வெள்ளி, 26 நவம்பர், 2021

வாருங்கள் ஓட்டாளர்களே!

 வாருங்கள் ஓட்டாளர்களே!

________________________________ருத்ரா.


ஓட்டாளர்களே!

இந்திய ஜனநாயகம் 

அதன் தேசியக்கொடியை

மானிட சமநீதி

மானிட நேயம்

சமூக உணர்வு

இவற்றில் பின்னி சுற்றிய‌

ஒரு "தொப்பூள் கொடியில்" தான்

பதியம் இட்டிருக்கிறது.

இதை மறைக்கும் 

மாய மந்திர மூட்டங்களாய்

மத முகமூடி மாட்டிக்கொண்டு

வரும் 

பாரத மாதாவிடம் கேளுங்கள்.

தாயே உன் புத்திரர்கள்

ஒரே வார்ப்பில் உதித்தவர்கள் தானே.

அவர்களுக்கு 

வேற்றுமை வர்ணம் பூசும்

சதிகளின் சாஸ்திரங்களை

உருவாக்கியவர்கள் கையிலா

இந்த நாட்டைத்தருவது?

இந்தக்கேள்விக்கு பதிலாய்

இப்போது அந்த தாயின் கண்களில்

கண்ணீர் வெள்ளம்.

பாரத புத்திரர்களே!

இந்த "பேரிடர்"களை நீங்கள்

கடப்பதற்கு

ஒற்றுமையோடு

ஒரு "நோவா"கப்பல் கட்டுங்கள்.

அதில் இந்த நாட்டு

ஓட்டாளர்களின் சிந்தனைகள்

ஒரு முகமாய் குவிக்கப்படவேண்டும்.

சீறிப்பாயும் ஆதிக்கவெறி பிடித்த‌

அந்த அலைகளை அடக்கவேண்டும்.

அந்த அலைகளை கடக்கவேண்டும்.

அந்த அலைகள மிதித்து

அதன் மீது நடக்கவேண்டும்.

அதோ

மதநல்லிணக்கத்தை அடையாளம் 

காட்டும் புறாக்கள்

சிறகு விரித்து உங்களை

வரவேற்கட்டும்.

பளிங்குகற்கள் அடுக்கி

இவர்கள் கோவில் எழுப்பலாம்.

ஆனால்

அதன் இருட்டுமூலைகளில் தான்

இவர்கள் வௌவ்வால்கள்

பசியோடு 

உங்கள் மீது பாயக்காத்திருக்கின்றன.

அறிவு வெளிச்சம் ஏந்திப் புறப்படுங்கள்.

கணினியின் 

படுகுழியில் விழுவதற்கு முன்

உங்கள் சமதர்மப்பார்வையின்

அல்காரிதத்தை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். 

உங்கள் புதிய யுகத்தின்

"பாஸ் வர்டை" தொலைத்து விடாதீர்கள்.

மானிடத்துச் சமூகநீதியின்

சமத்துவமான சிந்தனைக்கீற்றுகளே

அந்த "பாஸ் வர்ட்".

இது வரை

தோற்பதற்காக ஜெயித்தது போதும்.

இம்முறை

ஜெயிப்பதற்காகவே ஜெயித்துக்காட்டுவோம்

வாருங்கள் ஓட்டாளர்களே!


_____________________________________________________







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக