வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

தாவன்னா பாண்டியன்

தாவன்னா பாண்டியன்

___________________________________ருத்ரா


இப்படித்தான்

அந்தத் தோழரை

உழைப்பின் உப்புக்கரித்த‌

உதடுகள் உச்சரிக்கும்.

இடதுசாரி சிந்தனையின்

வலதுசாரி பீரங்கியாய் 

இருந்த போதும்

சுரண்டல் ஆதிக்க அரசியலை

சூடு மாறாமல் 

உமிழ்ந்து கொண்டே இருந்தவர்.

அவரது சிறுநீரகமும் கல்லீரலும் கூட‌

செயல் இழக்கும் வரை

தாஸ்கேபிடலை

துடிக்கும் நரம்புகளின் வழியே

சொற்பொழிவு ஆற்றித்தான் 

ஓய்ந்திருக்கும்.

இவர் ஒரு ஆரியப்படை கடக்கவந்த‌

செம்பாண்டியனோ

என நம்மை வியக்க வைத்த‌

சொல்வீரர் செயல் வீரர் எல்லாமும் தான்.

செதுக்கி செதுக்கி 

தத்துவார்த்தக் கூர்மையுடன் 

ஒரு சீரிய வழியுடன் ஓடும் ஆறு போல்

சொற்பெருக்காற்றும் சொற்சிற்பி.

பொது உடைமை தத்துவம்

என்றால் 

அது ஏதோ பிள்ளைபிடிக்கும் காரன்

வைத்திருக்கும் ஊதுகுழல் என்று

அறிவு கழன்ற நம் சமுதாய எந்திரம்

கட கடத்துக்கொண்டிருக்கிறது.

அதன் கடைவாயிலிலிருந்த‌

அடிமைத்தனத்தின் முடைநாற்றம்

நுரை தள்ளுகிறது.

அந்த "பொன்விடியலை"

கிரீடம் செய்து என்றாவது

இந்த மக்கள் சூடிக்கொள்ளவேண்டும்

என்ற 

அந்த கனவின் அடர்த்தி இன்னும்

செறிந்து தான் நிற்கிறது

இவரை நினைவேந்தலில் நாம்

ஏற்றிக்கொண்டபோது.

இந்த நினைவுகள் நம்மிடையே

சாவதில்லை.

கண்ணீர் விட்டு அஞ்சலி செய்து

இவரின் வீரக்கனவுகளை

நாம் மழுங்கடித்துவிட வேண்டாம்.

வாழ்க! வாழ்க!

என்றும் தா.பா நம்மிடையே!


__________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக