செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

தமிழ் வெல்க!

 தமிழ் வெல்க!

_________________________________________ருத்ரா


ஒரு பூ பூக்கிற வழியில் கூட‌

இங்கு பூகம்பங்கள்.

புல் விரிப்புக்குள் படுத்துக்கிடக்கும்

சுநாமிகள்.

ஓட்டுப்பெட்டியை

கணிப்பொறி பிடுங்கிக்கொண்டது.

நம் விரல் தட்டலில்

நழுவி விடும் நம் கனவுகள்.

தேவன்களின் அரிதாரத்தில்

அசுரன்களின் அரியாதனங்கள்.

ஜனநாயகம் எனும் 

கானல் நீரில்

அரக்க நாயகத்தின் அதிரடி

நீச்சல் விளையாட்டுகள்.

தனியாய் ஒரு தமிழ் நாடு

மகுடம் சூட்டிக்கொண்டு

தலை காட்டுவதா?

கோரைப்பற்கள் நற நறக்கின்றன.

ராமா ராமா என்ற கூச்சல்களில்

மக்களின் உயிர்கள் கூளங்கள் ஆகின்றன.

இது என்ன கோரம்?

இன்னும் ஒரு சுதந்திர தாகத்துக்கு

உயிர்கள் கசக்கப்படும் நிகழ்வுகள் 

நம்மை சிதறடித்து விடுமா?

சமக்கிருதம் எனும் 

உச்சரிப்புகளின் நச்சரிப்புகளில்

நைந்து இங்கு வீழ்ந்து போவோம் நாம்

என்றா இந்த வீணர்கள் நினைத்தனர்?

இமயம் அல்ல அது!

தமிழன் "பொறித்த" வில்

விறைத்து நிற்பதே அது.

வெற்றியின் அம்பே நீ

உறைந்து விடாதே!

உயிர்த்தெழு!

தமிழே! எங்கள் உயிரே!

நீயே எங்களை ஆக்குகின்றாய்.

நீயே எங்களை காக்கின்றாய்.

ஒலிக்கின்றோம் கேள்.

தமிழ் வாழ்க!

தமிழ் வெல்க!


___________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக