ஞாயிறு, 31 ஜூலை, 2016

முதுகுக்குப் பின்னே



முதுகுக்குப் பின்னே
==============================================ருத்ரா

நீண்ட நடைபாதை.
தூங்குமூஞ்சி மரங்கள்
இளஞ்சிவப்புப்பஞ்சுப்பூக்களை
பாதையில் துப்பி துப்பி
வைத்திருக்கின்றன.
கால்களில் விரைவு.
கடிகாரமுட்கள் தைத்த தையல் அது.
ஓட்டமும் நடையுமாய்..
சிஸ்டாலிக் டையஸ்டாலிக் சம்மட்டி அடிகள்
முதுகுக்குப் பின்னே
சொறிந்து சொறிந்து விரட்டுகிறது.
கால நீட்சிக்கு
ஒரு எம்டி கொடுத்த ப்ரஸ்கிரிப்ஷன்.
சூரியன் முகத்தில் ஊசி மழை.
வாக்கிங்..
நோயா? மருந்தா?
பசியா?உணவா?
வேர்த்த துளிகள்
தூர் வார இறங்கியிருக்கின்றன.
இடறும் சதுரம் துருத்திய கற்கள்.
எத்தும் குத்துமாய் முளைத்த‌
பற்களைப்போன்ற‌
பாதையிலும்...
நடை நடை..நடைதான்.
கரளை கரளையாய் சதையும் தோலும்
கண்டா முண்டா எலும்புகளுமாய்
வெறி பூசிய கண்ணும் உறுமல்களுமாய்
பனைமரங்கள் உயரத்துக்கு
பிசைந்த அந்த "மாடல்"களை
ஏன் வீசியெறிந்து விட்டது இயற்கை?
ஆனால்
அந்த உறுமல் முதுகுத்தண்டுகளில்
உருகி வழிகிறது.
கர்ர்ரென்று
ஒரு காக்காய் மூஞ்சியில்
சிறகை அடித்து விட்டுப்போகிறது.

===============================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக