திங்கள், 20 நவம்பர், 2017

உறுத்தல் இல்லாமல்...

Image may contain: 4 people, people sitting and people eating

உறுத்தல் இல்லாமல்...
==========================================ருத்ரா

அந்த முகத்தேக்கங்களில்
முன்னூறு தேக்கங்களின்
ஏக்கங்கள் அணைகட்ட‌
கண்களின் காட்சிப்பிழம்பில்
கனவுகளின் காட்டுத்தீ
கொளுந்து விட‌
அந்த காலித்தட்டுகள்
கால சரித்திரங்களின்
பக்கங்களை புரட்டி புரட்டி
சமுதாய பிரக்ஞையின்
கூர்  நகங்களால்
நம்மை நார் நாராய்
கிழித்தெறிகின்றன.
காமிராக்களில்
இந்த லாவாக்களை
அடைத்துவைத்து
"போன்சாய்" மரம் போல்
நம் மேஜையில்
வைத்திருக்கிறோம்
கூச்சமில்லாமல்..
உறுத்தல் இல்லாமல்...
மானம் இல்லாமல்..
நம் மனங்கள்
கசாப்பு செய்யப்பட்டு
கூழாகிப்போயின.

========================================ருத்ரா

("தமிழ்ச்சோலை"யில் 21.11.17 அன்று திரு மாதவன் பதிவிட்ட‌
புகைப்படத்துக்கு எழுதிய கவிதை இது.
புகைப்படத்திற்கு நன்றி.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக