்

அன்பின் நிர்வாண தரிசனத்தை 

பெறவே இல்லை.

மிரட்டி மிரட்டி

என்னைக் கும்பிடு

இல்லாவிட்டால் இதுவே தான் 

உனக்கு எப்போதும்

என்று 

காட்டுவதற்கு மட்டுமே

காட்சி தருவது தான் கடவுள்களா?

_____________________________________________________

சொற்கீரன்

செவ்வாய், 10 மார்ச், 2026

நான்.

 



வரலாறு

ஓடிக்கொண்டே இருக்கிறது.

நேற்றைய வழிகளை

புடைத்து பெயர்த்துக்கொண்டு

ஓடுகிறது.

இது அப்பட்டமாய்

குரல் கொடுக்கிறது.

நாளையப்படுகையில்

எது 

என்னை மறிக்கும்?

எதற்கு 

நான் பதுங்கி பதுங்கி

பாய வேண்டும்?

நேராய் என் உறுமல்கள்

கோரைப்பற்கள் எல்லாம்

தடை செய்பவற்றை

குத்திக்கிழித்துவிடும்.

கரையில் வரிசைகாட்டும்

பச்சைப்புல்லும்

பவள வண்ணப்பூக்களும்

என்னை மயக்கும் கவிதைகள் அல்ல.

நீல வானமும் மேகங்களும் கூட‌

என் முகவரிக்கு

எதிர் முகவரி காட்டும்

வலுவற்றவை தான்.

எனக்கு ஓட்டம் மட்டுமே

உயிர்.

என் குமிழித்துடிப்புகளில்

உங்கள் அத்தியாயங்களை

எழுதிக்கொள்ளுங்கள்.

தட தட வென்று ஓடும்

என் ராட்சச சக்கரங்களில்

உங்கள்

மயிற்பீலிகளை வைத்து

சோதித்துப் பார்க்காதீர்கள்.

உங்கள் இன்றைய சித்தாந்தங்களும்

நாளைய இலட்சியங்களும்

எனக்கு பொருட்டே அல்ல.

எதிர்ப்படும்

எல்லாவற்றையும்

எல்லோரையும்

நொறுக்கித்தள்ளிவிட்டு

ஓடுவதே

என் இயற்கை.

என் வலிமை.

ஒரு சட்டத்துக்குள் என்

சீற்றங்களை அடைத்து நீங்கள்

"நெய் ஓவியங்கள்'வரைந்து 

அழகு பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

இது

அனக்கொண்டாவா?

டி ரெக்ஸ் டைனோசரா?

ட்ராகனா?

இல்லை

ஆயிரங்கால் பூச்சியின்

கோடி கோடி வடிவ‌

மூர்க்கமா?

சரி 

இப்போது கேட்டுக்கொள்ளுங்கள்.

அந்த வரலாறு எனும் 

அமைதியான ஒரு ஆற்றோட்டம்

எனும் சொற்கொத்துகளை

தூக்கி எறியுங்கள்.

நான்

ஜென்ஸி...

ஜென்ஸி மட்டுமே.

நான் அணிந்திருக்கும் 

கண்ணாடியைக்கூட‌

தூள் தூளாக்கி 

முன்னேறுவேன்.

என் வேகம் 

என் கண்விழிக்கோளங்களைக்கூட‌

எனக்கும் வெகு கோடி மைல்களுக்கு முன்னேயே

பிதுங்கிக்கொண்டு 

விழுந்து விடச்செய்து விடும்.

எனக்கு

காட்சிகள் தேவையில்லை.

சாட்சிகள் தேவையில்லை.

நான்

யாருக்கும் எதற்கும்

பாடம் இல்லை.

எனக்கு உருவம் கிடையாது.

வடிவம் கொள்ள எந்த‌

ஜியாமெட்ரியும் கிடையாது.

அழிவும் ஆக்கமுமே

என் "அப்ஸ்ட்ரக்ட் அல்ஜீப்ரா"

வழி விடுங்கள் 

என்னும் 

கெஞ்சலும் கொஞ்சலும்

என் மொழியே அல்ல.

சிதிலங்களைக்கொண்டு

சித்திரம் காட்டும்

சிலிர்ப்புகளின்

பூகம்பமே நான்.

என்னை மறித்துக்கொண்டிருக்கும்

உங்கள்

அஞ்ஞானங்களையும்

விஞ்ஞானங்களையும்

அதே

அஞ்ஞானங்களையும்

விஞ்ஞானங்களையும்

கொண்டு

தவிடு பொடியாக்கிக்கொண்டு

ஓடும்

ஒரு அடாவடிப்பரிணாமமே

நான்.


___________________________________________

சொற்கீரன்

திங்கள், 9 மார்ச், 2026

வண்ணதாசனின் "மழ வில்லுகள்"

 

வண்ணதாசனின் "மழ வில்லுகள்"

_________________________________________

சொற்கீரன்


வண்ணதாசனின் வானவில்லுகள் என்று 

அவருடைய கவிதைச்சில்லுகள் தெறித்த‌

வண்ணங்களை ஒக்காந்து 

"அசைபோடும் குறுக்குத்துறை படிக்கட்டுகளாக்கி 

அமர்ந்து ரசிப்பதே 

இந்த "வண்ணதாசனின் மழவில்லுகள்".

பாருங்கள் நம் மலையாழத்தமிழ் 

வானவில்லை எவ்வளவு

கவிதைத்தனமாய் வருடி வருடி சொல்கிறது

"மழ வில்லு"ன்னு!


___________________________________________________



அந்தக்கடிக்காரததை

குலுக்கி குலுக்கி

உசுரு இருக்காண்ணு 

பார்க்கிறது தான் கவிதை.

ஆத்துத்தண்ணி முழிச்சிட்டுருக்கா

தூங்கிக்கிட்டுருக்காண்ணு

கொள்ளிகாட்டைய வச்சு துப்பறியும்

சீடர்கள்ளாம் இல்ல இவங்க.

காது கூர்மைக்குள்ள‌

ஆயிரம் ஃபேவர்லூபா வாச்சுக‌

இருக்காக்கும் இவங்களுக்கு.

அந்த "காலம்" குலுக்குனதுக்கெல்லாம்

கோவப்படல..

எல.. இவங்களுக்கு எப்டிலெ

காது இவ்வளவு கூர்மைன்னு

தெகச்சுட்டுதுலெ.

இந்த சவத்து மூதி இப்டில்லாம்

எசலும்ணுதான்

நம்ம பயலுவ இப்ப‌

வினாடி முள்ள சொருகி வச்சுருக்காம்லே

வாச்சுக்குள்ளெ.


___________________________________________________________

சொற்கீரன்

ஞாயிறு, 8 மார்ச், 2026

குடமுருட்டி சங்கரன் கோவிலுக்கு..

 

கோமதிகளுக்குள்

வேறு கோமதி

யாராவது இருக்கிறார்களா

என்று

தட்டாமாலை சுற்றும் பேனாவை

எங்கள்

அம்பாசமுத்திரம் 

குடமுருட்டி சங்கரன் கோவிலுக்கு

வரச்சொல்லுங்கள்.

அந்த ஆற்றங்கரை நாகரிகத்தில்

தடுக்கி விழுந்தால் கூட‌

ஒரு கூழாங்கல் சொல்லும்

"என் பெயர் கோமதி" என்று.

தெய்வங்கள் தோன்றிய போதே

அவற்றின் "மகளிர் தெய்வங்களும்"

தலையில் ஒரு

தவ மூட்டை சுமந்து

"தபஸ்'இருக்கவேண்டும்

நல்ல கணவன் கிடைக்க‌

அல்லது

தான் விரும்பிய கணவன் கிடைக்க.

மகளிர் விடுதலைக்கு

தபஸ் இருக்கும் கோமதிகளே

இன்று காண்கிறோம்

அன்றாட அடுப்புக்கூட்டின்

அக்கினிச்சிறகுகளிடையே.

கணிப்பொறியின் உச்சியேறியும்

அங்கு ஒரு "கைலாச மலை"தேடும்

பாசி பிடித்த பார்வைகளில்

சிகப்புச் சூரியன்கள் இடறிய போதும்

கைபேசி கிளுகிளுப்புகள்

சும்மா விடுவதாயில்லை.

ரமேஷ் கண்ணன் அவர்களே

உங்கள் எழுத்து ஊர்வலத்தின்

வீட்டுச்சித்திரங்கள்

வீதி முனை வரை வந்து

எத்தனை புள்ளி கோலம் போடலாம்

என்று அந்த 

சுண்ணாம்புச்சிரட்டையை

வருடிய போது கூட‌

ஞானம் தெறிக்கலாம்...

இந்த சிரட்டைகளில் பெரும் யுகத்தின்

கங்கோத்ரிகள்

கர்ப்பம் தரிக்கலாம் என்று.

__________________________________________

சொற்கீரன்


(முகநூலில் பதிவிட்ட திரு ரமேஷ் கண்ணன் அவர்களின்

கவிதையில் விழுந்த எனது நிழல்.)



யுகப்புரட்சி

 


யுகப்புரட்சி

_______________________________________________

வளைக்கரங்களில்

கிளு கிளுப்பு ஓசைகளை

பதுக்கி வைத்து

காதல் எனும் ஒரு

அக்கினி மூலையை

மறைத்து வைத்திருந்த பெண்ணே!

"மணம்" எனும் மத்தாப்புக்காட்டில்

மகிழ்ந்து 

இல்லம் எனும் அடுப்புக்கூட்டில் நுழைந்தபின்

வந்த இன்னொரு அக்கினிக்காட்டிலும்

உன் சமையல் சாணக்கியத்தால்

ஒப்பற்றதோர் ஆட்சி செய்கிறாய் நீ  என்று

இவர்கள்

எப்போதும் புகழ்ந்து கொண்டிருப்பார்கள்

இன்ப நெருக்கடிகளின்

கொசுக்கடிகள்

எப்போதும் இருவருக்கும்

பொதுவாகவே இருந்தபோதும்

பாசம் எனும் பூரிப்பு

உனக்கு மட்டுமே ஒரு

பொன்முலாம் பூசுகிறது என்றும்

ஆயிரம் இமயத்துச்சுமைகளின்

அற்புத சுமைதாங்கி நீயே என்றும்

இவர்கள்

ஒரு மகுடம் சூட்டுவார்கள்.

பிள்ளைத்தாய்ச்சி எனும்

இந்த மொத்த பிரபஞ்சத்தையும்

உன் மீது ஏற்றிவிட்டு

இவர்கள் மயிற்பீலி கிலு கிலுப்பைகளால்

உன்னை வருடிக்கொண்டிருக்கும்

விளையாட்டுகளை மட்டும்

செய்து கொண்டே இருப்பார்கள்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

நீ

சுமந்த புராணங்களும்

சடங்குக‌ளுமே 

உன் விலங்குகளின் மூட்டைகள் தான்.

இதிலிருந்து 

விடுதலைக்கு

உனக்கு பீரங்கிகள் தேவையில்லை.

அந்த அஞ்சறைப்பெட்டிகள் எல்லாம்

இனி உன் அறிவுப்புயல்களின்

நுண்ணறிவுப் பெட்டகங்கள் ஆகட்டும்.

மானிட மலர்ச்சிக்கு

எந்த விடுதலைப்போர்களும் தேவையில்லை

உனது இந்த‌

அறிவு விழித்த 

யுகப்புரட்சி ஒன்றே போதும்.

பெண்ணே!

உன் கண்ணுக்கு 

மை தீட்டிக்கொள்ளும் முன் உன்

பெண்மைக்கு

அறிவின் ஒளி தீட்டிக்கொள்!

______________________________________________

சொற்கீரன்

சனி, 7 மார்ச், 2026

பூ!

 

மகளிர் தினம்.

__________________________


பூ!

அப்படியே விடுங்களேன்

தனக்கான புயலை

அதுவே வீசிக்கொள்ளட்டும்!

_____________________________

சொற்கீரன்

புதன், 4 மார்ச், 2026

விசில்கள்

 

கனவுகளை

காய்ச்சி வடித்து

குத்து டான்ஸ் 

ஊறுகாயும் 

பஞ்ச் டையலாக்கும்

சேர்த்த சரக்குகளின்

நிழலாட்ட க்கிட்டங்கிகளே


 


சினிமா சினிமா சினிமா.


பொழுது போக்கு 


குடை ராட்டினங்களின்


காதல் காளான் குடைகளின்


நாய்க்குடைகளிலா


உங்கள் லட்சிய நிழல்கள்


கூடு கட்டும்?




நம் அவலங்களின்


நடப்புகளையெல்லாம்


மரக்கடிக்க‌


மறக்கடிக்க


போடும்


போதை ஊசிகள் தான்


மசாலாப்படங்கள்.


அரசியல் எனும் வெளிச்சம் 


படாத 


கொசுக்கிடங்குகளில்


டூயட்டுகள் பாடி


நமக்கு நாமே


அரிதாரம் பூசிக்கொள்வது தான்


சினிமா எனும்


"கச்சா பிலிம்" காடுகள்.


விடியல் தேடி


வாக்கு ஏந்தி வருபவர்களே


கானல் நீர் ஈசல்களே


விழித்தெழுங்கள்.


உதிரப்போகும் உங்கள்


சிறகுகள் மூடி


விசில்கள் எனும் சில்லரைச்


சத்தங்களில்


தோலைந்து போய் விடாதீர்கள்.


அட்டைக்கதாநாயகனா உங்கள்


அடைக்கலம்?


விழித்தெழுங்கள்


______________________________________


சொற்கீரன்


ஞாயிறு, 1 மார்ச், 2026

"மோக முள்ளின்"...

 



ஒரு பெருங்கதையாடல்!

_____________________________________


ஒரு ராமாயணத்தை

இன்னொரு மகாபாரதம் கொண்டு

சப்ளாக்கட்டையை

தட்டி தட்டி 

சுரங்களையும் அசுரங்களையும்

கலந்து பிசைந்து

கதைக்கும் பெருங்கடலா இது?

தெரியவில்லை.

எழுத்தாளர் பவா செல்லத்துரை அவர்கள்

இன்னொரு

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின்

எழுத்துக்களின் 

நாடித்துவாரங்களுக்குள் எல்லாம்

புகுந்து புகுந்து

தும்மல் போட்டு போட்டு

புல்லரித்துக்கொள்வது தான் இது.

இரு கல்லும் மோதி

பொறி பறக்கும்

சிக்கிமுக்கி கல்லாக‌

சிந்தனைகளின்

கற்பனை நிகழ்வுகளின்

உரசல்களையெல்லாம்

தேன் பிழிந்து தருவது தான் இது.

இப்படித்தான்

கும்பகோணம் 

அணைக்தால் தெருவுக்குப் போனால்

"மோக முள்ளின்"

பாபுவும் யமுனாவும்

அங்கே தூசிகளிலும் 

காத்துப்பிழம்பின் நெஞ்சுத்துடிப்புகளிலும்

காதல் கொப்பளிக்காமல்

குமிழிகள் விட்டுக்கொண்டே இருப்பதை

புளகாங்கிதத்துடன்

"பௌராணிகம்" செய்வதும் தான் இது.

பவா செல்லத்துரை

நாவல்களின் 

"லைவ்" நாவல்கள்.

இலக்கு இல்லாத திசைகளையும்

கோர்த்து இலக்கிய அனுபவத்தின்

ஆச்சரியமான திசைகளைக்கொண்டு

அருந்தத் தரும் 

அற்புதக்"குடி"யிருப்பு

பவா செல்லத்துரை அவர்கள்

_____________________________________________

சொற்கீரன்